உள்ளங்கள் நாட்டியமாடும்

பிரிவால் உருவாகும்
பிளவெனும் வெற்றிடத்தை
நிரப்பிட இயலாது
நினைவுகளின் நீட்சியும் !
இடைவெளி வந்தாலும்
இருவுடல் இடையினில்
நெஞ்சங்கள் பேசிடும்
நெருங்கியே இருந்திடும் !
ஊடலெனும் உயிர்கொல்லி
ஊடுருவிய உள்ளங்களில்
பாடிடும் சோககீதம்
வாட்டிடும் இதயத்தை !
குற்றங்குறை கூறுதல்
குவிந்திடும் அளவின்றி
மாறிமாறிப் பொழியும்
மாரிக்கால மழையாய் !
வேடிக்கை மற்றவர்க்கு
வாடிக்கை அவர்களுக்கு
உடன்பாடு எட்டியதும்
உள்ளங்கள் நாட்டியமாடும் !
பழனி குமார்