வாராதோ காவிரி---கும்மிச்சிந்து---

கும்மிச்சிந்து :

தேர்தலுக் காய்வேசம் போடுது கட்சிகள்
தேகங்கொ திக்குது காப்பது யார்...
தீர்ப்பதை ஏற்பதாய்ச் சொல்லியே இன்றதைத்
தேநீராய் ஆறவைத் தூற்றுது பார்...

தேர்வெழு தும்பிள்ளை கட்கேட்குஞ் சந்தேகம்
தேசிய கட்சிக்கு வந்ததைப் பார்...
பார்வைக்குப் பூங்கொடி ஆடுதற் போல்நின்று
பாம்பென நஞ்சையே கக்குது பார்...

நற்கருத் தால்நமை ஏமாற்றஞ் செய்யவே
நாற்றத்தை நாக்கினிற் கொண்டவ ரோ?...
மற்றவ ரைக்குற்றஞ் சொல்லயோ சிக்காது
மக்கட்கு றைநீக்க யோசிப்பா ரோ?...

கற்றவர் கூடுஞ்ச பைதனிற் சத்தமாய்க்
கத்துவார் பொய்யொன்றை மெய்யாக்கி யே...
கொற்றவன் வாளுக்குக் கொல்வதே வேலையிக்
கூட்டத்தின் திட்டமு மந்நிலை யே...

கேட்காமல் நன்மையென் றேதீமை செய்தெமைக்
கீரைத்தண் டாய்க்கிள்ளித் தான்செல்கின் றீர்...
கேட்பதைத் தந்திட ஏன்தான்ம றுக்கின்றீர்
கேட்டிட நற்தலை மையிலை யே...

காவிரி வாராதோ?... காத்திருந் தேநித்தம்
காய்நில மன்னவாழ்க் கைமாறு தே...
பூவிழந் தேவாடும் பெண்மையின் பாரத்தைப்
போக்காது தூக்கியே வைக்கின்ற தே...

எழுதியவர் : இதயம் விஜய் (22-Aug-18, 10:06 am)
பார்வை : 1027

மேலே