வெண்பாத் துணர்

வெண்பாத்_துணர்...!!!
************************

குறள் வெண்பா ...!!!
**********************
கண்ணன் குழலிசை காற்றில் கலந்துவர
வண்ணமாய்ப் பூத்தது வான்.

நேரிசைச் சிந்தியல் வெண்பா....!!!
****************************************************
கண்ணனைக் கண்டதும் கன்னியர் காதலில்
எண்ணிலாப் பாக்க ளிசைத்திட - நண்பகலில்
மண்ணி லிறங்கியது வான்.

நேரிசை வெண்பா....!!!
*************************
கண்ணன் வரவில் கலாபம் விரித்தழகாய்த்
தண்டலையில் நீலமயில் தானாடும் - மண்ணிலிந்தக்
கண்கவருங் காட்சியைக் கண்டு மகிழ்ந்திடும்
வண்ணச் சிரிப்பொடு வான்.

இன்னிசை வெண்பா ....!!!
****************************
கண்ணனவன் செய்திடுங் கள்ளத் தனமறிந்தும்
கண்டிக்க உள்ளமின்றிக் காத்திருக்குந் பெண்ணவளின்
வண்ணமலர்ப் பாதம் வணங்கித் திரும்பிட
மண்ணிற்கு வந்தது வான்.

பஃறொடை வெண்பா ....!!!
*****************************

கண்ணன் மலர்முகம் காணாமல் வாடிநிற்கும்
வெண்மதியும் வானத்து வீதியில்! - தண்ணளியாள்
சோகத்தைத் தீர்த்துச் சுகமளிக்க வாரானோ
மோகத்தில் தாரானோ முத்தமொன்று - மேகங்கள்
கொண்டலுடன் தாளமிட்டுக் கொஞ்சுகையி லின்புடன்
மண்ணில் பொழிந்தது வான்.

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (9-Dec-18, 3:51 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 72

மேலே