காமம்-நித்தியம்-அவலம் ---------------------சங்கப்பலகை அறிவன்
இந்தியாவில் சட்டபூர்வ ஆண்-பெண் உறவுக்கான வயதை மத்திய அரசு 16 லிருந்து 18 ஆக உயர்த்தியதாக சட்டத் திருத்தம் வருகிறது.
அத்தி பூத்தாற்போல் எப்போதாவது அரசு நல்ல ஒரு முடிவை எடுக்கும் தருணங்கள் வரும்;இது அது போன்ற ஒன்று.ஆனால் இதற்கும் ஒரு எதிர்ப்பு வருகிறது.அதாவது இது குழந்தைகள் உரிமையைக் கெடுப்பதாகக் கூறி ஒரு கூட்டம் இதை எதிர்ப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சிறார்களுக்கு காமம் பற்றிய கல்வி இருக்க வேண்டும் என்று பரவலாகப் பலரும் சொல்லிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் காமம் பற்றிய கல்விக்குப் பதிலாக உடற்கூறு பற்றிய கல்விதான் அவசியம் என்பது எனது புரிதல்.இது பற்றி விளக்கமாக ஏற்கனவே நான் இந்தப் பதிவில் எழுதியிருக்கிறேன்.
சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலை என்பது சொல்லாடல் மட்டுமல்ல;அனுபவமும் உண்மையும் கூட.டீன் ஏஜ் எனப்படும பதின்ம வயதுகளில் ஏற்படும் உடற்கூறு மாற்றங்களைப் பற்றிய சரியான அறிவுதான் சிறார்களுக்குத் தேவையே தவிர காமம் பற்றிய அறிவியல்|கலை அறிவு தேவையல்ல;அதெல்லாம் இல்லாமலேயே உடலியல் மாற்றங்களால் காமம் தொடர்பான எந்த விதயத்தையும் தீப்பற்றியது போலப் பற்றிக் கொள்ளும் பருவம்,பதின்ம வயதுகளின் பருவம்.
இந்த நேரங்களில் கிடைத்த எந்த வாய்ப்பிலும் காமம் பற்றிய பரிசோதனைகளில் ஈடுபட உடலும் மனமும் துடிக்கின்ற பருவம் இது;இந்த நேரங்களில் சரியான உடலியல் கல்வியோடு,காமத்திலிருந்து விலகி இருப்பதே நல்ல மன,உடல் வளத்திற்கும்,நலத்திற்கும் சரியானது.
திருமணத்திற்கான முன்பான காமம் ஒத்துக் கொள்ளப் பட வேண்டிய ஒன்று என்ற ஜல்லியடிகள் பெருத்துப் போனதும்,அதற்கான விளைவுகளைப் பெண்கள் மட்டும் சுமக்கும் அவலங்களும்தான் நடக்கிறது.
முற்போக்கானவை என்றும் காமம் பற்றிய கல்வி அவசியம் என்றும் கூவிய எல்லா நாடுகளிலும் இன்று குழந்தைத் தாய்கள் அதிகமானதும் மன முதிர்ச்சி அடைவதற்கு முன்னால் காமமும்,குழந்தைகளும் பெற்று அதோடு விவாகரத்துகளும் பெற்று வாழ்க்கை வெம்பிய சூழலில் வாழும் வாழ்க்கைதான் பெரும்பாலும் கண்ணுக்குத் தெரிகிறது.
எனவேதான் பல வாழ்வு நலன் சிறக்க வழிசொல்லும் பல புத்தகங்களும் ஆக்கங்களும் நமக்கு ஓயாது சொல்லிக் கொண்டிருக்கின்றன.
இந்த சூழலில் மேற்கண்ட சட்டத் திருத்தம் மிகத் தேவையானதும் பாராட்ட வேண்டியதுமான ஒன்று.இதை எதிர்ப்பவர்கள் குழந்தை நலன் தொடர்பான குழு என்று டைம்ஸ் செய்திப் பத்திரிக்கையில் தெரிகிறது;முட்டாள்கள் !!
சிங்கப்பூரின் அரசாண்மை பற்றிய எனக்கு மிகுந்த ஆர்வமும் நுண்பார்வையும் உண்டு;காரணம் சிங்கப்பூரை மறு நிர்மாணம் செய்ய சீனியர் லீ 1950 களின் இறுதியில் முடிவெடுத்த போது,எந்த ஒரு துறையிலும் உலகின் எந்த நாட்டில் அத்துறை மிகச் சிறப்பாக விளங்குகிறதோ அதை மாதிரியாக எடுத்துக் கொண்டு சிங்கப்பூரின் சூழலுக்குத் தகுந்தவாறு அந்த மாதிரியை மாற்றிச் செயல் படுத்தியதாக அவர் எழுதியிருக்கிறார்.
இவ்வாறு கட்டமைக்கப்பட்ட,முன்னேறிய நாடாக அறியப்படும் சிங்கப்பூரிலும் சில கொள்கைகள் இறுக்கமான சட்டங்களுடன் நடைமுறைப்படுத்தப் படுகின்றன.அவற்றில் முக்கியமானவை சட்டரீதியான காமத்திற்கு அனுமதிக்கப் பட்ட வயது 18,மற்றும் குற்றவியலில் சில பெருந்தீங்கான செயல்களுக்கு மரண தண்டனை போன்றவை முக்கியமானவை.சிங்கப்பூருக்கு வரும் பலரும்,'ஆகா,இந்த நாடு அற்புதமாகத் திகழ்கிறது' என்று வியப்பதற்கான கட்டுமானம் இது போன்ற சரியான அரசாண்மையிலும்,தயவு தாட்சன்யமின்றி கடைப்படிக்கப் படும் சட்ட விதிமுறைகளாலும்தான் சாத்தியம் என்பதும் பலர் கண்களுக்குத் தெரிவதில்லை.
இங்கு 18 வயதுக்குட்பட்ட பெண் ஒத்துக் கொண்டு எவருடனாவது உடலுறவு கொண்டால் கூட,சம்பத்தப் பட்ட ஆண்தான் குற்றச் செயல் புரிந்தவராகக் கருதப் பட்டு தண்டிக்கப் படுவார்.இதுவே சரியான பார்வை.
இப்போது ஒரு மாதத்திற்கு முன்னால் கூட சிங்கப்பூரின் புகழ்பெற்ற கட்டுமானத் துறை தொழில் விற்பன்னரின் குடும்பத்தின் வாரிசான ஒரு தொழிலதிபர் இவ்வாறு சிறார்களுடனான காமக் குற்றச் செயலில் பிடிபட்டு வழக்கிற்கு உட்படுத்தப் பட்டிருக்கிறார்.
இந்தியாவில் இவ்வளவு சமூக ஒழுங்கெல்லாம் எதிர்பார்ப்பது துர்பலம்;ஆனால் பதின்ம வயதுக் காமம் தொடர்பில் சமூக ஒழுங்கு பற்றிய ஆக்கப் பூர்வ சிந்தனையில் முதல் படி இந்த வயது வரம்பு உயர்த்திய செயல்.
அதையும் சீரழிக்க ஒரு கூட்டம் கிளம்புகிறது..எப்படி உருப்படுவோம்?!
()