மஞ்சள் மயிலே
மஞ்சள் மயிலே
மஞ்சள் மயிலே
மனதில் நீயே கலையாக...
தஞ்சம் கேட்டு
தவிக்கும் நெஞ்சம்
தவத்தில் மூழ்குதே நிலையாக...
ஆடும் மலராய் உன் கால்கள்
அதில் ஆயிரம் நளினம் கண்டேனே..!
ஓடும் நதியில் நீந்தும் மீன்கள்
ஓவிய கண்கள் என்பேனே..!
நவரசம் பேசும் உந்தன் இமையால்
நற்றிணை தமிழை உணர்ந்தேனே..!
நறுமணம் வீசும் தென்றல் காற்றை
நடன அசைவில் நுகர்ந்தேனே..!
ஒருநிறம் கொண்ட வானவில்லாய்
கருநிற புருவம் மிளிர்கிறதே..!
திருமறை வரியின் எழில்போல
இருவரி உதடு ஒளிர்கிறதே..!
தலையில் உள்ள மல்லிகை பூக்கள்
தரிசன அழகே கூட்டியதே..!
இடையின் உடையாய் தொங்கும் நகைகள்
இசையில் வேகம் காட்டியதே..!
தாமரை இதழாய் உந்தன் பாதம்
தரையினில் முத்தம் சேர்கிறதே..!
தங்க சலங்கை தாளம் போட
தகதிமிதா என கேட்கிறதே..!
காதில் தொங்கும் காதணி நடனம்
கவலை கொள்ள வைக்கிறதே..!
காதலி உந்தன் மெல்லிய காது
கனத்தை எப்படி தாங்கிடுமோ..!
பாரில் உள்ள நடனம் எல்லாம்
பரதம் கண்டு வியக்கிறதே..!
பாவை நீயும் காதல் சொல்ல
பாவம் நானும் ஆடணுமோ..!
பாவை நீயும் காதல் சொல்ல
பாவம் நானும் ஆடணுமோ..!