தேங்காய்த் துண்டு

அடிக்கிற வெயிலில் சைக்கிள் மிதித்து மிதித்தே ஓய்ந்துவிடுவார் போல முத்தையா. ஆனாலும் வேறு வழியில்லை வெயிலோ மழையோ புயலோ எதுவானாலும் பிழைப்பு நடந்தாக வேண்டுமே. வழக்கம் போல் காலையில் ஏழு மணிக்கெல்லாம் கிளம்பிவிடுவார் முத்தையா, தென்னை மரம் கூட இத்தனை தேங்காய்களை தாங்கி நிற்காது போல. முத்தையா மூட்டைகளையும் பைகளையும் அடுக்கிக்கொண்டு மெதுவா மிதிக்க துவங்கினார் சைக்கிளை. எப்படியும் அவர் வீட்டில் இருந்து ஊருக்குள் செல்ல ஒரு 11 மணி ஆகிவிடும் போல ஏனென்றால் அவர் சைக்கிள் அப்படி.இவர் சைக்கிள் ஓட்டும் திறனும் அப்படி. கோதையூரில் முத்தையா வந்தால் தான் தேங்காய் வாங்க ஒரு கூட்டமே காத்திருக்கும்.

இப்படி தினமும் ஒரு ஒரு ஊர் என வாரத்தில் ஏழு நாட்களும் ஊரெல்லாம் சுற்றி தேங்காய் விற்பனை செய்வார் முத்தையா. அருகிலே சில கடைகளுக்கும் சில்லறை விற்பனை செய்யவும் காய்களை கொடுப்பார். ஞாயிற்று கிழமைகிழமைகளில் அந்த கடைகளில் வசூலை அள்ளிக் கொண்டு வருவார் . மீண்டும் தேங்காய் லோடுக்கு பணத்தை கட்டி தேங்காய் இறக்கிக் கொண்டு வியாபாரத்தைப் பார்ப்பார். இப்படியே இவர் வாழ்க்கை தேங்காய் மூடைகளோடும் அதை வாங்கும் வாடிக்கையாளர்களோடும் செல்லும். இவருக்கோ குழந்தை குட்டி எதுவும் கிடையாது மனைவி மங்கலதேவி மட்டுமே உடன் துணை. மங்கலதேவியோ யாரிடமும் சிரித்து பழகக்கூட யோசிப்பால் . முத்தையா அப்படியே மங்கலதேவிக்கு நேர்மாறானவர். குழந்தை இல்லை என்ற வருத்தம் இல்லாமல் வெகுளியாக வெள்ளந்தி சிரிப்புடன் எல்லோரிடமும் பழகும் குணமுடையவர். மங்கலதேவிக்கோ தாழ்வு மனப்பான்மை அதிகம். சரி இப்ப கதைக்கு வருவோம். முத்தையா தேங்காய் விற்பனையில் சில உடசல் தேங்காய். வெடிப்பு தேங்காய்கள் எப்படியும் இருக்கும் அவற்றை வீட்டுக்கு வரும் வழியில் கண்ணில் படும் சில குழந்தைகளுக்கு சாப்பிட உடைந்த தேங்காய் துண்டுகள் சிலவற்றை கொடுப்பது வழக்கம். அது போக அந்த உடைந்த துண்டுகளில் ஒரு சில பெரிய துண்டு தேங்காய்கள் மட்டும் தனக்கென்று எடுத்து வைத்துக்கொள்வான்.
தினமும் வீட்டுக்கு வந்தவுடன் மங்கலதேவியிடம் விற்பனை கணக்குகளை பகிர்நது வருவாயினை ஒப்படைத்து விட்டு சைக்கிளில் மீதம் இருக்கும் தேங்காய்களை இறக்கி வைத்துவிட்டு. அந்த ஒரு சில பெரிய துண்டு தேங்காயை எடுத்துக்கொண்டு வீட்டு வெளித்திண்ணையில் ஒரு மூலையி வைத்து விட்டு உள் சென்றுவிடுவான். மறுநாள் காலையில் பார்க்கும் போது அந்த பெரிய துண்டு தேங்காயகள் அந்த இடத்தில் இருக்காது. இப்படி நாள்தோறும் நடக்கும் வாடிக்கையில் வாழ்நாள் ஓடியது. ஒரு நாள் முத்தையா விற்பனை முடித்து வந்த கையோடு சட்டென்று வீட்டு திண்ணையில் மயங்கி வீழ்ந்தான்.மங்கலதேவி பதறிப்போய் ஓடி வந்தாள். மயக்கமுற்ற முத்தையாவின் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பினாள். முத்தையாவை உள்ளே போக சொல்லி ஓய்வு எடுக்க சொன்னாள் . சைக்கிளில் உள்ள மீதி தேங்காய்களை இறக்கி எடுத்து வைத்தாள். முத்தையா மங்கலா மங்கலா என்று கூப்பிட்டார். என்னவென்று கேட்க ஓடினாள் வீட்டின் உள்ளே. அந்த பையில் இருக்கும் பெரிய துண்டு தேங்காய்களை மட்டும் வீட்டு திண்ணையின் கடைசியில் வைத்துவிட்டு வா என்றார்.

அவளும் பதில் ஏதும் பேசாமல் தேங்காய் துண்டுகளை வைத்து விட்டு வந்தாள். மறுநாள் காலையில் அந்த தேங்காய் துண்டுகள் அங்கில்லை. இது என்ன தினமும் இவர் இங்கே தேங்காய் வைப்பார் காலையில் காணமல் போகும். அது ஏதோ மீதியை அங்க வைக்கிறார் என நினைத்தேன். நேற்று உடல் நிலை சரியில்லாமல் போன நிலையிலும் மறக்காமல் என்னை அழைத்து வைக்க சொன்னாரே. என்று மனதில் கேள்வியுடன் காத்திருந்தால். மறுநாள் உடலிநிலை சரியில்லை என்பதால் வியாபாரத்திற்கு போகவில்லை முத்தையா. அன்று இரவானது அன்றும் ஒரு தேங்காய் எடுத்து உடைத்து அதில் ஒரு துண்டை திண்ணையில் வைத்தான். மங்கலதேவி இதை பார்த்தால் விரைந்து வந்தால் முத்தையாவிடம் கேட்டால் என்ன இது நீங்கள் இன்று வியாபரத்திற்கு போகவில்லை . நேற்றிலிருந்து உடல்நிலை சரியில்லை உங்களுக்கு ஆனாலும் இந்த தேங்காய் துண்டு மட்டும் தினமும் இரவில் வீட்டு திண்ணையில் மறக்காமல் வைக்கிறீங்களே எதுக்கு ? என்று கேள்வி கேட்டால். முத்தையா கண்கலங்கிய சிரிப்போடு கயிற்றுக்கட்டிலில் சாய்ந்து ப்படுத்தான். வானத்தை பார்த்தபடி விழிசுருக்கினான். வலக்கையினை தலையின் நெற்றியில் பதித்தபடி படுத்தான் . மங்கலதேவி மீண்டும் அதே கேள்வியை கேட்டாள் ஆவேசத்தில்.இது நான் செய்த பாவத்துக்கு பிராயசித்தம்ன்னு வச்சுக்கோ. என்று சொன்னான். என்ன சொல்றீங்க என்ன பாவம் என்ன பிராயிசித்தம் என மீண்டும் துளைத்தாள். கட்டிலில் இருந்து எழுந்தான் முத்தையா ஆமாம். நா பாவம் பண்ணிட்டேன். நம்ம வீட்ல தேங்காய் உடசல்களை கொண்டு வந்து வைப்பேன் அதை காயப்போட்டு எண்ணெய் எடுக்கலாம் என நினைத்து சேர்ப்பேன் அது உனக்கு தெரியும் தானே என்றான். ஆமாம் அது தான் இப்ப இல்லையே என்றாள். ஆமாம் அந்த வேலையை நிறுத்திவிட்டு தான் இப்ப விமோச்சனம் தேடிட்டு இருக்கேன் என்றான். அய்யோ விவரமா சொல்லுங்க ஏன் இப்படி ஏதோ சொல்லுறிங்க என சினந்தாள். வழக்கமாக மீதமான உடைந்த தேங்காய்களை இரவில் கொண்டு வந்து நம் திண்ணையில் போடுவேன் ஆனால் மறுநாள் காலையில் அந்த இடத்தில் தேங்காய்கள் இருக்காது. இது எலிகளின் வேலை தான் என தெரியும் எனக்கு. ஒரு நாள் கோபத்தில் தேங்காய் துண்டுகளின் மீது எலிமருந்து பூசிய கருவாட்டு துண்டுகளை மசித்து சேர்த்து தடவி வைத்தேன். மறுநாள் காலையில் நம் வீட்டின் பின்புறத்தில் அங்காங்கே ஒன்று இரண்டு எலிகளும் இறந்து கிடந்தன. அவற்றை அப்புறப்படுத்தினேன். விற்பனைக்கு கிளம்பினேன். தேங்காய் மூட்டைகளை சைக்கிளில் ஏற்றினேன். அதில் ஒரு எலியின் வயிறு புடைத்து வயிற்றினுள் ஏதோ இருக்கும் நிலையில் இறந்து கிடந்தது அதையும் எடுத்து தூரப்போட்டுவிட்டு வியாபாரத்திற்கு கிளம்பினேன். என்று சொல்லிக்கொண்டே கண்ணீர்விட்டான். சரி இதற்கு ஏன் அழுகிறிங்க தொல்லை கொடுக்கிற எலியை கொல்வது சாதரணம் இது எல்லோரும் செய்றது தானே என கேட்டாள். ஆமாம் நானும் அப்படி நினைத்து தான் வியாபரத்திற்கு கிளம்பினேன். உனக்கு நினைவிருக்கா தெரியலை அன்னைக்கு தான் நம்ம குழந்தை கருவிலயே காணம போன நாள் நீயும் நானும் சுக்கு நூறாய் நொறுங்கிய நாள். இன்னைக்கு வரை மீண்டும் ஒரு குழந்தை வந்து உன் வயிற்றில் உதிக்காதான்னு காத்திட்டுருக்கோம் என குலுங்கி அழுதான் மங்கலதேவியும் அழுதாள். நான் செய்த பாவத்தின் வினை தான் அன்று என் குழந்தையை காணாமல் போகச் செய்தது என்றே நான் நினைக்கிறேன்.

அந்த பாவத்துக்கு விமோச்சனம் தேடி தான் தினமும் எலிகளுக்கு தேங்காய் வைக்கிறேன் என்றான் முத்தையா. இது முட்டாள் தனமோ இல்ல மூடநம்பிக்கையான்னு எனக்கு தெரியல ஆனால் எந்த உயிர்னாலும் உயிர் தானே. இறைவன் படைப்பில் எல்லா உயிரினமும் ஒன்னுதான்னு எனக்கு அன்னைக்கு புரிஞ்சுது. உருவத்திலும் வாழ்விலும் வேறு வேறாக தோன்றினாலும் வலி எல்லோருக்கும் ஒன்னுதானே என மனைவியிடம் கூறினான். தான் செய்த தவறுக்கு பரிகாரமாய் இன்றும் எலிகளுக்கு தேங்காய் துண்டுகளை வைத்து வருகிறான். எப்படியோ ஒரு உயிருக்கு தினமும் உணவு கொடுக்கும் இறைவனான் முத்தையா.


சுட்டித்தோழி சுபகலா

எழுதியவர் : சுட்டித்தோழி சுபகலா (23-Sep-18, 10:46 pm)
பார்வை : 1057

மேலே