வறுமை
வறுமை
ஊரார் வெறுக்கும் வறுமையே
வா வாரி முத்தமிடுகிறேன்
உன்னை பார்த்த போதுதான்
நான் புனிதம் அடைந்தேன்
உன் சந்திப்பில்தான்
என் நம்பிக்கை ஆயுதம்
பசி சம்மட்டியால் கூர்மைப்பட்டது
உன்சமரசத்தில்தான்
என் சாலையோர சகோதரனின்
வலி உணர்ந்தேன்
பட்டினியோடு படுத்த போதுதான்
என் பார்வை விசாலப்பட்டது
உடனிருந்தோரின் உண்மை முகம்
காண நீதானே பாலம் அமைத்தாய்
உணவின்றி உறங்கிய போதுதான்
என் கனவுகளின் நிறங்கள்
புதுமை பெற்றது
உன்னுள் நிலைத்தபோது
என்னுடலுக்கன்றி
உணர்வுக்கு உணவு கிடைத்தது
அதன் விளைவே இக்காகிதத்தில்
கவிதை வந்தது
இத்துணை வரம் கொண்ட உன்னை
ஊரார் வெறுப்பது விந்தையானது