அந்த கால நினைவுகள்
பள்ளிப் பருவத்திலே
பட்டாம்பூச்சி கால்களால்
துள்ளியாடிய நினைவுகள்
தூறல்போடுதே நெஞ்சில்..!
புத்தகப் பையினை
சிலுவையாக சுமந்தாலும்
விடுமுறை நாட்களில்
சிறகுகள் முளைக்குமே..!
வெள்ளிநிலவின் ஒளியினிலே
கூட்டஞ்சோற்றின் சுவைகள்..!
சொல்லிக்கேட்ட கதையெல்லாம்
சொப்பனத்தில் பயணம்..!
அந்திசாயும் தென்றலிலே
ஆட்டம்போட்ட கபடி..!
அதிகாலை ஆதவனோடு
ஆற்றுநீரில் குளியல்..!
பனைமர உச்சியில்
படக்கென்று ஏறியே
தினையளவும் பயமின்றி
திருடிய நுங்குகள்..!
மழைவரும் நேரத்தில்
மறக்காமல் நனைந்து
அடுத்தநாளில் காய்ச்சலில்
அழகான விடுமுறை..!
எருமையின் முதுகினிலே
எமனாக அமர்ந்துகொண்டு
பொறுமையாய் பயணித்த
பொன்மாலை பொழுதுகள்..!
துள்ளியாடிய நினைவெல்லாம்
தூறல்போடுது கண்ணில்..!
துளிர்விடும் ஞாபகத்தால்
தூய்மையாகும் நெஞ்சம்..!