புறாவும் மனிதனும்

புறாவும் மனிதனும்..!
===================


மாடத்தில் மட்டுமே கூடுகட்டி வாழும்
..........மனிதனோடு பழகும் பண்பு கொண்டது..!
ஆடலுடன் பாடலும் செய்யும் அதையே
..........அதிசயித்து நமைப் பார்க்கத் தோன்றும்.!
கூடயிருக்கும் குஞ்சுப் புறாவுக்குத் தன்
..........குரல்வளைச் சேர்த்த உணவு ஊட்டும்..!
ஊடல் கொள்ள இணையாய் ஒன்று
..........உரு வானால் வேறொன்றை நாடாது..!


துணையாய்த் தேடி வந்த சோடியுடன்
..........தன் தலைசாய்த்து வட்டமிட்டு ஆடும்..!
இணையிடும் முட்டையை தன்னல மின்றி
..........இரவுபகல் அடை காக்கும் குணமாம்..!
பிணைக் கைதி போலதனை அடைத்து
..........பின்னர்ச் சோடி பிரித்து பறக்கவிடுவார்.!
கிணற்றுத் தவளைபோல வாழு மதற்குக்
..........கிட்டுமா இனியும் சுதந்திர வாழ்க்கை..!


பந்தயத்தில் பறக்கவிட புறா வளர்ப்போர்
..........பாங்கா யதனைக் காப்பார் பணமாக்க..!
பந்தமென வரும்போது ஒன்றாகக் கூடியே
..........பாங்காகப் பிரித் துண்ணும் தானியத்தை.!
குந்தகமும் ஆபத்தும் நிறைந்த வாழ்வில்
..........குணமுள்ள பறவை யெனப் புகழுண்டு..!
அந்தகனை அடையாளம் காணத் தெரியா
..........அகப்பட்டுக் கொள்வ ததன் விதியோ..!

========================================
வல்லமை படக்கவிதைப் போட்டிக்குச் சமர்ப்பிவிக்கப்பட்டது

நன்றி:: கூகிள் இமேஜ்

எழுதியவர் : பெருவை பார்த்தசாரதி (19-Mar-18, 5:15 pm)
பார்வை : 137

மேலே