விவசாயம் காப்போம்
விவசாயி
இவன் வயலை அழிக்க
முயல் வருகின்றது
புயல் வருகின்றது
ரயில் வருகின்றது
மயில் வருகின்றது
ஆனால் உழைப்பின் ஊதியம் இவன் கையில் வருவதில்லை
நிலத்தில் இவன் வாழை வைக்கிறான்
இயற்கை இவனை வாழ வைப்பதில்லை
இயற்கை இவன் இருக்கையை மட்டும் அழிப்பதில்லை இவனின் இரு கையையும் அழிக்கின்றது
இயற்கையின் சீற்றம் இவனை இயற்கை எய்த செய்கின்றது
ஏர் உழுபவன் வாழ்க்கை ஏற மறுக்கின்றது
காலையிலிருந்து
மாலை வரை
உழுபவன் காலை
காளை வாரி விடுவதில்லை நிர்ணயிக்கப்படும் விலைதான் வாரி விடுகின்றது
இவன் தென்னங்கன்றில் நீர் பிடிப்பதைவிட
இவன் கண்ணில் அல்லவா நீர் அதிகம் பிடிக்கிறது
இவன் உடலில் சதை வேர்வை வைக்கும் அளவிற்கு
இவன் திடலில் விதை வேர் வைப்பதில்லை
காரணம் மேகம் நீர் வைப்பதில்லை
இவனின் மண்வெட்டி
மண்ணில் வெட்டும் போது பாயாத நீர்
இவன் கண்ணில்
வெட்டாமல் பாய்கின்றது
மண்டியில்
இவன் மண்டியிட்டு கிடக்கின்றான்
விடியலுக்காக
பயிர் மூட்டை
கட்டமுடியாத போதெல்லாம் இவன் உயிர் மூட்டை கட்டப்படுகிறது
கவிஞர் புதுவை குமார்