நோயுறுதலும் நோயறிதலும் சித்த மருத்துவக் கருத்தாக்கங்களும் நெறிகளும்-------------படிக்க ----------பகிர்க

இந்தியாவின் மருத்துவ முறைகளில் பல சிறந்த சிகிச்சை முறைகள் மட்டுமன்றி அவற்றோடு பிணைந்த அரிய தத்துவங்களும் நோயாளிக்கும் வைத்தியருக்குமுள்ள உறவு பற்றிய நெறிகளும் பொதிந்திருப்பதைக் காணலாம். நவீனச் சிகிச்சைகள் மலிந்துவிட்ட இக்காலகட்டத்திலும் இம்முறைகள் வழங்கிவருவது பழமையின் மீதான வெறும் பிடிப்பாலல்ல; அவற்றிலுள்ள சிகிச்சை முறைகளின் சிறப்பாலும் வைத்தியத்தில் நோயாளிக்கும் முக்கியப் பங்கு வழங்கப்படுவதாலும்தான். ஆசிய மருத்துவ முறைகள் பற்றிக் கடந்த முப்பதாண்டுகளாக மானுடவியல், சமூகவியல் ஆய்வுகள் பல வெளிவந்துள்ளன. மேலைநாடுகளில் கிட்டத்தட்ட 60 சதவீதத்தினர் மாற்று மருத்துவ முறைகளை நாடுவதால் சமீபத்தில் ஆய்வுகள் பெருகியுள்ளன. அலோபதி முறையின் செயல்பாடுகளைப் பற்றியும் மருத்துவர்கள் நோயாளிகள் பற்றிய முடிவுகளை எதனடிப்படையில் எடுக்கிறார்கள், மருத்துவமனைகளில் மனித உறவுகள் எப்படியிருக்கின்றன என்றெல்லாம் பல கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.

ஆரோக்கியம் குறித்த ஆர்வம் மிகுந்துவரும் இந்நேரத்தில் மருத்துவ முறைகளின் தத்துவக் கட்டமைப்பைப் பற்றியும் அவற்றின் செயல்பாட்டை அவை எப்படி வழிநடத்துகின்றன என்பது பற்றியும் தெரிந்துகொள்ளுதல் அவசியம். சமூகவியல் கண்ணோட்டத்தில், மருத்துவம் சார்ந்த அறிவியலைப் - குறிப்பாகப் பாரம்பரிய மருத்துவ முறைகளை- பற்றிக் கடந்த 20 வருடங்களாகத் தமிழ்நாட்டில் நான் செய்துவரும் ஆராய்ச்சி, சித்த மருத்துவர்களுடனான பேட்டிகள் ஆகியவற்றின் அடிப்படையில் இக்கட்டுரையை அமைத்திருக்கிறேன்.

மருத்துவத் துறையின் அடிப்படை நிலையில் நோயை அனுபவிப்பவன் ஒருவன், அதைக் குணப்படுத்தும் அறிவு படைத்தவனோ இன்னொருவன், அதாவது மருத்துவன். நோயுற்றவனுக்கு நோயின் அனுபவமிருக்கும், மருத்துவனுக்கோ நோயின் அனுபவமிராது. ஆனால் அதைப் பற்றிய அறிவு இருக்கும். நோயாளிக்குத் தன் உடலிலுள்ள நோய் பற்றிய அறிவு இருக்கவோ மருத்துவனால் நோயின் தன்மையை முழுவதுமாக உணரவோ முடியுமா? இவ்வாறு நோயின் அனுபவமும் அதைப் பற்றிய அறிவும் பிரிந்திருத்தல் மருத்துவத்தில் இயல்பு நிலை. இதை வெவ்வேறு மருத்துவ முறைகள் எப்படி அணுகுகின்றன? இதை எதிர்கொள்வதிலுள்ள சிக்கல்கள் எவை? இவை மருத்துவனுக்கும் நோயாளிக்குமுள்ள உறவை எப்படிப் பாதிக்கின்றன? இத்தகைய கேள்விகள் மருத்துவ முறைகளை ஒப்பிட்டுப் பார்க்க வழிவகுக்கின்றன. சாதாரணமாக மானுடவியலில் அறிவியலையும் மந்திர மாயத்தையும் எதிர்நிலைகளாகக் காட்டி முன்னதை நவீன மேலைக் கலாச்சாரத்துடனும் பின்னதை மீதமுள்ள எல்லாக் கலாச்சாரங்களுடனும் தொடர்புபடுத்திப் பார்ப்பது வழக்கமாகயிருந்தது. ஆனால் இது போன்ற பாகுபாடுகள் உடற்கூறு பற்றி ஒற்றை நிலைப்பாடு தான் இருக்க முடியும் என்ற மூடநம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது என இப்போது விளங்க ஆரம்பித்துவிட்டது. உறுப்புகளால் ஆன உடம்பு, உலகை நமக்குக் காட்டும் ஐம்பொறிகள், இவற்றைச் சேர்க்கும் மனம் இவை யாவும் ஒருங்கிணைந்த உயிர் பற்றி அறிவியல் பூர்வமான கோட்பாடுகள் பல இருக்க முடியும் என்ற புரிதலை விரிவாக்க நாம் புதிய அணுகுமுறைகளையும் பாகுபாடுகளையும் சமைக்க வேண்டியுள்ளது. மேலே சொன்ன கேள்விகளைப் புரிந்துகொள்ள நிபுணரைப் பிரதானமாகக் கொண்டவை, நோயாளியைப் பிரதானமாகக்கொண்டவை என மருத்துவ முறைகளை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்பது என் கருத்து.

அலோபதி போன்ற மருத்துவ முறையில் நிபுணர் படித்தறிந்த அறிகுறிகளின் வாயிலாகவே நோய் அறியப்படுகிறது. நோயாளியின் வாதையுள் தொழில்நுட்பக்கருவிகளால் நிர்ணயிக்கக்கூடிய அறிகுறிகள் மட்டுமே நோயின் தன்மையைக் கண்டறிய எடுத்துக்கொள்ளப்படும். நோயாளியால் உணரப்படும் நோயின் குணம் நோய் முதல் நாடலில் முக்கியத்துவம் பெறாது. உதாரணத்திற்கு, ஒரு நபர் தனக்குள் எந்த மாற்றத்தை உணராவிட்டாலும் இரத்தக்கொதிப்பு இருப்பதாகக் கருவி சொன்னால் அவர் மாத்திரை சாப்பிட்டாக வேண்டும். மாறாக, உடலில் வலி மிக அதிகமாகவும் தொடர்ச்சியாகவுமிருப்பினும் கருவிகள் கணக்கெடுக்க முடியாது போனால் அதை நோயாளியின் கற்பனை அல்லது மனநோய் என்று நிபுணர் கருதுவார்.

ஆக அலோபதி முறையில் நோய் பற்றிய நோயாளியின் அனுபவத்திற்கும் மருத்துவரின் அறிவுக்கும் இடைவெளி ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆங்கிலத்தில் நோயாளிக்கு ஏற்படுவதை சிம்ப்டம் (ண்தூட்ணீtணிட்) என்றும் மருத்துவர் எடுக்கும் குறிப்பை சைன்ஸ் (ண்டிஞ்ணண்) என்றும் சொல்வார்கள். ஆரம்ப கால அலோபதியில் நோயாளியிடமிருந்து எடுக்கப்படும் மருத்துவக் குறிப்புகள் நோயாளியின் வருணனையை ஒட்டி இருந்தன (ண்தூட்ணீtணிட்ண்), தொழில்நுட்பக் கருவிகள் பெருகப் பெருக அவற்றால் அளக்கக்கூடிய குறிகளே நோயின் அறிகுறிகள் என்றாகிவிட்டன. நோயுற்ற உறுப்பையும் அதன் செயல்களையும் துல்லியமாக அளப்பதுதான் நோய் முதல் நாடல் என்று இப்போது ஏற்கப்பட்டுள்ளது. இம்முறையில் நோயாளியின் நோய் பற்றிய அனுபவமும் வருணனையும் முக்கியமல்ல, அல்லது இரண்டாம் பட்சம்.

உயிரற்ற சடலத்தினுள் காணும் உறுப்புகளின் கட்டமைப்பு பற்றிய அறிவைக் கொண்டு உயிருள்ள நோயாளிகளுக்கு மருத்துவம் செய்தல் அலோபதி முறையின் சித்தாந்தம். உயிரற்ற உடல் அறிவுக்கு வழி வகுத்தாலும், உயிருள்ள நோயாளியையும் சுய உணர்வற்ற சடலத்தைப் போன்ற பொருளாகக் கருத வேண்டிய நிர்ப்பந்தம் இம்முறையில் உள்ளது எனத் தத்துவ அறிஞர்கள் கூறுகின்றனர்.

இன்று காமாலை, பக்கவாதம் ஆகியன நோய்களாக அறியப்படுவதில்லை. உள் உறுப்புகளின் கட்டமைப்பின் அளவுகளாகவே அறியப்படுகின்றன. உள் உறுப்புகளின் ரசாயனக் கூறுகள் வெவ்வேறு மனிதர்களில் வெவ்வேறான நோய்க் குணங்களைக் காட்டும். ஆனால் அந்த மனித வேறுபாடு அலோபதி நிபுணர்களுக்குத் தற்செயலானது. கருவி காட்டும் குறியே முதன்மையானது. இன்னும் சொல்லப் போனால் நோயாளி உணரும் நோய்க் குணத்திலிருந்து வேறுபட்டிருப்பதே அலோபதி மருத்துவத்தின் சிறப்பம்சம்.

மனிதனுடைய அனுபவத்தையும் கணிப்பையும் கருவிகள் அளவீடுகளாக்கி விடுவதால் அசல் நோயாளியே தேவையில்லை. பரிசோதனை முடிவுகள் கொண்ட நோயாளியின் ஆவணம் போதுமானது. அதாவது கருவிகள் ஒரு நிழல் நோயாளியை கேஸ் தாள்களில் உருவாக்குகின்றன. பரிசோதனைக் கூடம் முதல் மருத்துவர் அறை, மருத்துவக் கருத்தரங்குகள்வரையில் இந்த நிழல் நோயாளிதான் அறியப்படுகிறார். கருவிகள் உருவாக்கும் அளவீடுகளின் அடிப்படையில்தான் பல வேதியியல் மருந்துகளின் பலன்கள் பரிசோதிக்கப்படுகின்றன. இப்படிப் பரிசோதிக்கப்பட்ட பின் தரப்படும் மருந்து ஒத்துவராமல் பின்விளைவுகளை ஏற்படுத்துவதாக அசல் நோயாளிகள் சிலர் சொன்னால், அதை நிபுணர்கள் முக்கியமாகக் கருதமாட்டார்கள். பரிசோதனைக்கூடத்தில் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் ரசாயன மருந்துப் பொருட்கள் நிரூபணமாகின்றன. இவ்வாறு நிரூபிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் நிஜ உலகில் பலருக்கு ஒத்துக்கொள்ளாமல் போகலாம். மற்ற சில மருத்துவ முறைகளைப் போல் அலோபதிக்குத் தனி மனிதனின் ஒருங்கிணைந்த தேக/மன வாகு பற்றிய கருத்தாக்கம் இல்லை; அது உறுப்புகளின் கூட்டுச் சேர்க்கையாக உடம்பு முழுவதையும் பார்க்கிறது. ஒன்றேபோல் காணப்படும் உள் உறுப்புகளின் அடிப்படையில் அது பரிசோதனைக்கூடத்தின் முடிவுகளை உலகிலுள்ள அனைவருக்கும் உகந்ததாக அறிவித்துவிடுகிறது.

சோதனைக்கூடத்தில் கண்ட சில மருந்துகள் அசல் வாழ்க்கையிலும் சிறப்பாக வேலைசெய்கின்றன. ஆனால் பரிசோதிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் பல அசல் நோயாளிகளுக்குத் தீங்கு விளைவிக்கின்றன. இத்தீய விளைவுகளை அலோபதி மருத்துவம் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை ஏதோ தனிப்பட்ட பிரச்சினையாகத் தள்ளிவிடும். இவான் இல்லிச் என்னும் தத்துவச் சிந்தனையாளர் இதை டிச்tணூணிஞ்ஞுணஞுண்டிண் எனக் குறிப்பிடுகிறார். அதாவது, மருந்து, சிகிச்சை, மருத்துவரால் அசல் நோயாளிக்கு விளையும் சேதம் பற்றிப் பெரும்பாலும் மருத்துவத் துறையினர் பேசுவதில்லை. நவீனச் சிகிச்சையில் உலகில் மிகவும் முன்னேறிய அமெரிக்காவில் சமூகப் பிரக்ஞையுள்ள மருத்துவர்கள் இது பற்றிய தமது ஆராய்ச்சிகளை, மருத்துவச் சிகிச்சையால் மரணம் என்னும் தலைப்பில் வெளியிட்டுள்ளார்கள். அமெரிக்க மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுள் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளின் தீய விளைவுகளால் பாதிக்கப்பட்டவர்கள் ஆண்டுக்கு 22 லட்சம் பேர். தேவையற்ற அறுவைச் சிகிச்சைகளுக்கு ஆளானவர்கள் ஆண்டுக்கு 75 லட்சம் பேர். மிக வேடிக்கையான தகவல் என்னவென்றால், மருத்துவச் சிகிச்சையால் இறந்தவர்களின் எண்ணிக்கை புற்று நோய், இருதய நோய் ஆகியவற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கையைவிட அதிகம். அதிர்ச்சியாக இருக்கிறதா? மருத்துவ நிபுணரையும் நிர்வாக அமைப்பையும் கேள்விகேட்கப் போதுமான தகவல்களும் பலமும் இல்லாத, நோயாளிகள் நிரம்பி வழியும் ஏழ்மை மிகுந்த நமது மருத்துவமனைகளில் இதுபோல் கணக்கெடுப்பில்லை; இருந்தால் அது இதைவிட அதிர்ச்சியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

இதனால் அலோபதியே தவறானது என்றோ அம்மருத்துவர்கள் திறமை குறைந்தவர்கள் என்றோ அர்த்தமல்ல. நிபுணத்துவம் சார்ந்த அறிவியலுக்கு வலிமைகளைப் போலக் குறைபாடுகளும் உள்ளன என்பதுதான் கருத்து. மேலும் இது பொதுநலச் சிந்தனையுடைய மருத்துவர்களில் ஒரு சாராரால்தான் வெளிக்கொண்டுவரப்பட்டது. அலோபதி முறையில் நோயாளியின் அனுபவத்திற்குச் சிகிச்சையில் பெரிய பங்கில்லை என்பதுதான் முக்கியமானது. அதனால்தான் சிகிச்சை நிவாரணம் அளிக்காவிட்டாலும் நோயாளி மருத்துவருக்குக் கட்டணம் தர வேண்டியுள்ளது. ஏனெனில் கட்டணம் நிபுணரின் அறிவுக்கும் நேரத்திற்கும் கொடுக்கப்படுகிறது. அது நோய் குணமாவதைப் பொறுத்ததல்ல.

மனித அனுபவத்தைவிடக் கருவிகள் காட்டும் அளவுகளையே முக்கியமாகக் கருதும் நிபுணர்கள் சார்ந்த அலோபதி மருத்துவ முறையின் நிலைமை இது. பிற மருத்துவ முறைகளில் நோயாளி உணரும் நோய்க் குணமும் மருத்துவர் அறியும் குறிகளும் எவ்வாறு அணுகப்படுகின்றன? அதிலும் குறிப்பாகச் சித்த மருத்துவ முறையில் நோயாளியின் நிலை என்ன?

தமிழ் மற்றும் தெலுங்குப் பகுதிகளில் பல்லாண்டுக் காலமாக வழங்கிவந்த நாட்டு மருத்துவத்திற்குச் சித்த மருத்துவம் என்ற பெயர் கடந்த நூற்றாண்டில் ஏற்பட்டிருக்கக்கூடும். ஆலய, ஆதீன, மத அமைப்புகளை எதிர்த்தவர்களும் பிணி, மூப்பு, சாக்காடு ஆகியவற்றை வென்று அழியா உடலோடு விளங்க சுய பரிசோதனைகளில் ஈடுபட்டவர்களும் சித்தர்கள் என்று தென்னாட்டில் வழங்கப்படுகிறார்கள். பிணி, மூப்பு, சாக்காடு இவை உடலை அண்டாதிருக்கக் கடைப்பிடிக்க வேண்டிய விதி முறைகளோடு அதற்கான மூலிகைகளையும் சித்தர்கள் ஆய்ந்தறிந்து வைத்திருந்தனர். மூலிகைகள் காலத்தால் அழியக் கூடியவை என்பதால் அழியாத கனிம, உலோகப் பொருள்களைப் பதப்படுத்தி உட்கொண்டு உடலுக்கு உரமூட்டும் முறைகளைச் சித்தர்கள் கையாண்டனர். கோட்பாடுகளும் சிகிச்சை விதிகளும் ஆயுர்வேத முறைக்கும் சித்த மருத்துவத்திற்கும் பொதுவானதென்றாலும் கனிம உலோகச் சரக்குகளைப் பண்படுத்தி மருந்தாக்கும் உத்தி சித்த மருத்துவத்தின் தனிச் சிறப்பாக இருந்தது.

நடைமுறையில் ஆயுர்வேதமும் சித்த மருத்துவமும் குருகுல வழியில் பரவின. நாட்டுவைத்தியமென்று வழங்கிவந்ததில் பொதுமக்கள் ஆயுர்வேதத்திற்கும் சித்த மருத்துவத்திற்கும் பெரிய வித்தியாசம் பார்க்க வில்லை எனத் தெரிகிறது.
சித்த மருத்துவத்தின் நோய் பற்றிய கோட்பாடுகள், உடற்கூறு பற்றிய அணுகுமுறை, மற்றும் நோயைக் கண்டறியும் திறன்கள் யாவும் நோயாளியை மையமாகக்கொண்டு அமைந்துள்ளன. சுய அறிவைப் போற்றும் சித்தர்கள் தத்துவம், நோயுற்றவரும் நோயறிபவராகும் வாய்ப்பை அளிக்கிறது. எனவே அலோபதிபோல நோயாளி தன் நோயை உணரும் குணத்திற்கும் மருத்துவர் அறியும் குறிகளுக்கும் இடைவெளி சித்த மருத்துவத்தில் ஏற்படாது. தனது சுய அனுபவத்தால் மட்டுமே சித்திகளை அடைய முடியும், ஏட்டில் படித்தறிந்தோ பிறர் சொல்லிக்கொடுத்தோ பாரம் பரியச் சடங்களுக்கு உட்பட்டோ மெய்ஞானம் வருவதில்லை என்பது சித்தர்களின் தத்துவச் சிறப்பு. சித்தர்களின் தத்துவப் பாடல்கள் யாவும் ஆண் மையக் கண்ணோட்டம் கொண்டவை. ஆண்கள் சித்தியடைவதைத் தடுக்கும் போகப் பொருள்களாகவே பெண்கள் சித்தரிக்கப்படுகின்றனர்.

உணர்வும் அறிவும்

இந்திய ஆன்மிக வரலாற்றிலேயே எங்கும் காணாத அளவில் உடம்பு பற்றிய கவனம் சித்த தத்துவத்தில் தெரிகிறது. உடலற்ற ஆன்மாவின் விடுதலை அவர்களது குறிக்கோளாக இருக்கவில்லை. பிணி, மூப்பு, சாக்காடு இவற்றிலிருந்து இந்த உடம்பைப் பாதுகாத்து அதை அழியாப் பொருளாக்குவது எப்படி என்பதே சித்தர்களின் ஞானத்தேடல்களின் முக்கிய இலக்கு.

சித்தர்கள் ஐந்து வகையான உடம்புகள் அல்லது கோசங்கள் பற்றிப் பேசியுள்ளார்கள். எந்தப் பொருளால் ஊட்டம் பெறுகிறதோ அதைப் பொறுத்து உடம்பின் நியதிகள் அமைகின்றன. உணவால் ஆனது இந்த ஸ்தூல உடம்பு. மூச்சுக் காற்றால் ஆன வளியின் பாதை உறுப்புகளான வளி உடம்பு. காற்று சென்று திரும்பும் உடற்துவாரங்கள், அது போகும் குழாய்கள் மற்றும் அது இயக்கும் தொழில் உறுப்புகள்/கர்மேந்திரியங்களின் நியதிகளுக்கு உட்பட்டது.
வர்ம சிகிச்சை, நுட வைத்தியம், நாடி சாஸ்திரம் மற்றும் பிராணாயாம முறைகள் யாவும் வளி உடம்பின் செயல்பாட்டின் அடிப்படையில் உருவாயின. மூச்சுக்காற்றின் நியதிகளை உயிரற்ற சடலத்தில் படிக்க முடியாது; உயிருள்ள மனிதன் தான் சித்த மருத்துவத்தின் அளவு கோல். அதனால்தான் சவத்தை அறுத்து உள் உறுப்புகளைக் காணுதல் சித்த மருத்துவத்திற்குப் பிரதானமல்ல. அடுத்தது, நினைவுகளாலும் சிந்தனைகளாலும் ஊட்டம் பெறும் மன உடம்பு. இதைக் கடந்து அறிவுடம்பு மற்றும் இவை யாவும் இயைந்த இன்ப உடம்பு என்று ஐந்து வகை உடம்புகளைச் சித்தர்கள் வரையறுத்தனர். இவற்றுக்குள்ள தொடர்பு, இப்படிமங்களை ஒருங்கிணைக்கும் வழிகள் ஆகியவை சித்தர்களின் மெய்ஞானத் தேடல்களாக இருந்தன. என்றாலும் இம்மருத்துவம் முதல் மூன்று உடம்புகளை மட்டுமே தீண்ட இயலும்.

பஞ்சபூதக்கொள்கையும் நோய் பற்றிய கோட்பாடுகளும்

ஆயுர்வேத, சித்த மருத்துவம் இரண்டிற்கும் அடிப்படையான கோட்பாடு பஞ்சபூதக்கொள்கை. உலகிலுள்ள பொருள்கள் அதாவது பதார்த்தங்கள் யாவும் ஐந்து பூதங்களாலானவை. மண், அனல், புனல், வளி, வெளி ஆகியவற்றின் கூட்டுச்சேர்க்கையால் பருப்பொருள்களும் கண்ணுக்குப் புலப்படாத - ஆனால் செயல்பாடுகளையுடைய - மனம் போன்ற சூட்சுமப் பொருள்களும் ஆக்கப்பட்டுள்ளன. ஆக உடலும் மனமும் இயைந்த மனிதனும் இந்தச் சரீரத்தின் வெளியே உள்ள இயற்கையும் ஒரே மாதிரியான பொருள்களாலானவை.

பஞ்சபூதங்களாலான உலகை மனிதன் தன் ஐம்புலன்களால் அறிகிறான். மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய பொறிகள் முறையே ஊறு (ஸ்பரிசம்), சுவை (ரசம்), ஒளி (ரூபம்), நாற்றம் (கந்தம்), ஓசை (சப்தம்) ஆகிய பொருள்களைக் கிரகிக்க முடிகிறது. ஆனால் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய பொறிகள் வெறும் உறுப்புகள்தாம்; அவற்றால் தம்மைக்கூடத் தாமாக அறிய முடியாது. பொறிகளுடன் உள்ளுறையும் அந்தக்கரணமாகிய மனம் பொருந்தினால்தான் உணர்வும் நினைவும் ஏற்படும்.

மனிதனுக்கு அந்தக்கரணங்கள் நான்கு - மனம், புத்தி, அகங்காரம், சித்தம். அதாவது சூட்சுமமாகிய மனம் அதன் செயலைப் பொறுத்து நான்காகப் பிரிக்கப்படும். மனம் நினைக்கும், புத்தி ஒப்பிட்டு விசாரிக்கும், அகங்காரம் முனைப்பைத் தரும், சித்தம் செயலை முடிக்கும். இவற்றை இணைப்பது அறிவு. வலி வேதனை ஆகியவற்றை உறுப்புகள் உணர முடியாது. ஏனென்றால் அவை அசித்து, அந்தக்கரணங்களின் ஈடுபாட்டால் உறுப்புகளால் ஏற்படும் வாதையை உணர முடிகிறது. ஆக நோயுற்ற ஒவ்வொருவனும் ஓரளவுக்கு நோயறிபவனாக இருக்க முடியும். சாமானியர்கள்கூட உறுப்புகளின் இயக்கங்களான மூச்சுவிடுதல், செரிமானம், வெளியேற்றம், வலி போன்ற செயல்பாடுகளை நுட்பமாகக் கவனித்துவருவதால் ஓரளவு உணர முடியும். பல்வேறு உணவுகள், பழக்கவழக்கங்கள், கால மாறுபாடுகள் ஏற்படுத்தும் உடல் மாறுதல்களைத் தெரிந்துகொள்வதும் சாத்தியமாகும்; இதற்குப் பழக்கம் தேவை. அந்தக்கரணங்களைக் கட்டுப்பாட்டாலும் பழக்கத்தாலும் கூர்மையாக வைத்துக்கொள்ளுதல் யாவருக்கும் சாத்தியமே. இத்தகைய கோட்பாடு நோயாளிக்கும் மருத்துவனுக்கும் அறிதலில் சமமான தொடக்க நிலையைக் கொடுக்கிறது.

உயிரை சரீரம், பொறிகள், மனம், அறிவு இவை யாவும் இணைந்திருக்கும் நிலையாகச் சித்தர்கள் கண்டதாலும் உடம்பைப் பல படிமங்களைக் கொண்டதாகக் கருதியதாலும் நோயை வெறும் பிண்டத்தாலான உறுப்புகளின் கோளாறாக அவர்கள் காணவில்லை. நோய்க்கூறு பற்றிய திரிதோஷக் கொள்கையின்படி தன் ஸ்தூல உடலில் உள்ள ஏழு தாதுக்கள் - அதாவது ரசம், ரத்தம், மாமிசம், எலும்பு, கொழுப்பு, மூளை (ஞணிணஞு ட்ச்ணூணூணிதீ) மற்றும் சுக்கிலம் ஆகியவை - தம் நியதியின் குறியீட்டிலிருந்து தோஷத்தால் வேறுபட்டிருப்பதை ஒருவன் நோய் என்று உணருவதாகச் சொல்கிறது. தோஷம் என்பது உணவு, சூழல் போன்ற பருப்பொருள்களின் குறை, மிகையால் மட்டுமன்றிக் கவலை, பயம் போன்ற உணர்ச்சிகளின் வீச்சாலும் ஏற்படுகிறது. பின்னர் தாதுக்களைப் பாதிக்கிறது. ஆக நோயை வரையறுப்பதிலேயே அதை முதலில் தனதுடலில் உணருபவனாகிய நோயாளியின் மனமும் அனுபவமும் இடம்பெறுகின்றன.
சித்த மருத்துவத் தத்துவக் கொள்கைகளும் நோய் பற்றிய கோட்பாடுகளும் நோயுறுபவனின் நிலையை அடிப்படையாகக் கொண்டுள்ளன என்பதைப் பார்த்தோம். இனி இது நோயாளிக்கும் மருத்துவனுக்கும் உள்ள உறவிலும், சிகிச்சையிலும் எப்படி வெளிப்படுகிறது எனப் பார்க்கலாம்.

நோயறிதல்: மருத்துவன் நிலை

அடிப்படைக் கொள்கைகளில் ஆயுர்வேதமும் சித்த மருத்துவமும் ஒன்றாயினும் சித்தர் மெய்ஞானத் தத்துவங்களின் பாதிப்பைச் சிகிச்சை முறைகளிலும் நோய் நாடலிலும் நிறையவே காணலாம். நோயின் தன்மையைக் கண்டறிய நாடி பார்ப்பதைப் பல மருத்துவ முறைகள் - ஆரம்ப கால அலோபதி, சீன மருத்துவம், யுனானி முதலானவை - வெவ்வேறு அளவில் பயன்படுத்தியுள்ளன. சித்த மருத்துவத்தில் நாடி பார்த்தல் மிக முக்கியமானது. கிராமப்புறங்களிலுள்ள விஷக்கடி வைத்தியர்கள் நாடி பிடித்து நோயாளி பாம்புக்கடியால் மயங்கியுள்ளாரா பயத்தினாலா என்றும் உயிர்பிழைப்பாரா மாட்டாரா என்றும் சொல்லும் வல்லமையைப் பெற்றிருந்தார்கள். அதாவது ஸ்தூல உடலின் நிலையை மட்டுமன்றி வளி உடம்பு மற்றும் மனவுடம்பு ஆகியவற்றின் தன்மையையும் காட்டக் கூடியதாகச் சித்தர்கள் நாடிபார்த் தலை வளர்த்து வைத்திருந்தனர்.

நோயாளியின் நாடியைப் பரிசோதிப்பதில் மூன்று நிலைகளை வைத்தியன் அடைய வேண்டும் என்று தமிழ்நாட்டில் சித்த வைத்தியர்களிடையே ஆய்வுகள் செய்த மானுடவியலாளர் வாலண்டைன் டெனியல் கூறுகிறார். ஏழு தாதுக்களால் ஆன இந்த ஸ்தூல உடலிலுள்ள தோஷங்களின் பிறழ்வுகளை அறிதல் முதலாவதாகிய ஸ்தூல நிலை. அடுத்தது உள்நிலை; இதில் நோயாளியின் கைகளைப் பிடித்திருக்கும் வைத்தியன் தனது நாடியின் நிலை பற்றிய உணர்வை அடைய வேண்டும். மூன்றாவது சமநிலை; இதில் வைத்தியன் தனது நாடியின் நடை மற்றும் எடை இரண்டையும் நோயாளியின் நாடியோடு இணைக்க வேண்டும். இந்நிலையில்தான் நோயாளியின் தோஷ நிலைப்பாட்டை வைத்தியன் அறிந்துகொண்டதாகச் சொல்ல முடியும். நோயாளியுடன் நாடியைப் பகிர்ந்துகொள்ளுவது சில கணங்களே ஆனாலும், இதற்குப் பிறகுதான் வைத்தியன் தான் கற்ற சிகிச்சை முறைகளைப் பயன்படுத்த வேண்டும் எனச் சொல்லப்படுகிறது.

நோயாளியின் அனுபவத்திற்கும் வைத்தியனின் அறிவுக்குமுள்ள இடைவெளியை ஈடுசெய்வதில் சித்த மருத்துவ நாடிப் பரிசோதனை எப்படி அமைந்துள்ளது என்று பார்த்தோம். இந்த அளவு நாடியை அறியப் பல ஆண்டுகள் கடுமையான பயிற்சி தேவை. தவிர வைத்தியன் ஓரளவு அப்பியாசம் செய்தவண்ணம் இருக்க வேண்டும்; வாய்மை போன்ற ஒழுக்கங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். ஒவ்வொரு வைத்தியனும் இப்படி இருந்தாகச் சொல்ல முடியாது. எல்லா மருத்துவ முறைகளிலும் உண்மையானவர்களும் போலியானவர்களும் இருக்கிறார்கள். சித்த மருத்துவப் படிப்பிலும் நாடிப் பரிசோதனை விடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.

தமிழ் மருத்துவ நூல்களில் பாதிக்கப்பட்ட திரிதோஷங்களின் அடிப்படையில் நோய்கள் சீராகப் பாகுபடுத்தப்பட்டுள்ளன. நோய்களின் விவரங்கள் நோயாளியின் அனுபவத்திலிருப்பதுபோல வருணிக்கப்பட்டுள்ளது. சான்றாக, வாதம், பித்தம், கபம் ஆகிய காரணிகளின் கீழ் வயிற்று வலி, வயிற்றுப் பொறுமல், வயிற்று எரிச்சல், வயிற்று இசிவு என்று வாதையின் தன்மையை விளக்கும் பாடல்களாகக் கொடுக்கப்பட்டுள்ளன. பலவித வலிகள் அவற்றின் காரணமான தோஷங்கள், அவற்றுக்குரிய சிகிச்சை முறைகள் என்று நூல்கள் அமைந்துள்ளன. நோயாளியின் உடலில் நோய் வெளிப்படும் போது அவருக்கு அது ஏற்படுத்தும் உபாதைகளை முறைப்படி பாகுபடுத்தும் கட்டமைப்பை நூல்களில் காணலாம். பால வாகடத் திரட்டு என்னும் குழந்தை நோய் குறித்த நூலில் ஸ்லேத்தும மாந்தம் என்னும் நோய்க்குக் குழந்தை கையில் நிற்காது தரையில் பிரண்டழும் என்பது ஓர் அறிகுறியாகக் கூறப்பட்டுள்ளது. நோய்க்குறிகளில் குழந்தை அழும் தன்மை - அதாவது சாமானியமாகத் தாய்மார்கள் கவனிக்கக்கூடிய அறிகுறி - சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தவிர மருத்துவ நூல்கள் செய்யுள் வடிவத்தில் இருந்தாலும், நோயின் தன்மையை விவரிக்கும் சொற்றொடர்கள் மக்கள் பயன்படுத்தும் வழக்குகளோடு ஒத்திருக்கின்றன. வைத்தியம் பயில்பவர் இந்தச் செய்யுள்களை மனப்பாடம் செய்ய வேண்டும். 96 கண் நோய்களென்றால் செய்யுளில் உள்ள அவற்றின் முக்கிய அறிகுறிகளை மனனம்செய்வது பயிற்சியின் முதல் கட்டம். பின்னர் நோயாளியைப் பார்த்து அவற்றை நடைமுறையில் கண்டறிய வேண்டும். ஏட்டில் படித்தலுக்கும் அசலில் பார்த்தலுக்கும் உள்ள வித்தியாசத்தை நோயாளியின் கண்ணோட்டத்தில் நோய்களை வகுத்ததால் குறைக்க முடிகிறது.

சான்றாக உலகமெங்கும் பரவலாகப் பெண்களுக்கு - அதிலும் உடலுழைப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு - தொடர்ச்சியாக ஏற்படும் இடுப்பு வலி என்பது வாதை மிகுதியாயினும் அதன் குறியீடுகளைத் தொழில்நுட்பக்கருவிகள் காட்டாததால் அது உளவியல் நோயாகக் கருதப்பட்டு வலிநிவாரணிகள் கொடுக்கப்படுவதைப் பெண்ணிய ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதனால் கோளாறு இன்னதென்று தெரியாமல் வலிநிவாரணிகளைக் கொடுப்பதால் தூக்க மாத்திரைகள், வலிநிவாரணிகளின் விற்பனை மேலை நாடுகளில் பலமடங்கு பெருகியுள்ளது.

இந்திய மருத்துவ முறைகளில் வலி என்பது வாத, பித்த, கப வலி என்று அதன் தன்மையைப் பொறுத்துப் பிரிக்கப்பட்டு அதற்குத் தகுந்த மருந்துப் பொருளிலான ஒத்தடம், பத்து, எண்ணெய் அபியங்கம், ஆவியில் வைக்கும் ஸ்வேதனம் போன்ற சிகிச்சை முறைகள் கையாளப்படுகின்றன. ஒத்தடம், பத்து ஆகியவை வெட்டுக்காயம், இரத்தக்கட்டு, ஜன்னி போன்ற ஆபத்தான நிலைகளுக்கும் தினசரி ஏற்படும் வலிகளுக்கும் பொருந்தும். இதனால் சித்த முறையில் எல்லாவற்றையும் குணப்படுத்த முடியும், அலோபதி தீய விளைவுகளை மட்டுமே கொடுக்கும் என்று இங்குக் கூறவில்லை. நமது கூற்று என்னவென்றால் நோயாளி மட்டுமே உணரக்கூடிய வலி என்னும் அனுபவத்தை மருத்துவ முறைகள் கையாள்வது எப்படி என அலசி மருத்துவம் பற்றிய சமநோக்கு பெற வேண்டும் என்பதாகும்.

இதுவரை நோயாளியின் அனுபவம் சித்த மருத்துவக் கோட்பாடுகளில் நோய்க்கூறு முதன்மையாகக் கருதப்படுகிறது என்று பார்த்தோம். தமதுடலின் உள்நிகழ்வுகளை ஐம் புலன்களையும் அந்தக்கரணங்களையும் கொண்டு அறிய முடியுமென்று கண்ட சித்தர்கள் நோயாளியையும் அறிதலையுடையவராகக் கருதினார்கள் என்று பார்த்தோம். நோயாளியின் கூறும் அறிகுறிகள் பாகுபடுத்தப்பட்டுத் திரும்பத் திரும்ப நிகழ்வனவற்றை மருத்துவ நூல்கள் முறைப்படுத்தியிருப்பதையும் இதுவரை சொன்னோம். நோயாளியை மையமாகக்கொண்டதால் இதில் நிபுணத்துவம் இல்லை என்று பொருள் அல்ல. நோயாளியின் அனுபவம் நோயைக் கண்டறிவதில் முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால் இதையடைய நாடிப் பரிசோதனையில் தேர்ச்சி பெறுவதும் இதனடிப்படையில் சிகிச்சைகளை முடிவுசெய்து குணப்படுத்துவதும் நிபுணத்துவம் சார்ந்தவை. என்றாலும் மருத்துவ நிபுணர் சமுதாயத்திற்கும் மனித தர்மத்துக்கும் அப்பாற்பட்டவரல்லர் என்பது முடிவிலும் நோயாளி தனக்குக் குணமாகிவிட்டது என்று நம்பினால் தான் வைத்தியனுக்குப் பணம் கிடைக்கும் என்ற நிலையிலிருந்து விளங்கும். தொடக்கம் மட்டுமன்றி, முடிவும் நோயாளியை மையமாகக் கொண்டுள்ளது இம்முறை.

முடிவு யார் கையில்?

முதலில் நடைமுறையில் வைத்தியம் எப்படி நடக்கிறது என்று பார்ப்போம். நோயாளி தன்னிடம் வந்ததும் அவரைப் பரிசோதித்துவிட்டு நோயைக் குணப்படுத்த முடியுமா முடியாதா என்பதை வைத்தியர் முதலில் சொல்ல வேண்டும். முழுவதும் குணமடையக்கூடியவை, ஓரளவு குணமாகக்கூடியவை, குணப்படுத்தவே முடியாதவை, வாதையை மட்டும் நீக்கக்கூடியவை என்று செவ்விய நூல்களிலும் பிற மருத்துவ நூல்கள் யாவிலும் நோய்கள் பாகுபடுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.

நோயை இவ்வளவு நாட்களில் குணப்படுத்த முடியுமென்று வைத்தியன் சொல்லி அதன்படி செய்யாவிட்டாலோ நோயாளிக்குப் பூரண குணம் கிட்டவில்லை எனத் தோன்றினாலோ அவருக்குக் கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுக்காமலிருக்க நோயாளிக்கு உரிமையுண்டு. பெரும்பாலும் திருப்தியில்லை என்று சொல்லிப் பேசிய பணத்தைக் கொடுக்காமல் இழுத்தடிப்பவர்களும் உண்டு.

இந்நூற்றாண்டின் தொடக்கம்வரை கிராமங்களில் வைத்தியருக்கு மானியமாக நிலமோ தானியமோ வழங்கப்பட்டு வந்தது. எனவே தனியாக வைத்தியருக்கு என்று பணம் கொடுப்பதில்லை, மருந்துக்குத்தான் காசு. அதுவும் விஷக்கடி, நாய்க்கடி போன்ற அபாயமான நிலைகளுக்குக் காசு வாங்கக் கூடாது என்ற நியதி உள்ளது. ஒருமுறை விரியன் கடிபட்டு உயிருக்குப் போராடிய இளைஞனுக்காகக் கிராம விஷக்கடி வைத்தியரை பஸ் நிலையத்திலிருந்து கூட்டிவந்தார்கள். மருந்து கொடுத்துப் பிறகு மந்திரித்து முப்பது நிமிடத்தில் இளைஞனை எழுந்து உட்காரவைத்தார். இரண்டு ரூபாய் காணிக்கையைச் செலுத்திவிட்டுச் சென்றார்கள் (இதற்கு மருத்துவமனையில் 1500-2000 ரூபாய் செலவாகும்). வைத்தியரிடம் பேசியபோது, “மருந்துதான் முக்கியம். 94 விஷங்களுக்கும் மருந்து தனித் தனியாகச் செய்து கண்ணாடி பாட்டிலில் வச்சிருக்கம். பாம்பைக் கண்டு சொன்னதாலயும் கடிவாயில வீக்கம் இருந்ததாலயும் விரியனுக்குள்ள மருந்தை கொடுத்தது. மந்தரம் ஒரு மனசாந்திக்குத்தான். இது எங்களுக்குக் கர்மதொழில்; காசு வாங்கமாட்டோம். உயிருக்கு ஆபத்துன்னு வர்றவன்கிட்டக் காசு கேக்கலாமா?” என்றார்.

மானியமெல்லாம் போய்விட்ட பிறகும் உள்ளூர்காரர்கள் இன்றும் பணம் கொடுக்கச் சுணங்குகிறார்கள். அசலூரிலிருந்து வருபவர்கள்தாம் ஏதாவது கொடுக்க வேண்டும். சாமர்த்தியக்காரர்கள் சிலர் வெளியூரிலிருந்து வந்தாலும் உள்ளூர்காரரை உடன் அழைத்துவருவார்கள். அசீரணம், முள்குத்து, காமாலை போன்ற ஓரிரு சாதாரண நோய்களுக்கு மருந்து தருபவர்கள் பெரும்பாலும் பகுதிநேர நாட்டு வைத்தியர்கள்தாம்; இவர்களது பிழைப்பு வைத்தியத்தை நம்பி இராது. விவசாயம் அல்லது வேறு தொழில் இருக்கும் ஏனென்றால் இந்த வைத்தியம் ஊர் சொத்து போல, சம்பாத்தியத்திற்கல்ல. பாண்டித்தியம் பெற்ற முழுநேர வைத்தியர்கள்கூட கன்சல்டேசன் பீஸ் வாங்க முடியாது. மருந்துக்கு என்று சொல்லித்தான் வாங்க முடியும். அதிலும் விலை நிச்சயமில்லை, பேரமிருக்கும். ஆக வைத்தியன் - நோயாளி உறவில் பின்னவரின் கை ஓங்கியிருக்கும்.

நவீன மருத்துவமனைகளில் வந்தவுடன் நோயாளியிடம் கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு பின்னர் வைத்தியம் செய்யும் அலோபதி, கல்லூரியில் பட்டம் பெற்ற சித்த ஆயுர்வேத மருத்துவர்கள், ஆண்மைக் குறைவுக்கு லேகியம் தரும் சித்த மருத்துவர்கள் ஆகியோரைக் கண்டு இந்தப் பரம்பரை வைத்தியர்கள் ஆச்சரியப்படுகிறார்கள். நோயாளியைக் குணப்படுத்தாமல் கட்டணம் பெறுவது இவர்கள் பின்பற்றிய கொள்கைகளுக்குப் புறம்பானது. ஏனென்றால் மருத்துவம் சமூக நிறுவனம்போல் பார்க்கப்பட்டது. இப்பார்வை நோயாளிக்குப் பாதுகாப்பு அளித்தாலும் வைத்தியனின் திறமையைக் குறைத்து மதிப்பிடுவதற்குக் காரணமாக இருந்தது. உரிய அங்கீகாரம் அவர்களுக்குக் கிடைப்பது அரிதாக இருந்தது. கிராமத்தில் அவர்களது அதிகாரம் அவர்கள் கடைப்பிடித்த நெறிகளாலும் வெளியூர் நோயாளிகளின் எண்ணிக்கையாலும் குடும்பப் பெயராலும் அமைந்தது. சமயங்களில் குலத்தாலும் வந்தது. எப்படியாயினும், நோயாளி சார்ந்த மருத்துவத்தில் நிபுணர்களுக்குள் உறவு பெரிதாக இருக்கவில்லை எனத் தோன்றுகிறது; அதனால்தான் நோயாளி கை ஓங்க முடிந்தது.

நிபுணர்களுக்கிடையே உறவுகள் வலுப்பெறுவது நிபுணத்துவம் சார்ந்த மருத்துவத்தில்தான் சாத்தியம். 19ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவிலும் பின்னர் அமெரிக்காவிலும் அலோபதி மருத்துவர்கள் சங்கங்கள் அமைத்து அரசாங்க அங்கீகாரம் பெற்றபோது எந்த உருப்படியான சிகிச்சையோ மருந்துகளோ கண்டுபிடிக்கப்படவில்லை. அவர்கள் கடைப்பிடித்துவந்த கிரேக்க - ரோமானிய மருத்துவ முறையில் எதற்கெடுத்தாலும் இரத்தத்தை விடுதல் அல்லது எனிமா கொடுத்தல் என்று மொத்தம் 10 சிகிச்சை முறைகள்கூட இல்லை. ஆனால் சங்கங்களின் வலிமையால் அவர்கள் கட்டணத்தை நிர்ணயித்து அரசாங்க ஆதரவையும் பெற்றனர். இதனால் தான் அலோபதி மருத்துவத்தின் அதிகாரம் அதன் மருத்துவத் திறனால் அல்லாமல் அதன் அரசியல் வலிமையால் ஏற்படுகிறது என்று சமூக வரலாற்றாசிரியர்கள் கூறுவார்கள்.

இந்திய மருத்துவ முறைகளில் தாவர, மாமிச, உலோக, கனிமப் பொருள்கள் கொண்ட உள்மருந்துகள் ஐம்பதினாயிரம் உள்ளன என்று சமீபத்திய ஆய்வொன்று தெரிவிக்கிறது. வைத்தியத் திறன்கள் தனிப்பட்ட வைத்தியர்களின் ஊக்கத்தால் வளர்ந்தன; ஊராலும் அரசர்களாலும் சிலர் அங்கீகரிக்கப்பட்டிருக்கலாம். ஊர் விசுவாத்தால் நாட்டு வைத்தியர்கள் தமக்குள் நிபுணர்களாகப் பரிமாற்றம் செய்வதற்கு வாய்ப்பு இருக்கவில்லை. நகரங்களில் வாழ்ந்த வைத்தியர்கள் நிலைமை சற்றுப் பலமானதாக இருந்தது; எந்நிலையிலும் பணம் கொடுப்பதில் நோயாளியின் கை ஓங்கியிருந்தது.

சிகிச்சையில் நோய் குணமாவதும் ஆகாமலிருப்பதும் எந்த மருத்துவ முறையிலும் நடப்பதுதான். ஆனால் நோயாளியை அறிபவராகக் கருதி அவருக்கு உரிமைகளை எல்லா முறைகளும் வழங்குவதில்லை. மேற்கத்திய முறைகளில் நவீனத்துவத்தால் ஒடுக்கப்பட்ட ஹோமியோபதி நோயாளிக்கு முக்கியத்துவம் வழங்குகிறது. ஆனால் அது வரையறைக்குட்பட்ட சிகிச்சை முறை மட்டுமே. நோயுறுபவரும் நோயறிபவரே என்ற கொள்கை முழுவதுமாகச் சித்த மருத்துவ முறையின் எல்லாப் பரிமாணங்களிலும் அமைந்திருக்கிறது. அரிய மருத்துவத் தகவல்களும் மூலிகையறிவும் சிகிச்சை முறைகளும் சாமானிய மக்களிடையே பரவிக் கிடந்தது இக்கொள்கையின் சமூக வடிவைக் காட்டுகிறது. பிள்ளைப் பிராய நோய்களைக் கண்டிக்க நாற்பது மூலிகைகள் கொண்ட மருந்தைச் சாமானியமாக வலைய சமூகத்துப் பெண்கள் பிள்ளைகளுக்கு மாதா மாதம் செய்துதருவதும் ஜுரத்திற்கு மூலிகைகளாலான சன்னி பொட்டலம் கட்டுவதும் இன்றும் நடக்கிறது. இது போன்ற நூற்றுக்கணக்கான மருத்துவ முறைகள் பொதுமக்களிடையே விரவிக்கிடக்கின்றன. உணவே மருந்து மருந்தே உணவு என்ற கருத்துப்படி கால தேச மாறுபாட்டிற்கு ஏற்றபடி உணவுப் பழக்க வழக்கங்களை மக்கள் வகுத்துவைத்திருந்தனர். சித்தர்கள் நாட்டார் வழக்குகளில் மருத்துவக் கருத்துகளைப் சொல்லிவைத்து, ஊர்களைச் சுற்றி வந்து பரப்பியதும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம்வரை மருத்துவ நூல்கள் ஆரம்பப் பள்ளிகளில் பயிற்றுவிக்கப்பட்டதும் ஆரோக்கியம் மக்களது மருத்துவ அறிவை வளர்ப்பதால்தான் விளையும் என்ற சித்தாந்தம் பரவியிருந்தமைக்குச் சாட்சியங்களாகும்.

அலோபதி போன்ற நிபுணர் அதிகாரத்திலியங்கும் முறையில் வரப்போகும் ஆபத்தைப் பற்றிப் பயமுறுத்தி எல்லோரையும் மாத் திரைகளுக்கும் அறுவை சிகிச்சைகளுக்கும் உடன்படவைப்பது மருத்துவ முறையின் தன்மையென்றாலும், இதில் தொழில்நுட்பக்கருவிகள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் மருந்துக் கம்பெனிகளுக்கும் பெரும் பங்குண்டு. நிபுணர் சார்ந்த மருத்துவ முறைகள் இலாப நோக்கைப் பிரதானமாகக் கொண்டவை. முதலாளித்துவ அமைப்பில் இப்படித்தான் இருக்கும் என்றும் கம்யூனிச அமைப்பில் அலோபதி மருத்துவம் இப்படி இராது என்றும் சோசலிச ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஏராளமான பண முதலீடு தேவைப்படும் தொழில்நுட்பங்களை விடுத்து, தேவைக்கேற்ற கருவிகளைத் தேர்ந்து நோயாளியை மையமாகக் கொண்ட மருத்துவம் சோசலிசத்தில் வளர்க்கப்படும் என்று சிலர் கூறுகின்றார். அலோபதி மருத்துவம் முதலாளித்துவத்தோடு பிணைந்து உருவானது, உள் உறுப்புகளில் நோயைக் காணும் இம்முறை மருந்து மற்றும் தொழில்நுட்பக் கம்பெனிகளின் முதலீடின்றி இயங்க முடியாது என்று வேறு அறிஞர்கள் சிலர் கருதுகின்றனர். இந் நிலையில் உடல்கூறு பற்றிய மாற்று அறிவியல்கள் உள்ளனவா என்று உலகில் பல நிறுவனங்கள் தேடிவருகின்றன.

பழைமை நவீனம் என்று பாகுபடுத்தி, வாழும் திறன்களைக் கடந்த காலமாக்குவது ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல. சித்த மருத்துவத்தில் குறைபாடுகள் உண்டு. ஆனால் இன்றைய சமுதாயத்தில் இக்கேடுகளைக் களைந்து மருத்துவ அறிவை மீட்க முடியும். ஒருதலைப்பட்சமான அலோபதி மருத்துவத்தின் ஆதிக்கத்தைக் குறைத்துப் பிற அறிவியல் முறைகளையும் சமமாகப் பாவிக்கும் பன்மையான கண்ணோட்டம் இன்று தேவை.

பரிசோதனைக்கூடங்களில் லட்சக்கணக்கான விலங்குகளைச் சித்திரவதை செய்து, அவற்றைத் தீயில் வறுத்தும் உறையவைத்தும் வியாதிகளை அவற்றுக்கு உண்டாக்கியும் மின்சாரம் பாய்ச்சியும் இன்றைய மருத்துவம் உயிர்கள் பற்றிய அறிவை வளர்க்கிறது. பின்னர் அது கைதிகள், பைத்தியங்கள், ஏழைகள், பழங்குடியினர், மூன்றாம் உலக நோயாளிகள்மீது பரிசோதிக்கப்படுகிறது. அறிதலில் இது ஒரு வகை.

இயற்கை நிலையில் விலங்குகளைக் கவனித்து ஹடயோக முறைகளை வகுத்த யோகசூத்திரமும் தம்மையே பரிசோதனைக்கூடமாக மாற்றி அறிதலை வளர்க்கும் மெய் ஞான தத்துவத்திலிருந்து வந்த சித்த மருத்துவமும் உடற்கூறு பற்றிய அறிவியல்கள்தாம். உடம்பு, உயிர், மனம் இவற்றுக்கும், தத்துவம், மருத்துவம் சமுதாயம் இவற்றுக்கும் உள்ள உறவை வேறுவிதமாகவும் புரிந்துகொள்ள வாய்ப்புகள் மூன்றாம் உலகில்தான் நிறைய உள்ளன.

நிபுணர் சார்ந்த நவீன அறிவியல் தொழில்நுட்பங்கள் பிரம்மாண்டமான மாற்றங்களை விளைவிக்கக் கூடியவை. ஆனால் இந்தப் பிரம்மாண்டத்தில் நிபுணரல்லாத சாமானியர்கள் நிலைமை பலவீனமானதாகும். அணுமின் உலை, வேதியல் உரம் மற்றும் புது வேதியியல் மருந்துகள் போன்றவற்றில் மூழ்கியுள்ள அறிவியல் நிபுணர்கள் லட்சக்கணக்கானோர் வாழ்வாதாரங்களைப் பாதிக்கக்கூடிய தமது பரிசோதனைகள் பற்றிச் சமுதாயத்திற்கு எந்த விளக்கமும் கொடுக்க வேண்டியதில்லை என்று எண்ணுமளவுக்கு இவர்கள் ஆதிக்கம் வளர்ந்துவிட்டது. நிபுணர்களின் ஆதிக்கத்தை ஜனநாயகக் கட்டுப்பாடுக்குள் கொண்டு வர மக்கள் மன்றங்கள், தன்னார்வக் குழுக்கள் தேவைப்படுகின்றன. பல சமயம் இவை வெல்ல முடிவதில்லை. மக்கள்சார்ந்த அறிவியல் இருக்க முடியுமா? நுட்பமுள்ள நிபுணத்துவம் மக்கள் அனுபவத்தை ஒட்டி எழ முடியுமா? பிரம்மாண்டத் திட்டங்கள், கருவிகள் இல்லாத அறிவியல் எப்படி இருக்கும் என்ற தேடலின் ஒரு பகுதிதான் இந்தக் கட்டுரை.

கட்டுரையாளர் தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.

வி. சுஜாதா

எழுதியவர் : (25-Nov-18, 5:37 pm)
பார்வை : 103

மேலே