எழுதியவாறே காண் இரங்குமட நெஞ்சே – மூதுரை 22
நேரிசை வெண்பா
எழுதியவா றேகாண் இரங்குமட நெஞ்சே
கருதியவா றாமோ கருமம் - கருதிப்போய்க்
கற்பகத்தைச் சேர்ந்தோர்க்குக் காஞ்சிரங்கா யீந்ததேல்
முற்பவத்திற் செய்த வினை. 22 - மூதுரை
பொருளுரை:
வருந்துகின்ற அறியாமை பொருந்திய மனமே!
நல்ல பயனைப் பெறலாம் என்று நினைத்துப் போய்க் கற்பகத்தருவை அடைந்தவர்க்கு அது கசக்கும் எட்டிக்காயைக் கொடுத்தது என்றால், அதற்குக் காரணம் அவர் முற்பிறவியில் செய்த தீவினையாகும்.
செய்தொழில்கள் நீ நினைத்தபடியே ஆகுமா! கடவுள் விதித்த விதிப்படிதான் ஆகும் என்று அறிந்து கொள்.
கருத்து:
செய்தொழில்கள் ஊழின்படியன்றி அவரவர் நினைத்தபடி நடைபெறாது.