நெஞ்சிற் கரவுடையார் தம்மைக் கரப்பர் – மூதுரை 25
நேரிசை வெண்பா
நஞ்சுடைமை தானறிந்து நாகங் கரந்துறையும்
அஞ்சாப் புறங்கிடக்கும் நீர்ப்பாம்பு - நெஞ்சிற்
கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார்
கரவிலா நெஞ்சத் தவர். 25 - மூதுரை
பொருளுரை:
விடப்பாம்பான நாகம், தான் விடம் உடையதாயிருத்தலை அறிந்து மறைந்து வசிக்கும். விடமில்லாத தண்ணீர்ப் பாம்பு அஞ்சாமல் வெளியே இருக்கும்.
அது போல, மனத்தில் வஞ்சனையை உடையவர் தம்மைத் தாமே மறைத்துக் கொள்வர். வஞ்சனை இல்லாத மனத்தை உடையவர் தம்மை மறைத்துக் கொள்ள மாட்டார்.
கருத்து:
வஞ்சனையுடையவர் மறைந்தொழுகுவர்; வஞ்சனையில்லாதவர் வெளிப்பட்டொழுகுவர்