துப்பின் சுழற்றும்கொல் கல்தூணைச் சூறாவளி – நன்னெறி 11
’ய்’ ஆசிடையிட்ட எதுகை அமைந்த இருவிகற்ப நேரிசை வெண்பா
பொ’ய்’ப்புலன்கள் ஐந்துநோய் புல்லியர்பால் அன்றியே
மெ’ய்’ப்புலவர் தம்பால் விளையாவாம் - துப்பின்
சுழற்றும்கொல் கல்தூணைச் சூறா வளிபோய்ச்
சுழற்றும் சிறுபுன் துரும்பு. 11 - நன்னெறி
பொருளுரை:
சுழற்காற்றானது சென்று சிறிய நொய்தலாகிய துரும்பை எடுத்துச் சுழற்றும்; அது தன் வலிமையால் கல்லுக் கம்பத்தைச் சுழற்றுமோ? சுழற்ற மாட்டாது;
அதுபோல, பொய்யாகிய ஐந்து புலன்களும் புல்லறிவாளரிடத்து அல்லாமல், மெய்யறிவு உடையவரிடத்தே துன்பத்தைச் செய்ய இயலாது.