காகித ஓடம்

#காகித ஓடம்..!

வெள்ளையனின் ஆதிக்கத்தில் அன்றோ
இந்தியாவும் கொள்ளை போனதென்றோ
வாணிபம்தான் செய்திடவே வந்தான்
வந்தேறி நம்மை அடிமை என்றான் …!

நம்மண்ணில் வாணிபங்கள் செய்தான்
வந்தவன்தான் உரிமைகளைக் கொய்தான்
பறி போன சுதந்திரங்கள் கண்டு - எதிர் குரலெழுப்பி மாண்ட உயிர்களுண்டு..!

மக்கள் படும் அவதிகளைக் கண்டு
போராடினரே தலைவர்களும் அன்று
சுதேசி கப்பல் விட்டு கண்டோம் இன்பம்
வ.உ.சி. தானே அன்று கண்ட தெய்வம்..!

போராடி கப்பல்விட்டு மகிழ்ந்தோம் - இன்று
போராட்ட பயணத்திலே கவிழ்ந்தோம்
கரை சேர்க்கும் கப்பல் என்று நினைத்தோம்
கறை
படிந்தகப்பல் காகிதத்தில் உணர்ந்தோம்..!

தவிக்க விட்டு கப்பல் கடல் நடுவில்
தத்தி கரை சேர்திடு மாவிரைவில் - விரல்
கண்ட மையும் இராகு கால வேளை எண்ணிக்கசந்து தள்ளுகிறோம் நாளை..!

காசுக்கென வாக்கினையே விற்றோம்
மாசுமக்கள் ஆட்சிகொள்ள தோற்றோம்
தூசு கண்ணில் ஏந்தி என்றும் தவிப்பில்
நாசமென்றும் நாடாளும் போக்கில்..!

காகிதத்தில் செய்த ஓடம் மூழ்கும்
ஜீவிதங்கள் நித்தம் நித்தம் மாளும்
காலங்களை மாற்ற வேணும் நாமும்
இல்லையெனில் நெற்றி காணும் நாமம்..!

துயரங்களில் மூழ்கும் நாளும்நாடும்
கரைசேர்க்கும் கப்பல் காணவேண்டும்
தேக்குமர தோணியென தலைவன் - நமக்கு
பார்த்தனுப்ப வேனுமந்த இறைவன்..!

#சொ.சாந்தி

🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀
நேற்று 01-09-18 அருந்தமிழ் கலை இலக்கிய மன்றத்தில் வாசித்த கவிதை. தலைப்பினையும் வாசிக்கும் வாய்ப்பினையும்
அளித்த திரு கனல் மணி சார் அவர்களுக்கும், திரு துருவன் சார் அவர்களிக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்..🙏🙏

நிகழ்ச்சியில் ஏழை மாணவிக்கு சீருடையை வழங்கினார் திரு கணல்மணி சார் அவர்கள்.ஏழை மாணவர்களுக்கு அவர் எப்போதும் இப்படி உதவிகளை தவறாது செய்து வருகிறார். கண்ணெதிரே ஒரு வள்ளல். காணவே மகிழ்ச்சியாக இருக்கிறது..
🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀

எழுதியவர் : சொ.சாந்தி (3-Sep-18, 4:54 pm)
சேர்த்தது : C. SHANTHI
Tanglish : kaakitha odam
பார்வை : 467

மேலே