புலனத்தால் பயனில்லை-படக்கவிதை

படக்கவிதை
==============

புலனத்தால் பயனில்லை
===================

அலங்காரம் செய்து கொண்டு
..........ஆருக்கும் தெரியா வண்ணம்
புலனத்துள் முகத்தைப் புதைத்து
..........பொழுதுகளை இழந்த பெண்ணே.!
சலனமேதும் இல்லா மலேயே
..........சத்தமின்றிச் செய்வ தென்ன
பலனேதும் இல்லாப் புலனம்
..........படுகுழியில் தள்ளும் உன்னை.!

உலகத்தில் எல்லா இடமும்
..........ஒரிடத்தை விடாது சுற்றி
கலகத்தைச் செய்து குழப்பம்
..........கண்டபடி உண்டு செய்யும்.!
இலகுவாக இதிலே இருந்து
..........இட்டபடி விலக முடியா
உலகறிவு பெறவும் இதிலே
..........ஒன்றுக்கும் உபயோ கமிலை.!

இடித்துரைத்தும் கேட்கா வயது
..........இந்தநிலை தவிர்க்க வேண்டும்.!
துடிக்கின்ற இளம் பருவம்
..........துள்ளாமல் இருக்க வேண்டும்.!
படிக்கின்ற வயதில் திருட்டுப்
..........புத்திகூட வேணாம் பெண்ணே.!
படிக்காத பொழுதில் காதல்
..........பக்கத்தில் நெருங்க விடாதே.!
================================
அறுசீர் ஆசிரிய விருத்தம்

எழுதியவர் : பெருவை பார்த்தசாரதி (20-Aug-18, 11:38 am)
பார்வை : 67

மேலே