ஸ்ரீ உத்தர சிதம்பரம் நடராஜர் திருக்கோயில் தல வரலாறு சதாரா, கிருஷ்ணா நகர், சதாரா - 415 003 மகாராஷ்டிரா மாநிலம்

"ஸ்ரீ சிவகாம சுந்தரிஅம்பாள் சமேத ஸ்ரீ ஆனந்த நடராஜ சுவாமியை நம:"

ஸ்ரீ உத்தர சிதம்பரம் நடராஜர்திருக்கோயில் மகாராஷ்டிராவில் உள்ள சதாரா மாவட்டத்தில் அமைந்துள்ளது. அதைச் சுற்றி ஏழு (SAT) மலைகள் (TARAS) அமைந்துள்ளதால் இப்பெயர் பெற்றது. சதாராவில் புனித நதிகளான கிருஷ்ணாவும் வெண்ணாறும் சங்கமிக்கும் இடத்தில் 1985ஆம் ஆண்டு தென் இந்தியாவில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோயிலைப் பிரதிபலிக்கும் வகையில் ‘‘ஸ்ரீ உத்தர சிதம்பரம் நடராஜர் திருக்கோயில்’’ கட்டப்பட்டுள்ளது.

கோவில் அடித்தளம் மே 1981இல் நல்ல நாளில் பதிக்கப்பட்டது. மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா பிரதேசம் மற்றும் தமிழ்நாடு அரசாங்கங்கள் நிதி உதவியையும் மற்றும் கேரளா அரசு கொடிக்கம்பம் உட்பட கட்டுமானப் பணிக்குத் தேவையான உயர்தர மரப்பலகைகள் அனைத்தையும் அளித்தன. மகாசுவாமிகளின் கருணையாலும் மனித நேயம் மிக்கவர்கள் வாரி வழங்கிய நன்கொடைகளாலும் நடராஜர் திருக்கோயில் (கோபுரங்கள் மற்றும் தெய்வ சன்னிதானங்கள் அனைத்தும்) கம்பீரமான தோற்றத்துடன் தமிழ் நாட்டுக் கோயிலின் அசல் பிரதியாக, அளவில் மிகவும் சிறிதாக இருந்தாலும், மூன்று ஆண்டுகளுக்குள் கட்டப்பட்டு சதாராவின் புகழைப் பரப்பியது.

ஸ்ரீ ஆனந்த நடராஜர், தர்மபத்தினி. ஸ்ரீ சிவகாம சுந்தரி இவர்களின் அருளினாலும், மகாசுவாமிஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஆசியினாலும் மற்றும் முன்னாள் ஸ்ரீ கே.ஷாமன்னா ஷன்பக் அவர்கள் அளித்த விலைமதிப்பற்ற பேராதரவினாலும் பக்த பெருமக்களின் நேசக்கரங்கள் அளித்த உதவிகளாலும் ஸ்ரீ உத்திர சிதம்பரம் நடராஜர் திருக்கோயில் நிர்மாணம் செய்யப்பட்டது. 1985ஆம் ஆண்டில் ஜூன் 9ம் நாள் ஏனைய தெய்வங்களின் உருவச்சிலைகளின் பிராணப்ரதிஷ்டை செய்யப்பட்டன. மகாஸ்வாமிகளின் 91ஆம் வயதில் அவர் விருப்பப்படி காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் திருக்கரங்களால் செய்விக்கப்பட்டு, கும்பாபிஷேஹம் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

இக்கோயில் தமிழகத்தில் உள்ள சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலின் நகலாக மகாராஷ்ட்ராவில் புனித நதிகளான கிருஷ்ணாவும் வெண்ணாறும் சங்கமிக்கும் இடமும் மற்றும் மிக முக்கியத்துவம் பெற்ற மாவீரர் சத்தியபதி சிவாஜியின் பிறந்த பூமியும் சாது சமர்த்தர் இராமதாசர் சமாதி உள்ள சஜ்ஜின்கார்டுக்கு அருகாமையிலும் உள்ள சதாராவில் உள்ளது.

ஸ்ரீ நடராஜர் ஆலயம் காஞ்சி காமகோடி பீட நிர்வாகத்தின் கீழ் பொதுமக்கள் அறக்கட்டளை எனும் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அறக்கட்டளை, நேசமிக்க பக்தர்களின் ஒத்துழைப்புடனும் ஆதரவுடனும் சுதந்திரமாகக் கோயிலின் நிகழ்வுகளைக் கவனித்து வருகிறது.
ஸ்ரீ நடராஜப் பெருமான் திருக்கோயில் மகிழ்ச்சிகரமாக தனது ஆன்மீக சேவை செய்து 25 வருடங்களை முடித்து வெற்றிகரமாக வெள்ளி விழாவினைக் குதூகலமாகக் கொண்டாடியது. வேத பாராயணம், வேத சம்ஸ்க்ருத பாடசாலை, வேத விற்பன்னர்களின் மத சார்பான போதனைகளின் பிரசங்கங்கள், இசை மற்றும் பக்திரசம் நிறைந்த கலை நிகழ்ச்சிகள், அன்னதானம், கோசாலை ஆகியவற்றிற்கானக் கூடங்களை நிறுவியதோடு மட்டுமல்லாமல் மகாபிஷேகங்கள், ரதோற்சவம், அந்தந்த பருவ காலத்தில் இடம்பெற வேண்டிய திருவிழாக்கள், விளையாட்டு நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் பணி ஆகிய செயல்பாடுகளையும் நிர்வாகம் செவ்வனே நடத்தி வருகிறது.

அறங்காவலர்கள், ஆன்மிகம் மற்றும் சமுதாய நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை அமுல்படுத்துவதன் மூலம் பக்தர்கள் பலனடைய வழிவகுப்பதோடு மத விழிப்புணர்வையும் தெய்வீகத் தன்மையையும் அவர்களிடையே பரப்பி வருகின்றனர்.
ஸ்ரீ நடராஜர் திருக்கோயில் பிரசித்திப் பெற்றுள்ளதோடு மட்டுமின்றி இலட்சக் கணக்கான பக்தர்களும் யாத்திரிகர்களும் ஸ்ரீ நடராஜப் பெருமான், ஸ்ரீ சிவகாம சுந்தரி அம்பாள் மற்றுமுள்ள ஸ்ரீமஹாகணபதி, ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ ராதா கிருஷ்ணன், ஸ்ரீ மூலநாதேஸ்வரர் & உமாதேவி, நவக்கிரகங்கள், ஐயப்பன் ஆகியோரைத் தரிசனம் செய்து அவர்கள் அருளைப் பெறுவதற்கும் மகாசுவாமி சந்திரசேகரேந்திர சுவாமிகளின் பாத ரக்ஷைகளுக்கு / பாதுகைகளுக்கு மரியாதை கலந்த வணக்கங்களை அர்ப்பணம் செய்வதற்கும் நம் தேசத்தின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் வருகை தருகின்றனர்.

திருக்கோயில் அமைவிடம்:
சதாரா மாவட்டம், மகாராஷ்டிரா மாநிலம்.

திருக்கோயிலின் அமைப்பு:
இத்திருக்கோயில் சுமார் 2 1/2 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. நான்கு திசைகளிலும் நுழைவாயில் கோபுரங்கள் அமைந்துள்ளன. திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள மூலவர் மற்றும் அம்பிகையின் பெயர்கள்.
மூலவர் : ஸ்ரீ ஆனந்த நடராஜர்
அம்பிகை : ஸ்ரீசிவகாம சுந்தரி.
தல விநாயகர் : சித்தி விநாயகர்.
திருக்கோயிலின் தலமரம் : அரச மரம்.
திருக்கோயிலின் தலதீர்த்தம் : கிருஷ்ணா & வெண்ணாறு.

திருக்கோயிலினுள் நடைபெறும் பூஜைகளின் விவரம்:
அனைத்து பூஜைகளும் சிறப்பாக நடைபெறுகின்றன.
நாள்தோறும் பூஜைகள் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் இரவு 7:45 மணி வரையிலும் நடைபெறுகின்றன.

ஸ்ரீநடராஜர் அபிஷேகங்கள்:
ஸ்ரீநடராஜ பெருமானுக்கு ஓராண்டில் ஆறுநாட்கள் அபிஷேக(டே)கம் நடைபெறுகின்றன.
1. சித்திரை மாதம் திருவோண நட்சத்திரத்தில் கனக சபையில் மாலையில் அபிஷேகம்.
2. ஆனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தில் உதயத்திற்கு முன் 4 மணிக்கு அபிஷேகம்.
3. ஆவணி மாதத்தில் பூர்வபட்ச சதுர்தசியில் மாலையில் அபிஷேகம்.
4. புரட்டாசி மாதத்தில் பூர்வபட்ச சதுர்தசியில் மாலையில் அபிஷேகம்.
5. மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தில் உதயத்திற்கு முன் 4 மணிக்கு அபிஷேகம்
6. மாசி மாதத்தில் பூர்வபட்ச சதுர்தசியில் மாலையில் அபிஷேகம்.

திருவிழாக்கள்:
நடராஜ மூர்த்திக்கு ஆண்டுதோறும் மார்கழி மாதம் திருவாதிரை நன்னாளை முன்னிட்டு 5 நாட்களுக்குப் பெருவிழா நடைபெறுகின்றது. திருவாதிரை 5 நாட்கள் 4 வேதங்களும் உத்ஸவத்தை முன்னிட்டு பாராயணம் செய்யப்படுகின்றன.

வருடாந்திர விழாக்களான, சித்திரை முதல் பங்குனி முடிய பன்னிரு மாதங்களில் மாதப்பிறப்பு, 2 பிரதோஷம், திருவாதிரை, அமாவாசை, பௌர்ணமி ஆகிய நாட்களில் இரவில் உற்சவம் நடைபெறும்.

சிவராத்திரியை முன்னிட்டு மாஹாருத்ரம் நடைபெற்று வருகிறது. சிவராத்திரிக்கு இரு நாட்களுக்கு முன்னர், 121 வைதிக வேத விற்பன்னர்களால் 121 கலசங்களில் தல தீர்த்தத்தை நிரப்பி மஹன்யாஸ ஆவாஹனம் 1 1/2 மணி நேரம் செய்வித்துப் பின்னர் 11 முறை ருத்ர ஜெபத்தை பாராயணம் செய்வர். சிவராத்திரி அன்று 12 வைதிக வேத விற்பன்னர்களால் ருத்ர ஹோமம் நடத்தப்படுகிறது. பின்னர் 121 கலசங்களில் ஆவாஹனம் செய்விக்கப்பட்ட புனித நீரை மூலவர்க்கு அபிஷேகம் செய்வார்கள். இவ்வைபவங்கள் கண்ணுக்கும் கருத்துக்கும் செவிக்கும் இன்பமும் புத்துணர்ச்சியும் தருவனவாக அமையும்.

இக்கோயில் வளாகத்தினுள் அமைந்துள்ள பிற சன்னதிகள்:
ஸ்ரீசித்தி விநாயகர் சன்னதி.
ஸ்ரீ ராதா&கிருஷ்ணர் சன்னதி
ஸ்ரீமூலநாதர் சன்னதி
ஸ்ரீஉமையபார்வதி சன்னதி
ஸ்ரீஆதிசங்கராச்சாரியாரின் சன்னதி
ஸ்ரீ அய்யப்ப சுவாமி சன்னதி
ஸ்ரீநவக்கிரஹ சன்னதி
ஸ்ரீதிருமுக சண்டிகேஸ்வரி சன்னதி
ஸ்ரீஆஞ்சனேயர் சன்னதி

திருக்கோயில் பராமரிப்பு விவரம்:
நன்றாக பராமரிக்கப்படுகின்றது.

திருக்கோயில் நிர்வாகம் குறித்த விவரம்:
ஸ்ரீநடராஜர் ஆலயம் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீட நிர்வாகத்தின் கீழ் பொதுமக்கள் அறக்கட்டளை எனும் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அறக்கட்டளை நேசமிக்க பக்தர்களின் ஒத்துழைப்புடனும் ஆதரவுடனும் சுதந்திரமாகக் கோயிலின் நிகழ்வுகளைக் கவனித்து வருகிறது.

கோயில் அமைவிடம்:
நெடுஞ்சாலை NH4 இணைக்கும் சதாரா மற்றும் கோலாப்பூர் மார்க்கத்தில் அமைந்துள்ளது.

வரம்பு: சதாராவிற்கு தொலைவு:
சாங்கிலியில் இருந்து 110 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது
கோலாப்பூரில் இருந்து 128 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது
பூனாவில் இருந்து 110 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது
மும்பையில் இருந்து 260 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

சதாரா அடையும் வழிமார்க்கம்:
சாலைமூலம் :
NH4 நெடுஞ்சாலை; எம் எஸ் ஆர் டி சி சதாரா மும்பை, பூனா ஆகியவற்றில் இருந்து நகரங்களுக்கு இடையிலான பஸ் சேவை இயங்கும்.

புகைவண்டி மூலம் :
சதாரா இரயில் நிலையம்: சதாரா எக்ஸ்பிரஸ் இரயில்கள் மூலம் அகமதாபாத், பெங்களூர், மைசூர், பரோடா, சூரத், தில்லி, மும்பை, பூனா, நாக்பூர், சங்கிலி, மிராஜ் மற்றும் கோவா இணைக்கப்பட்டுள்ளது.



1933 சிதம்பரத்திற்கு வெளியே மற்றொரு நடராஜர் ஆலயம் அமைக்க வேண்டும் எனும் தெய்வீகப் பார்வையை பெறுகிறார்.
1979 ஐந்து சகாபதங்களுக்குப் பின்னர், மகாசுவாமிகள் அவரது தொலை நோக்குப் பார்வையில் கண்ட காட்சியினை நிறைவேற்றினார்.
1980 ஜூலை ‘‘ஸ்ரீ மகாசுவாமிகள் விஷ்ராம்க்ருஹா’’ கட்டப்பட்டது.
1980 அக்டோபர் 19 திருக்கோவிலின் தளத்தின் பூமிபூஜை இடம்பெற்றது.
1983 ஏப்ரல் : விதி ஷாமன்னாவை இழக்கச் செய்தது.
1985 ஜுன் 9 மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.
1989 மார்ச் : மஹாசிவராத்திரி நாட்டியாஞ்சலி மகோற்சவம் அறிமுகம்
1990 ஜூன் : தவஜஸ்தம்பம் (கொடிக்கம்பம்) பிரதிஷ்டாபனம்.
1991நவம்பர் : ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வருகை.
1993 அக்டோபர்: ஸ்ரீ ஆனந்த நடராஜரின் ஆனந்த நடனக் கலையின் அம்சமான 108 காரணங்களும் சிற்ப சாஸ்திர முறைப்படி செதுக்கப்பட்டன.
1994 ஜனவரி : மகாசுவாமிகளின் பாதுகை ஸ்தாபனம் செய்யப்பட்டது
1997 ஜனவரி : பிரவேஷ்திவார் திறப்பு விழா இடம் பெற்றது.
1997 ஜூலை : சங்கரா ஹால் கட்டுமானப்பணி நிறைவுபெற்றது.
2000 டிசம்பர் : ஸ்ரீ ஐயப்பன் மந்திர் பூமிபூஜை நடைபெற்றது.
2001 ஜூலை : சுவாமி ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
2003 ஜனவரி 27 மறுசீரமைப்பு மற்றும் இரண்டாவது மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.
2003ஆம் ஆண்டு முதல் ரதோற்சவம் ஆருத்ரா (திருவாதிரை) நட்சத்திரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
2007 ஜனவரி : குடிநீர் தொட்டி திறப்புவிழா இடம் பெற்றது.
2009 ஜனவரி : ரிக்வேதம் ஜடபாராயணம் நடைபெற்றது.
2009 டிசம்பர்: நடராஜ கலாகிரீட சன்ஸ்க்ருதிக் பிரதிஷ்தான் துவக்கம்.
2010 பிப்ரவரி : அதிருத்ர மற்றும் சதசண்டி யக்ஞம் நடைபெற்றது.
வெள்ளிவிழாக் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன.
2010 பிப்ரவரி 1: ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி கலாமந்திர் துவங்கப்பட்டது.
2010 பிப்ரவரி 12 : கோசாலை நிர்மாணிக்கப்பட்டது.
2010 அக்டோபர் : பாகவத சப்தாஹம் ஆரம்பிக்கப்பட்டது.
2011 பிப்ரவரி: இணையதளத்தைத் துவக்கியது.


இம்மீச் சிறுத் தகவல் தொகுப்பினை வரிவடிவில் படைக்கும் வாய்ப்பினை எனது 60ஆம் வயது முடியும் தருவாயில் நல்கிய எல்லாம் வல்ல நடராஜப் பெருமானின் திருவருளுக்கும் ஜகத்குரு மகாசுவாமிகளின் பாதார விந்தங்களைப் பணிவன்புடன் வணங்கி நடராஜ பெருமானின் திருப்பாதக் கமலங்களில் அர்ப்பணம் செய்கிறேன்.

பத்தராய் பணிவார்கள் எல்லாருக்கும் அடியேன்
பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்
சித்தத்தை சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்
திருவாரூப் பிறந்தார்கள் எல்லாருக்கும் அடியேன்
முப்போதும் திருமேனி தீண்டுவார்க்கு அடியேன்
முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்
அப்பாலும் அடிசார்ந்தார் அடியார்க்கும் அடியேன்
ஆரூரன் ஆரூடின் அம்மானுக்கும் ஆளே!!

முனைவர் வெ.வசந்தா.

எழுதியவர் : முனைவர்.வெ.வசந்தா. (2-May-18, 9:37 pm)
சேர்த்தது : vasantham52
பார்வை : 147

சிறந்த கட்டுரைகள்

மேலே