தலைசாய மடி வேண்டும்

தேடாமல் கண்டெடுத்த
தெய்வத்தைவிட்டு
தேடித் திரிந்தேன்
தெருக்கள் எல்லாம்...

அம்மா!!!
நீ திட்டும் பொழுதெல்லாம்
சீண்டினேன் -இன்று
உன் திட்டல் என்னைத் தீண்ட
வேண்டினேன்...

காற்றுடன் போட்டியிட்டேன்
சுற்றித்திரிய - இன்று
காத்திருக்கிறேன் உன்
கட்டுப்பாட்டில் கிடக்க...

ஆசைகள் ஆயிரம் உண்டு
அன்னை உன் மடியில் படுத்து பேச,
இருந்தும் நாட்கள் கிடைக்கவில்லை
உன்னை காண...

அம்மா ,
உன்னை கட்டியணைத்து
கதைகள் பல பேசவேண்டும்,
உன்னை பிரிந்து நான்
பட்ட வேதனையையும்
தொட்ட துயரத்தையும்
கண்ணீரில் பேச வேண்டும்..

எங்கேயோ நீ- உன் நினைவில்
இங்கே நான்.
வாழ்க்கை தேடி வந்தேன்
வழி மறந்தேன் போலும்,
திக்கற்ற காட்டில்
திசைதேடி அலைந்து கொண்டிருக்கின்றேன்.

இத்துணை துயரங்களிலும் ஒரு நம்பிக்கை
" உன் அன்பு "
இன்று இல்லையென்றாலும்
என்றாவது ஒருநாள்
உன்னை கண்டுவிடுவேன் என்று..

கலைத்து எழ இது கனவு அல்ல
போர்களத்தின் விளிம்பில் நான் ,
என் பலம் நீ,,,,
நிச்சயம் வெல்வேன்
நானும் ஒருநாள்
ஓடி வருவேன் உன்னை நோக்கி
வெற்றிக்கோப்பையை சுமந்துகொண்டு ...

தொலைவில் இருந்தாலும்
துரத்துகின்றன உன் நினைவுகள்.
அருகில் இருந்த கணங்களெல்லாம்
அறியத் தவறினேன்
உன் அன்பை..
இன்று,
காண முடியா தொலைவில்
காத்து நிற்கின்றேன்
உன் வருகையை நோக்கி..

நீ இன்றி வழ்ந்துவிடுவதாக
தெரிவித்தேன்-அன்று
உன் நிழல் தேடி
காத்திருக்கின்றேன்-இன்று...
கண்ணுக்குத் தெரியாத
கடவுள்களைத் தேடி ஓடினேன்,
கண்முன் நின்ற உன்னை மறந்து வாடினேன்..

அம்மா!!
என்னைத் தேடி வருவாயா
தலைசாய உன்மடி வேண்டும் தருவாயா.....

எழுதியவர் : பிரபுகுமார் நாகேஸ்வரி (25-Mar-19, 8:00 pm)
சேர்த்தது : PrabhuKumar Nageswari
பார்வை : 592

மேலே