பூக்களே விழி திறவாய்---பாடல்---

சொந்த மெட்டில் :

பல்லவி :

பூக்களே விழி திறந்து விடு
உன் புன்னகையில் உயிர் பூக்கிறது...
மூங்கிலே வலி மறந்து விடு
உன் இன்னிசையில் உயிர் வாழ்கிறது...

வேள்வியாய் நீ எழுந்திடு
வேதனை அதில் எரிந்திடும்...
கேள்வியாய் தினம் பிறந்திடு
சோதனை அதில் விலகிடும்...

காயமும் உன்னுள்ளே... தாயமும் உன்னுள்ளே...

காயமாய் நீ இருந்தால்
தோல்வியே உனை நெருங்கிடும்...
தாயமாய் நீ விழுந்தால்
வெற்றியே உனை தழுவிடும்......
பூக்களே......


சரணம் 1 :

உறக்கம் என்பதோ?...
வரும் இருளைப் போல தான்...
விழிக்க மறந்தால்...
விடியல் போகும் தூரம் தான்...

முயற்சி என்பதோ?...
உன் மூச்சைப் போல தான்...
முடங்கி கிடந்தால்...
முடிந்து போகும் வாழ்வு தான்...

பூவோடு தான் விச முள்ளிருக்கும்...
பூவோடு தான் சுவை கள்ளிருக்கும்...
நீ உணர்ந்து செல்லும் பாதையிலே
இரண்டில் ஒன்று உனக்கு இருக்கும்...
நீ உணர்ந்து செல்லும் பாதையிலே
இரண்டில் ஒன்று உனக்கு இருக்கும்......
பூக்களே......


சரணம் 2 :

தடைகள் வருவதோ?...
உன் துணிவைப் பார்க்க தான்...
உடைத்து நடந்தால்...
கடந்து செல்வாய் வானம் தான்...

வருத்தும் துன்பமோ?...
கொடும் நோயைப் போல தான்
அறுத்து எரிந்தால்
உலகை வெல்வாய் நீயும் தான்...

வானோடு தான் சுடும் கதிரிருக்கும்...
மீனோடு தான் குளிர் நிலவிருக்கும்...
நீ புரிந்து கொள்ளும் போதுதான்
இரண்டில் ஒன்று உனை அணைக்கும்...
நீ புரிந்து கொள்ளும் போதுதான்
இரண்டில் ஒன்று உனை அணைக்கும்......
பூக்களே......

எழுதியவர் : இதயம் விஜய் (21-Aug-18, 12:36 pm)
சேர்த்தது : இதயம் விஜய்
பார்வை : 443

சிறந்த கவிதைகள்

மேலே