நேரல்லார் நீரல்ல சொல்லியக்கால் தாரித்திருத்தல் தகுதி – நாலடியார் 72

இன்னிசை வெண்பா

நேரல்லார் நீரல்ல சொல்லியக்கால் மற்றது
தாரித் திருத்தல் தகுதிமற் - றோரும்
புகழ்மையாக் கொள்ளாது பொங்குநீர் ஞாலம்
சமழ்மையாக் கொண்டு விடும். 72

- பொறையுடைமை, நாலடியார்

பொருளுரை:

தமக்குச் சமானமல்லாதவர் குணமல்லாதனவான சொற்களைச் சொன்னால் சான்றோர் அதனைப் பொறுத்திருத்தல் தகுதியாகும்;

அங்ஙனம் பொறுத்திராமையை கருதத் தகுந்த புகழ்க்குரிய குணமாகக் கொள்ளாமல், கடல் சூழ்ந்த இவ்வுலகம் பழிப்புக்குரிய இழிகுணமாகக் கருதிவிடும்.

கருத்து:

தமக்குச் சமானமல்லாதவர்கள் தம்மை ஒன்று சொன்னால் அதனைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்.

விளக்கம்:

நேரல்லாரென்றது கீழோரை.

தரித்து என்பது முதல் நீண்டது.

இருத்தல் - மேன்மேலுந் தனதொழுக்கத்திலேயே நிலைத்திருத்தல்.

‘ஞாலம்' என்றது உயர்ந்தோரை. கொண்டுவிடும் என்னும் முடிபு ஞாலம் என்னும் சொன்னிலை கருதியது.

சமழ்மை என்றது இழிவு;

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (25-Feb-19, 6:25 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 70

மேலே