வீரபாண்டிய கட்டபொம்மன் கவிஞர் இரா இரவி

வீரபாண்டிய கட்டபொம்மன்!

கவிஞர் இரா. இரவி

எதற்கடா வரி என்று தட்டிக் கேட்டான் அன்று
எதற்கு எடுத்தாலும் வரி என்றானது இன்று!



வணிகம் செய்ய வந்தவன் வரி கேட்பதா? என்றான் அன்று
வணிகம் செய்ய முடியாத நிலை நமக்கே வந்தது இன்று!



வெளிநாட்டுக்காரன் எம்மை ஆள்வதா? என்றான் அன்று
வெளிநாட்டுக்காரன் தான் நம்மை ஆள்கிறான் இன்று!



பரங்கியரை ஓட ஓட விரட்டினான் கட்டப்பொம்மன் அன்று
பரங்கியரின் பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளை இன்று!



இங்கிலாந்துக்காரன் தான் ஆதிக்கம் புரிந்தான் அன்று
எவன் எவனோ பன்னாட்டான் ஆதிக்கம் புரிகிறான் இன்று!



கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்தான் எட்டப்பன் அன்று
எட்டப்பன் வழியில் வந்த துரோகிகள் மலிந்தனர் இன்று!



விடுதலைக்காகத் தான் வீரமுழக்கமிட்டான் அன்று
விடுதலை இன்னும் கிடைத்தபாடில்லை இன்று!



நான் என்ன உண்ண வேண்டும் என்பதை
நான் முடிவு செய்ய வேண்டும் அவர்கள் முடிவு செய்கிறார்கள்!



நான் என்ன படிக்க வேண்டும் என்பதை
நான் முடிவு செய்ய வேண்டும் அவர்கள் முடிவெடுக்கின்றனர்!



எந்தப் பள்ளியில் படிக்க வேண்டும் என்பது

என்னுடைய உரிமை நீ யாரடா முடிவெடுக்க!



எந்த மொழி படிக்க வேண்டும் என்பதை

என் முடிவாக விட்டு விடு நீ யாரடா முடிவெடுக்க!



கடவுளை வணங்குவதும் மறுப்பதும் என் விருப்பம்
கடவுளை என்னிடம் வற்புறுத்தி வருகின்றனர் !



சல்லிக்கட்டு நடத்துவது எங்கள் உரிமை
டில்லி அதனை தடுத்துப் பார்த்து தோற்றுப் போனது!



ஆதிக்கம் எந்த வடிவில் வந்தாலும் எதிர்ப்போம்
அடிமை அல்ல நாங்கள் ஆண்ட பரம்பரை நாங்கள்!





வெள்ளையனை விரட்டியது போலவே நாட்டில்

கொள்ளையர்களை விரட்டும் நேரம் வந்தது!



வீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் போலவே
வீர முழக்கமிட்டு வெற்றி நடை போடுவோம் !

எழுதியவர் : கவிஞர் இரா. இரவி (25-Apr-18, 6:56 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 89

மேலே