மீண்டுவா சிரியா

அண்டமெல்லாம் பிண்டமானாய்..
நாடித் துடிக்க,
நரம்புகள் நொறுங்க,
ரௌத்திரம் பெருக,
மாண்டு கிடக்கிறேன்,
மனது வலிக்குதம்மா!
வல்லமை தாராயோ பராசக்தியே!

காலன் விட்டு வைத்த
மிச்சத்தின் பரிதாபங்கள்
என் மனதை பதைக்கின்றது!

உன் மொழியறியேன்..
உன் உறவறியேன்..
இருப்பினும்
என் இருதயம்
தீப் பிளம்பாக
கொந்தளித்து..
என் கண்களில்
வெண்ணீர் துளிகளாக
நிற்கின்றது!

மானிடப் பேய்களே!
உங்கள் பாவங்களை தொலைக்க..
எத்தனை பிரபஞ்சங்கள்
தோன்றினாலும்..
அங்கு ஊற்றாய்
பொங்கும் நதியில்
புனித நீராடினாலும்..
அது சாம்பலாகவே மாறுமே!

போதும் விட்டு விடுங்கள்..
நாளை இப்படி ஓர்
நிகழ்வை..
பதிவு செய்ய
சில உயிர்களையாவது
மிச்சம் வைய்யுங்கள்!
மீண்டுவா சிரியா !!

எழுதியவர் : மாலதி ரவிசங்கர் (27-Feb-18, 2:24 pm)
சேர்த்தது : மாலதி ரவிசங்கர்
பார்வை : 63

மேலே