உன்னால் வாழ்கிறேன்

என்னை உன்னுள் புகுத்திக்கொண்டாய்
என்னை முழுமையாக உணர்ந்துகொண்டாய்
என்னை அச்சுறுத்தி அழவைத்தாய்
என்னை அனைத்து ஆறுதல் அளித்தாய்
என்னை மறந்து புன்னகைக்கச்செய்தாய்
என்னை விட என் தேவைகளை கேட்காமலே நிறைவேற்றினாய்
உன்னோடு இருக்கும் போது நான் சாதனையை சந்திக்கிறேன்

தோல்வியும் துன்பமும் கொடுக்கும் வலியையும்
அதிலிருந்து வெளிவரும் வழியையும்
வெற்றியும் இன்பமும் அளிக்கும் களிப்பையும்
அதை அடையும் பாதையையும் தந்தாய்
என் வலி வேதனை, சிரிப்பு, கண்ணீர், காதல், நாணம், கோபம் - என
என் அனைத்து உணர்வுகளையும் அறிந்தவன் நீ.

உன்னிடம் மட்டுமே எவ்வித தயக்கமும் இன்றி வெளிவரும் என் ஆசைகள்.
உன்னிடம் மட்டுமே நான் நானாக இருக்கிறேன்
என்னை என்போலவே நீ ஏற்கிறாய்
பிறரிடமும் நீ இவ்வாறே இருக்கிறாய்
அதுவே உன் இயல்பு என்பதை அறிந்தும்
பொறாமை கொள்ள இயலவில்லை
என்னை நீ ஏமாற்றி, சீண்டி அழச்செய்த போதும்
கோபம் கொள்ள இயலவில்லை

நீ எனக்கு மட்டும் சொந்தமானவன் அல்ல என்பதை நான் ஏற்கத்தான் வேண்டும்
ஆனால் என் வாழ்நாள் வரை நீ என்னுடன் இருப்பாய் என்பதும் -
உன்னால் சொல்லப்படாத உண்மை

எது எப்படியோ நீ என்னோடு இருப்பாய்
ஆனால் எனக்காக மட்டும் அல்ல
இரவின் தனிமையில் மட்டும் என்னிடம் வரும்
உன்னிடம் கேட்கிறேன்
கனவே கள்வனே
காலம் முழுவதும் என்னோடு இரு
நித்தமும் கனவில் என்னை கரைத்திட செய்.

எழுதியவர் : ஸ்ரீ (9-Jun-18, 9:48 am)
சேர்த்தது : ஸ்ரீஷா
Tanglish : unnaal vaazhkiren
பார்வை : 524

மேலே