சகடம் ----------------------------------சிறுகதை -----------------------------விவாதம் –

ஜெ,

.

நண்பர் நாகபிரகாஷ் எழுதிய கடிதத்தை வாசித்தேன். முதலில் விமர்சனங்களால் அவர் ஏன் தன்னை இவ்வளவு சிக்கலாக்கி கொள்ள வேண்டுமென்று எனக்கு தோன்றுகிறது. அவர் கருத்தை இரு விதத்தில் நான் நிராகரிக்கிறேன்.

ஒன்று நிங்கள் எனக்கு புதிய வாசகர் சந்திப்பில் சொன்னது நியாபம் வருகிறது என் கதையை படித்துவிட்டு ஒரு டால்ஸ்டாய் வாசகனக்கு நீ தரும் கதையா இது என்றீர்கள். இல்லையென்று மழுங்க மண்டையை ஆட்டினேன். அதிலிருந்து ஒன்று புரிந்துக்கொண்டேன் விமர்சனம் பெருகிறோமென்பதை விட அதே யாரிடமிருந்து வருகிறது என்பது மிக முக்கியமான ஒன்று. அவ்வாறு ஒரு நல்ல வாசக ஆளுமை இவர் கதையை விமர்சனம் செய்திருந்தால் கூட நீங்கள் எனக்கு முடித்துவைத்ததை தான் அவருக்கும் சொல்வேன் இதை ஒரு சவாலாக எடுத்துக் கொள்ளவும் மனம் தளர வேண்டாமென்றீர்கள். அந்த சந்திப்பிற்கு முந்தைய கடிதத்தில் சு.ரா எப்படி கடுமையாக விமர்சிப்பவர் என்று குறிப்பிட்டிருந்தீர்கள், நித்யா ஒரு மேடையிலலேயே உங்கள் கட்டுரையை கிழித்தை சொன்னீர்கள் அதிலிருந்தே ஜெயமோகன் என்னும் ஆளுமை வெளி வந்துள்ளது என்பது ஊர் அறிந்தது. ஆகையால் விமர்சனங்களை கணக்கில் கொண்டு எழுதியதெல்லாம் மூட்டை கட்டி விட்டு படிக்கலாம் என யோசிப்பது சரியில்லை. எழுத எழுதவே பண்படுவோம் நீங்கள் எனக்கு சொன்னது.

இரண்டு சுமாரான கதைகள் பல கொண்டாடப்படுகிறது என அவர் கூறுவதை முற்றும் நிராகரிக்கிறேன். அது நமக்கு எந்த சூழலிலும் தேவையில்லை என்றே நினைக்கிறேன் நாம் எழுதுவது நமக்காக மட்டுமே இரண்டாம் நிலையிலேயே விமர்சனங்களை வைக்க வேண்டும். ஆனால் இலக்கியத்தில் ஒப்பிடுவதற்கு எந்த வித இடமுமில்லை முதலில் திருப்தி பெற வேண்டியது நாம் தான் அதன்பின் செவி சாயிக்க வேண்டியது நம் கதைக்கான விமர்சனத்தை மட்டுமே.

இக்கதையை பொருத்த வரை அவர் எடுத்த ஒரு வித்தியாசமான முயற்சி என்ற நான் நினைக்கிறேன். புதுமைபித்தன் முதல் அனைவரும் எடுத்துக்கொண்ட தீம் தான், எனக்கு உங்கள் பல்லக்கு கதை நியாபகம் வந்தது. ஆதலால் கதை கூறும் முறையிலும் அதனை எடுத்து செல்லும் விதத்திலும் ஒரு மாற்றத்தை வேண்டியிருக்கிறார் நாகபிரகாஷ். ஆனால் கதையின் மைய சரடிலிருந்து அப்பப்போ விலகயே சென்றிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். கதையின் மைய ஒட்டத்திலிருந்து விலகியே யோகாசனமும் திவாகரன் உடனான உரையாடலும் அமைகின்றன. அதை தவிர்த்து வாசிக்கையில் ஒரு நல்ல கதைக்கான முயற்சியாகவே இதனை நான் பார்க்கிறேன்.

மேலும் பல நல்ல படைப்புகள் நாகப்பிரகாஷிடமிருந்து விரைவில் வரும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.

நன்றி,

நவின்.ஜி.எஸ்.எஸ்.வி.

ஜெ

சகடம் கதை பற்றி…

முதல் வாசிப்பு:

அமுதனின் பார்வையில் கதை தொடங்குகிறது. அங்கங்கே அவன் பங்கு பெறாத காட்சிகள் கதைச்சொல்லியின் பார்வையில் வருகின்றன. கதையில் இறுதியில் கதைச்சொல்லியின் பார்வையில் ஒரு flashback காட்சி. ஒரு தருணத்தில், ஒரு வாசகத்தில் கதை முடிகிறது.

முதல் வாசிப்பில், அந்த நினைவு அமுதனின் பார்வையில் விரிவதில்லை என்பதை கவனிக்கவில்லை. கவனித்திருந்தால் இந்த கதையை எளிதில் கடந்து சென்றிருப்பேனோ என்னவோ!

நாயை ஒருவர் அடிப்பதில் இருந்து, தன்னைதானே ஒருவர் வருத்திக்கொள்வது (தீவிர யோகா) வரை மற்றவர்களின் செயல்கள், காட்சிகள் மற்றும் அதற்கு தனது மனதின் எதிர்வினைகள் பற்றி அமுதன் கூறி வருகிறான். ஐந்தாம் வகுப்பு படிக்கக்கூடும் என நான் உருவகிக்கும் சிறுவனின் அவதானிப்புகள் கொஞ்சம் பெரிய மனுஷ தனமாக இருக்கின்றன. கூர்ந்து நோக்கும் தன்மை உடைவனாகவும் இருக்கிறான். (கடையின் அமைப்பு போன்றவற்றை நுனுக்கமாகவே கவனிக்கிறான்). இப்படி இருப்பவன், ஏன் கடைசியில் தனது தாயை பற்றி பேசி முடிக்கிறான்?? வாசித்து முடித்ததும் என்னுள் எழுந்த முதல் கேள்வி இதுதான்.

எண்ணங்கள்:

ஒரு நல்ல சிறுகதை, கதை முடிந்த பின்பும், வாசகனின் மனதில் நிகழ்ந்துகொண்டிருப்பது. கதையப்பற்றி, கதை மாந்தரின் வாழ்க்கையை பற்றி வாசகனை யோசிக்க வைப்பது.

இந்த கதையின் முடிவு, அதிர்ச்சி அளித்தாலும், அதிர்ச்சி அளிக்க வேண்டுமென வலிந்து திணிக்கப்படவில்லை.

கதை நிகழ்வதே அங்கு தான். அதுவரை அமுதன் பற்றி, பரமேஸ்வரன் பற்றி நாம்முள் எழுந்த பிம்பங்கள் அனைத்தும் உடைந்து, அனைத்தையும் புதிதாக பார்க்க நேர்கிறது. பல கேள்விகளுடன். இரண்டு நாட்களாக இந்த கேள்விகள் மனதை அரித்துக் கொண்டிருந்தது.

அப்பொழுது, தோண்றிய சில எண்ணங்கள்:

1) அவனது அம்மா எங்கே? உயிரோடு இருக்கிறாளா?

பரமேஸ்வரனின் வீட்டில், அவனது நிலையை புரிந்துக்கொள்ளும் வயதில் யாரும் இல்லை என்றால் என்ன அர்த்தம்? அவனது மனைவி இருந்தால், அவளுக்கு புரியாதா என்ன?

கிடைக்காமல் கிடைத்த ஐந்து ரூபயை ஏன் செலவழித்து அமுதனை கடைக்கு கூட்டிச்செல்ல வேண்டும்? வீட்டில் அவனை பார்த்துக்கொள்ள யாரும் இல்லையா?

2) நாயை ஒருவன் உதைப்பதை பார்த்து அமுதன் ஏன் தலையை அடைத்து, கண்களை மூடிக்கொள்கிறான்? Was he abused? Did he see others get abused? Is his father abusive?

3) அம்மா மயங்கி விழுந்தவுடன் ஏன் அங்கிருந்து ஓடிவிட வேண்டுமென எண்ணுகிறான்? பரமேஸ்வரன் மேல் ஏன் கோவம் கொள்கிறான்?

கேள்விகளை மனதில் இருத்தி, இரண்டாம் வாசிப்பு:

இதில் முதல் வாசிப்பின் கேள்விகள் கூர் கொள்ள வில்லை. இந்த கேள்விகள் குறித்து முதல் வாசிப்பில் தவறவிட்ட தகவல்கள் / குறியீடுகள் ஏதும் கிடைக்கவில்லை.

இரண்டாம் வாசிப்பில், பிரதானமாக வந்தது, பரமேஸ்வரனின் கை. கொஞ்சம் பருமனானவர். மெல்லிய கைகள் கொண்டவர். ஆனால் பலமற்றவர்.

//அந்தக் கைகள் நெகிழ்வாக விரிந்து வருவதை உணர்ந்தார். ஒருவேளை இப்படிக் கைகள் முயன்றபோது நீண்டிருந்தால் பணத்தைத் தொட்டுவிட்டிருக்கலாம் என்று தோன்றியது. //

இது பரமேஸ்வரனின் கைகளாகவும் இருக்கலாம் என தோன்றுகிறது.

தந்தையின் பலமற்ற கைகளை பார்த்த அமுதனை, திவாகரனின் திடமான கைகள் ஈர்க்கின்றன. அதற்கான காரணத்தையும் கடைசி காட்சியில் சொல்லிவிடுகிறார் கதைச்சொல்லி.

பரமேஸ்வரனின் பாத்திரம், இந்த வாசிப்பில் உருவாகி வந்தது.

விமர்சனம் / அவதானிப்பு:

கதையை இப்படி எழுதியிருக்கலாம் என கூறுவது சரியல்ல என எண்ணுகிறேன். எழுதிய கதையை அப்படியே ஏற்றுக்கொண்டு எனது எண்ணங்கள் மட்டும்:

1) சிறுகதையின் ஒருமை (unity)

இந்த கதையில் ஒருமை இருப்பதாக எண்ணி வாசிக்கும் பொழுது, தொடக்க பகுதியில் நாயின் பார்வையில் இவ்வாறு தெரியும் என அமுதன் எண்ணுவதாக புரிந்துக்கொண்டு, அந்த வர்ணனையை அமுதனின் கதாபாத்திரத்துடன்

இணைத்துக்கொள்கிறேன். இது மட்டுமல்ல, கதையில் வரும் அதீத தகவல்கள் அனைத்துமே அமுதனின் பார்வையில் தான். அதை கொண்டு அவனை உருவகிக்கிறேன்.

//சுவரை ஒட்டி வைத்திருக்கும் அலமாரி. வெளியிலிருந்து கைநீட்டினாலும் எட்டாது. இருந்தாலும் பூட்டப்பட்டிருக்கும்.//

சிறுவன் இவ்வளவு யோசிக்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழலாம்.

ஆனால் கடைசியில் அம்மாவை தூக்கிச்செல்லும் பொழுது, இவன் வீட்டிற்கு கொண்டி போட்டுவிட்டு தான் செல்கிறான்.

ஆக, இந்த உபரி தகவல்களின் ஊடே அமுதனை புரிந்துக்கொள்ளளாம்.

ஆசிரியரின் எண்ணம் அதுவாக இல்லை என்றால், அந்த பகுதிகள் கதையில் வர வேண்டிய அவசியத்தை அவர் மீண்டும் பரிசீலிக்க வேண்டும்.

1a. நான் அடைந்த கேள்விகள், என்னுள் அடைந்தவை. ஆசிரியர் முன்வைக்க விரும்பும் கேள்வியை குறித்து கதை நகர்கிறதா என்பதை அவர் யோசிக்க வேண்டும். அந்த கேள்வியை நோக்கி செல்ல, இவ்வளவு துணை பாதைகள் அவசியம் என அவர் எண்ணினால், தவறேதும் இல்லை.

ஆனால், அதை தாண்டி, கதைபோக்கிற்கு அவசியமற்றதாக இருப்பதை கண்டிப்புடன் நீக்க வேண்டியதும் ஆசிரியனின் கடமை.

//எனக்கு கொஞ்சுவதற்கு எங்கள் தெரு வழியே போகிற நாய்க்குட்டிகளும் பூனைகளும் தேவைப்படுவது போலவே அம்மாவுக்கு நான் வேண்டும்.//

கதையில் உருவாகிவரும் அமுதனின் கதாபாத்திரத்திற்கும் இந்த வரிக்கும் சம்பந்தம் இல்லை. வாசகனாக, அதையும் உள்ளிழுத்து அமுதனை உருவகிக்க வேண்டியுள்ளது.

இது, ஆசிரியரின் குரலா, ஆசிரியரின் அவதானிப்பா, அல்லது நிஜமாகவே அமுதனின் எண்ணமா?

அம்மா, பாசம், கொஞ்சுதல் போன்றவற்றை இவ்வளவு லௌகீகமாக அந்த வயதிலேயே அவன் பார்க்கிறான் என்றால், அவன் எதையெல்லாம் கடந்து வந்திருப்பான்?!

இதை எத்தனிக்காமல், அமுதனின் குரலாக இல்லாமல், அழகியலுக்காக / தத்துவமாக ஆசிரியர், அவரின் எண்ணமாக இதை அங்கு எழுதியிருப்பார் என்றால், அது கதைக்கு செய்யும் அவமதிப்பு.

முடிவு செய்ய வேண்டியது ஆசிரியர் மட்டுமே.

வாசகனாக, இதில் உள்ள அனைத்து தகவல்களும் ஒரே முடிச்சை நோக்கி என்றுக்கொண்டால், பரமேஸ்வரனின் குணங்களையும், அமுதனின் செயல்களையும் இனைக்கும் வாசக இடைவெளி, அடிகோடிட்டோ, குறிப்புணர்த்தியோ கூட பேசப்படவில்லை. அவர்களிடையே ஒரு விலக்கம் இருப்பதாக தோன்றினாலும், கடையில் நடப்பதை அவன் அப்பாவிடம் கூறுகிறான். வாசகனாக, என்னால், கதையை ஒரு புள்ளியில் ஒன்றுதிரட்ட இயலவில்லை. (சிறுகதைக்கு அது அவசியமல்லவா?).

அது, வாசகனின் பிரச்சனை, நான் கூற வேண்டிய அனைத்தும் கதையில் ஏற்கனவே உள்ளது என்று திடமாக சொல்ல இயலுமா என ஆசிரியர் முடிவு செய்யட்டும்.

2) மொழிப்பிரச்சனைகள்:

பல இடங்களில், மொழி சரியாக கையாளப்படவில்லை.

அ) என்னால் பேசாமல் இருக்க முடியவில்லை. அவர் ‘யோகா’ என்றார். என் முகத்தில் ஆச்சர்யத்தை கவனித்திருப்பார். ஏதேனும் நான் சொல்வேன் என்று காத்திருந்தார். அமைதியாக அவரை கவனித்தேன்.

எதிர்மறை.

ஆ) எனக்கும் அவரிடம் பேச வேண்டும் போலிருந்தது. இப்போதுதான் நான். சில வாரங்களாக மட்டுமே.

எனக்கு அர்த்தம் ஏதும் தராத பாதி வாக்கியங்கள்.

இ) அவரோடு எனக்குத் தெரிந்த ஆசனங்கள் குறித்துப் பேசினேன். செய்து காட்டுகிறேன்.

கால பிரச்சனை.

ஈ) அவர் சட்டையில் வேர்வையும் உடலின் உப்பு வாடையும். அமுதன் ஆம்புலன்ஸ்காரரின் முதுகுப்பக்கம் நின்று தன் அம்மாவைத் தொடுவது போல இறங்கும்போதும் மேலே வந்து வீசியது.

நவீன எழுத்துமுறையோ?

உ) எப்போது கடன் வாங்கினோம் என்பது வீட்டில் எல்லாருக்கும் நினைவில் இருந்தது. அவர்கள் வந்து சேர்ந்த நேரத்தில் பரமேஸ்வரன் அன்றைய தினத்தை எப்படிச் சமாளிப்பது என்கிற குழப்பத்தில் கருந்தேனீர்க் குவளையை கையில் வாங்கியிருந்தார்.

இதில் முதல் வரி சொல்ல வருவது என்ன? அவ்வளவு அடர்த்தியான வரிக்கான அவசியம் என்ன?

ஊ) அவனை பேருந்திலும் ஏற்றிவிட்ட பின்னர் பேருந்து போன திசையிலேயே நடக்கத் தொடங்கினார்.

எதற்கு லும்!

எ) மிச்சமிருந்த சில்லரையைப் தேடி எடுத்துக்கொண்டு பையில் பெட்டிகள்

ஒற்று.

அன்பு நாகபிரகாஷ், அனைவருக்கும் புரியவோ, அனைவரும் ஏற்கவோ கதை எழுத வேண்டிய அவசியம் இல்லை.

கலையில் உச்சம் நோக்கி பயணிக்கிறோமா என்று மட்டும் நோக்கவும். உச்சம் தொட்டவர்களை வாசித்து, உச்சம் என்றால் என்ன என்பதையும் நீங்களே வகுத்துக்கொள்ளவும்.

விமர்சகர்கள் ஏற்க்கவில்லை என எழுத்தை மூட்டை கட்டி வைப்பது தவறான முடிவு.

எழுதுங்கள். உங்களுள் உள்ள விமர்சகனை முதலில் திருப்தி படுத்துங்கள். உங்களை கராரான விமர்சகனாக வளர்த்துக்கொள்ளுங்கள். அவனது எண்ணம் மட்டுமே பொருட்படுத்தபட வேண்டியது.

அன்புடன்,

லாஓசி.

அன்புள்ள ஜெ…

சகடம் கதை வாசித்தேன்,..

கதை எனக்குப் பிடிக்கவில்லை என்றாலும் அதை எழுதிவரின் முயற்சி நேர்மையானது என தோன்றுவதால் என் பார்வையை பகிர விழைகிறேன்..

கதையின் நல்ல விஷயங்கள் சில உள்ளன.. நல்ல வாக்கியங்கள்.. பூடகத்தன்மை.. நடை.. சில விஷயங்களை வாசகனின் யோசிப்புக்கு கொடுத்து விடும் எழுத்து என வரவேற்கத்தக்க அம்சங்கள் உள்ளன

ஆனால் கதை என்ற அம்சம் கைகூடவில்லை என்றே தோன்றுகிறது

பிரத்யேகமான அனுபவம் , பிரத்யேகமான தரிசனம் , கவரும் வாக்கிய அமைப்புகள் என எதுவும் இல்லாமல் , ஒரு சராசரி அனுபவத்தை , ஒரு சராசரியான பார்வையில் சொல்லும் பிரதியாக இருக்கிறது

சராசரி சம்பவத்தை எழுதக்கூடாதா என்றால் அப்படி அல்ல… எழுதலாம்.. அன்றாட சம்பவங்களை வைத்து அசோகமித்திரன் எத்தனையோ நல்ல கதைகள் தந்து இருக்கிறார்…

சாதாரண விஷயத்தில் அசாதாரண தரிசனங்களை காணும் சிறந்த கதைகள் இருக்கின்றன.. அசாதாரண விஷ்யங்களை சாதாரணமாக காணும் பாத்திரங்களை சித்திரிக்கும் கதைகளும் உள்ளன.. ஆனால் சாதாரணமான ஒன்றை , சாதாரணமாக சொல்வதற்கு சிறுகதை தேவையே இல்லையே

சகடம் கதையின் பாராட்டப்பட வாற்ன்ஷயம் , திருகல் மொழி இல்லை என்பது… ஆனால் திருகல் நடை தேவையற்றதாக தோன்றுகிறது…

இப்படி ஒரு நடையில் எழுதிப்பார்ப்போமே என்ற ஆர்வம் தெரிகிறதே தவிர அதன் மூலம் வாசகனுக்கு கிட்டுவது எதுவும் இல்லை

ஆனாலும் விளையாட்டுத்தனமான முயற்சி என்று இல்லாமல் ஒரு தீவிரம் தெரிகிறது என்பது பாராட்டுக்குரியது.. இதே கதையை வேறு விதமாக எழுதிப்பார்ப்பது நல்ல பயிற்சியாக இருக்கும் என கருதுகிறேன்

அன்புடன்

பிச்சைக்காரன்

அன்புள்ள ஜெ

நாகப்பிரகாஷின் கதையை வாசித்தேன். அவருடைய கடிதம்தான் எனக்கு மேலும் சுவாரசியமானதாகப் பட்டது. அவர் தன் கதையை பிறர் புரிந்துகொள்ளவில்லை என்கிறார். சுமாரான கதைகள் கொண்டாடப்படுகின்றன என்கிறார். என்ன எழுதுவது என்று பிரமிக்கிறார். இதெல்லாமே தொடக்ககால எழுத்துக்களின் இயல்பு என நினைக்கிறேன். கொஞ்சம் மூத்த எழுத்தாளர்கள் இதைப்பற்றிக் கவலைப்படுவதில்லை. தி.ஜானகிராமன் கொட்டுமேளம் தொகுதிக்கு எழுதிய முன்னுரையை நினைவுபடுத்திக்கொள்கிறேன். இதை வெளியிடும் கலைஞன் மாசிலாமணிக்கு டெல்லிக்குளிரில் இருந்து நம்பிக்கையும் ஆறுதலும் சொல்கிறேன் என எழுதியிருப்பார்.

எழுத்து ஒரு தொடர்புறுத்தும் கலைதான். அதன் வடிவம் என்று நாம் சொல்வதெல்லாம் அது தொடர்புறுத்துவதைப் பற்றித்தான். எழுதப்பட்ட கதை அக்கலைஞனின் மனதிலே என்னவாக இருந்தது என்பது வாசகனுக்குப் பொருட்டே அல்ல. அவன் வாசிப்பது மொழியில் என்ன வந்திருக்கிறது என்றுதான். அவன் அதை அர்த்தம்கொள்வது அந்தச் சொற்களில் இருந்து ஒரு வாழ்க்கையைக் கற்பனைசெய்துகொண்டு. அந்தக் கற்பனையை அவன் தன் வாழ்க்கையைக்கொண்டே செய்கிறான். ஆகவே ஒரு கதை அதை வாசிக்கிறவனுக்கும் எழுதுபவனுக்கும் பொதுவான ஒரு இடத்தைத் தொட்டு காட்டுகிறதா என்பது முக்கியமானது.

அதேபோல படிமங்கள். அவை எல்லாம் ஏற்கனவே மரபிலே ஆழத்தில் இருக்கும். சூழலிலே இருக்கும். அந்தப்படிமத்தின் ஒருமுனையை எழுத்தாளன் தொட்டால் மறுமுனையை வாசகன் தொடவேண்டும். அப்படித் தொடவைப்பதற்குத்தான் கதை என்னும் கலை உபயோகமாகிறது. அது ரொம்ப பிரைவேட் ஆகவும் இருக்கக்கூடாது. அது ஆசிரியனால் மட்டுமே அறிந்ததாக இருந்தால் வாசகன் அதை உணரமாட்டான். ஆனால் சொல்லிச்சொல்லி பழகியதாக இருந்தால் வாசகனுக்கு சிலிர்ப்பு வராது. ரெண்டுக்கும் நடுவே ஓர் இடம் தேவைப்படுகிறது.

அதேபோல யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் வாசகன் அவன் ஏற்கனவே வாசித்த கதைகளின் பாதிப்பும் கொண்டிருக்கிறான். கதைகளை அவன் சம்பந்தப்படுத்திக்கொள்வான். அந்த பழைய அனுபவங்களுடைய நீட்சியாக அதேசமயம் புதிசாக ஒன்று நிகழவேண்டும். இதெல்லாம் கதையின் சவால். கதாசிரியன் அந்தச்சவாலை ஏற்றுக்கொள்ளவேண்டும். என்ன நிகழவில்லை என்பதை அவன் ஆராயவேண்டும். அதுவல்லாமல் நல்ல கதை புரியாமல் பேசுகிறார்கள் என்பதெல்லாம் வெறும் தற்காப்பு. அது எந்தவகையிலும் உதவாது

நாகப்பிரகாஷ் அவர்களின் கதை இன்றைக்குச் சிறுபத்திரிகைகளில் சாதாரணமாக எழுதப்படும் நுண்ணியதகவல்களாக சூழலைச் சொல்லும் ஒரு பாணியில் அமைந்திருந்தது. அந்த பழகிப்போனதன்மையால்தான் நாம் அதைக் கூர்ந்து கவனிக்காமல் வாசிக்கிறோம். மூன்று நிகழ்ச்சிகளை இணைத்து நாம் அடையும் கதை ஒரு சின்ன வாழ்க்கைச்சந்தர்ப்பம் மட்டுமே. இந்தக்கதையை ஏன் எழுதவேண்டும், இதன் தீம் என்ன என்றுதான் ஆசிரியன் முதலில் கேட்டுக்கொள்ளவேண்டும். பல்லாயிரம் கதைகள் எழுதப்பட்டுவிட்ட சூழலில் அந்தக்கதையை எழுத அதற்கான காரணம் ஆசிரியன் மனதிலிருக்கவேண்டும்

கார்த்திக்ராஜ்

அன்புள்ள ஜெ,

இன்றைய இறுதிக்கடிதத்தை பார்த்ததும் சற்றே மனதுக்குள் சிரித்தபடி எழுதுகிறேன். அண்ணன் கடலூர் சீனு தவிர பெரும்பாலான கடிதங்கள் எழுதியவர் பெயர்கள் எனக்கு புதியவை என்பதும் அவர்கள் கதையை அணுகும் விதமும் ஆர்வத்துடன் கவனிக்கிறேன்.

எப்படி ஒருவர் ஒரு சிறுகதையை வசிக்கக்கூடும் என்பதை, அக்கதையில் என்ன நான் முயன்றேன், என்ன நான் வெளிப்படுத்தினேன், ஏன், எப்படி, எவ்வகையான விஷயங்களை ஒரே பக்கத்திலோ கதையிலோ சொல்லலாம் சொல்லக்கூடாது, என்கிற விஷயங்களை சிந்தித்தபடி இருக்கிறேன்.

ஆனாலும் இக்கதையில் நான் உருவாக்க நினைத்த இணைப்பை இதுவரை எவரும் வாசித்திருக்கவில்லை (அது என் தரிசனம், அதை எழுத்திலாக்க இன்னும் கூர்மைப்படவேண்டும் என்றே உணர்கிறேன், மற்றபடி எதிர்மறையாக அல்ல), மற்றும் இருவர் தவறாக கதையை (அவசரத்திலாக) வாசித்ததையும் மீறி அவர்களின் நட்புணர்வு மெச்சுகிறேன். அங்குமே நான் இன்னும் சில கேள்விகள் கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் பொதுவெளியில் வாசகர்கள் ஒரு படைப்பை அணுகும் விதத்திற்கு அறிந்த பெரும் எழுந்தாளரா புதியவனா, எப்படியான எண்ணத்தை அவன் பெயராலும், வாசிப்பின் தொடக்கத்திலும் உருவாக்குகிறான் என்பது முக்கியம் என்று தோன்றுகிறது.

இப்படிக் கூறும்போது முன்முடிவே இல்லாமல், வெகு நாளைய வாசக அனுபவத்தை கதையின் மேல் முதல் வாசிப்பிலேயே போட்டு வாசிக்காத நல்வாசகர்களைச் சேர்க்கவில்லை.

பெரும்பாலான கடிதங்களின் அக்கறைக்கும், உங்களுக்கும் என் அன்பு. இன்னும் கவனிக்கிறேன்.



பேரன்புடன்,

நாகபிரகாஷ்

[விவாதம் நிறைவு]

================================================================================================================================

நாகப்பிரகாஷ் இக்கடிதத்தையும் உடனிருக்கும் கதையையும் அனுப்பியிருந்தார். வாசகர்கள், நண்பர்கள் தங்கள் விமர்சனங்களை, ஆய்வை எழுதலாம். மீண்டும் ஒரு கதை விவாதம் நிகழ உதவியாக இருக்கும்
ஜெ
----------------------------------------------------------------------
ஜெ,
இது என்னுடைய ஏழாவது சிறுகதை. ஆனால் இதுவும் நண்பர்கள் அனைவராலும், எழுதுகிறவர்களாலும் நிராகரிக்கப்பட்டது. தெளிவாக இல்லை, பெரும்பாலானவர்களுக்குப் புரியாது. எதுவுமே புதிதாக இல்லை.
இனி வேறு எப்படிச் சிறுகதை எழுத என்று எழுதியதெல்லாம் மூட்டை கட்டி ஓரம் வைத்துவிட்டுப் படிக்க வேண்டும் போலிருக்கிறது. ஆனால் என் எழுத்தில் என்னதான் பிரச்சனை என்று பிடிப்பதற்கு முடியவில்லை. இத்தனைக்கும் மொழியை நான் திருகிக் குழப்பவில்லை. இதற்கு முன் நேர்கோட்டில் மட்டுமே எழுதிய நான், இக்கதையில் மட்டுமே அதிலிருந்து விலகியிருக்கிறேன். அதுவுமே கதையின் தேவை என்று உள்ளுணர்ந்ததால் தானே நடந்தது. ஆனால் அதே நேரம் வெளியே இதைவிடவும் சுமாரான கதைகள் பலவும் கொண்டாடப்படுவதைப் பார்க்கிறேன்.
ஒரே தவிப்பு. ஏனெனில் ஒருவரும் என்னை ஏற்றுக்கொள்ளச் செய்யும்படியான விமர்சனத்தை முன்வைக்கவே இல்லை. மேலும் எவருக்கும் கதை புரிவது போலவும் தெரியவில்லை. வேலைக்கு விண்ணப்பிக்கும்போது முகப்புக் கடிதம் வைப்பது போல விளக்கப் பத்திகள் எழுதும் அளவிலேயே என் கதைகள் இருக்கின்றன போலும். ஆனால் ஏன் அப்படி என்பது தெரியாததே என் ஆகப்பெரிய இயலாமை.
பேரன்புடன்,
நாகபிரகாஷ்
சகடம்
அப்பா சொன்ன கடை இன்னும் திறக்காததால் ஷட்டருக்கு முன் படிக்கட்டில் அமர்ந்தேன். கடை திறக்கும் நேரத்தில் அப்பா வருவதாகச் சொன்னார். சாலையின் மறுபக்கம் எனக்கு எதிரே ஒரு செந்நிற நாய் கட்டிட நிழலில் உடல் நீட்டிப் படுத்திருந்தது. அரைத் தூக்கத்தில் சற்றே திறந்த கண்களால் சாலையில் செல்லும் வண்டிகளின் சக்கரங்களின் சுழற்சியைப் பார்த்துக் கிறங்கியபடி வாலாட்டிக் கொண்டிருந்தது. அந்தப் பக்கம் நடக்கிறவர்களின் செருப்பு நுனிகள் அதற்குத் தெரியும். நீலம், வெள்ளை, கருப்பு, அரிதாக சிவப்பு, பச்சை. மெல்லிய ரப்பர் வார் வைத்தது. மேலே பாதங்களை முழுவதும் முடியிருப்பவை. அவற்றில் புள்ளிகளாகவோ வேறு வடிவங்களிலோ துளைகள் கொண்டவை. ஒன்றிரண்டு ஜோடிச் சின்னஞ்சிறு கால்களின் புழுதிபடிந்த ஷூக்கள். அந்த நாயின் மயிரடர்ந்த கழுத்தில் வருடிக் கொடுக்கலாம். அதையே பார்த்தபடி இருந்தேன். அந்த நாயின் அருகிலேயே வண்டியை வேகமாக ஓட்டிக் கொண்டுவந்து ஸ்டாண்ட் இட்டார் ஒருவர். இடக்காலை நிலத்தில் ஊன்றி இறங்கினார். உடலை விருப்பப்படி ஊதிப்பெருக்கி வனைந்த பலூன் போல் ஆக்கிருந்தார். நாய் அப்படியே படுத்திருந்தது. அதன் வால் அசையாமல் இருந்தால் உயிரற்றது போலத் தோன்றும். என்ன நினைத்தாரோ நாயைப் பார்த்தபடி வண்டியிலிருந்து இறங்கியவர் தன் வலது காலால் ஓங்கி அதன் தலையில் உதைத்தார். அது மெல்லிய குரலில் ஓலமிட்டபடி எழுந்துத் தாவி நடந்தது. அப்படியே தலையை என் கால்களுக்கிடையில் புதைத்து மறைந்து கொண்டேன். வெளிச்சம் புகவே கண்களை மூடிக்கொண்டு கைகளால் முழங்காலைக் கட்டிக் கொண்டேன்.

‘ஏய், இங்கே என்ன வேலை? அந்தாண்ட போய் ஒக்காரு’

எவரோ சொன்னதைக் கேட்டதும் கைகளை விடுவித்தபடி எழுந்தேன். கடைக்காரர்

உங்க கடைக்குத்தான் வந்தேன். அப்பா வந்துட்டிருக்காரு…’

‘அப்படியா. உள்ள வந்து உக்காரு. கடையைத் தொறக்கறேன். ஒரு நிமிஷம்’

எங்களுக்குப் பக்கத்தில் வெறொருவர் நின்றிருப்பதைப் பார்த்தேன். அவரும் கடைக்கு வந்தாரோ இல்லை இந்த முதலாளியோடு வந்தவரோ. கடையின் முதற்பாதியை மட்டுமே திறந்து எங்களை அனுமதித்தார் அதன் முதலாளி. நான்கு நாற்காலிகளும் எதிரே இரண்டடி உயர மேசைமேல் நகை சோதனையிடும் பொருட்களும் சில ரசாயனக் குப்பிகளும் மட்டும் அங்கிருந்தன. கடையின் மறு பாதியில் பூட்டப்பட்டிருக்கும் கிரில் கதவுகளுக்கு அப்பால் நகைகளும் பணமும் வைப்பதற்கான நான்கு பகுப்புகள் கொண்ட அலமாரி. அதற்கு அருகிலும் ஒரு நாற்காலி. அதன் முதலாளி அமர்வதற்காக மட்டுமாக இருக்கும். வேறு எவரும் அதற்குள் போவதில்லை. ஒருவர் ஏற்கெனவே உள்ளிருக்கையில் அப்படிப் போவதும் கடினம். சிறிய கடை. அதில் பாதி என்பதால் இன்னும் சிறிய அறை. சுவரை ஒட்டி வைத்திருக்கும் அலமாரி. வெளியிலிருந்து கைநீட்டினாலும் எட்டாது. இருந்தாலும் பூட்டப்பட்டிருக்கும்.

அப்பா இன்னும் வரவில்லை. அருகிலிருந்த மெலிந்த மனிதரும் நானும் காத்திருந்தோம். இப்போது வருகிறேன் என்று கடைக்குத் தேவையான சில பொருட்களை வாங்க முதலாளி இறங்கிச் சென்றிருந்தார். ஒட்டடை படிந்த மின்விசிறி மெதுவாக ஓடிக் கொண்டிருந்தது. சுவற்றோரம் படிந்து சென்ற மின்சார வயர்களின் ஒன்று கீழிறங்கி எங்கோ மறைந்துபோக மற்றொன்று வெளியே வாசலுக்கு மேலே சென்று கூம்பிய பிளாஸ்டிக் தொப்பிக்குள் இறங்கி விளக்கை அடைந்தது. அருகிலிருந்த மனிதரின் மென்னையான உறுதியான கைகளைப் பார்த்தபடி இருந்தேன். அவற்றை இடுப்புக்கு அருகில் நாற்காலியில் இருபக்கமும் சற்றே மடக்கி ஊன்றியிருந்தார். நான் பார்ப்பதால் புன்னகைத்தார். என்னால் பேசாமல் இருக்க முடியவில்லை. அவர் ‘யோகா’ என்றார். என் முகத்தில் ஆச்சர்யத்தை கவனித்திருப்பார். ஏதேனும் நான் சொல்வேன் என்று காத்திருந்தார். அமைதியாக அவரை கவனித்தேன்.

‘யோகப் பயிற்சி செய்யறவன். உடம்பு அவ்வளவு இறுகாது. ஆனா பலமும் ஆரோக்யமும் இருக்கும்’

எனக்கும் அவரிடம் பேச வேண்டும் போலிருந்தது. இப்போதுதான் நான். சில வாரங்களாக மட்டுமே.

‘எங்க ஸ்கூல்லயும் யோகா சொல்லித் தர்றாங்க. நானும் கத்துக்கறேன். ஏழு ஆசனம் வரைக்கும் கத்துகிட்டேன்’

அவர் முயன்று சிரித்துக் கொண்டே என்னிடம் பேசத் தொடங்கினார். அந்த கடைக்காரர் இன்னும் வந்திருக்கவில்லை. அப்பாவும் எப்போது வருவார் தெரியவில்லை. அவரோடு எனக்குத் தெரிந்த ஆசனங்கள் குறித்துப் பேசினேன். செய்து காட்டுகிறேன்.

இன்று வேலை முடிந்த பிறகும் சம்பளம் வாங்குவதற்கு பரமேஸ்வரன் காத்திருந்தார். கிழமை தெரியாமல் இருக்காது. ஆனாலும் ஒரு பொறுப்பில்லாமை. பெரும்பாலும் இப்படி நடப்பதுதான். முதலாளி கிளம்பிச் சென்றிருந்தார். அவர் மனைவி இவற்றில் எப்போதும் தலையிடுவதில்லை. வேண்டுமானால் திங்களன்று வந்து வாங்கிக் கொள்ளுங்களேன் என்பதே அவர் பதில். ஒருவேளை கையிருப்பில் பற்றாக்குறை இருந்தால் சமாளிப்பதற்காக இப்படிச் செய்வார்கள். சிலர் நாளை விடுமுறை என்பதால் நேரத்துக்குள் கிளம்பி பேருந்து பிடித்து ஊர் போய்சேரவே பார்ப்பார்கள். ஆனால் அப்படியான உற்சாகமெல்லாம் பரமேஸ்வரனுக்கு வாய்ப்பதில்லை. வீட்டுக்குப் போவது. அங்கு போயும் இதே மனநிலையில் நின்றாக வேண்டும். இதைப் புரிந்தும் புரியாமலும் வரவேற்கும் வயதிலிருக்கிறவர்கள் உள்ள வீடு. அவரவர்க்கு வேண்டிய விதத்தில் விளக்க வேண்டும். அதையும் முடித்து இருப்பதை உண்டதும் கிடந்தால் மறுநாள் சீக்கிரம் விடிந்திருக்கும். அதை சமாளிக்க வேண்டும். வெறுத்துப்போய் முகத்தை எப்போதும் போல வைத்துக்கொண்டு முதலாளியம்மாவிடம் சொல்லிவிட்டு கிளம்புப்போது பதினொன்றரை. பரமேஸ்வரன் நாளை என்ன செய்தாக வேண்டும் என்று முடிவெடுத்திருந்தார்.

போக்குவரத்து பெரும்பாலும் அடங்கிய மஞ்சள் விளக்கொளி மங்கிய சாலையோரமாக நடந்தார். சிலர் ஆட்டோக்களில் பேருந்துக்காக காத்திருக்காமல் வீடுகளுக்கு விரைந்து கொண்டிருந்தார்கள். அருகிலிருந்த குடியிருப்புவாசிகளில் இருவர் கொசுவர்த்திப் பாக்கெட்டுகள் வாங்கிக் கையில் பிடித்துக்கொண்டு ஒற்றை பீடியைப் பகிர்ந்து இழுத்தபடி எதிரில் வந்தார்கள். இவர்களில் ஒருவன் என்றாவது என்னுடன் வேலைக்குப் போட்டியிட்டு அன்றைக்கு என்னை சும்மா உட்கார வைத்திருக்கக்கூடும் என்று நினைத்துக் கொண்டார். இருவரும் சேர்ந்தே அவர் எடை. எப்படியும் பரமேஸ்வரன் அதிகம் உடல் பெருத்தவரில்லை. ஒரு நாளும் வேலையில் சோர்ந்ததில்லை. ஆனாலும் ஏதோ பிறர் உணவையும் பங்கிடுபவர் போலவே பணியிடத்தில் நடத்தப்படுவார். என்ன ஆனாலும் இந்த உடலில் பலமிருக்கிறவரை பரமேஸ்வரனை எவரும் கீழே தள்ளி மிதித்துவிட முடியாது. எமனாயினும் என்று அவரே சொல்வார்.

அடுத்த சந்திப்பில் பாதை மையச்சாலையில் சேரும் என்பதால் முன்னரே அந்தப் பக்கம் கடந்து போக நினைத்தார். இருபுறமும் வண்டிகள் வரவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு கடந்தார். அப்போது எதிரேயிருந்து வேறொரு கருத்த மனிதர் கடப்பது தெரிந்தது. கையில் என்னவோ சிறு அட்டைப் பெட்டிகள் அடுக்கிய பை. பரமேஸ்வரன் பார்க்கும்போதே மையச்சாலையிலிருந்து வந்த ஒரு இருசக்கர வாகனம் எதிரிலிருந்த நபரின் பையை உரசிச் சென்றது. அவர் தடுமாற பை விழும்போது சட்டைப் பாக்கெட்டிலிருந்த சில காகிதங்களும் பணத்துடன் சிதறியது. அவர் சுதாரித்து எழுந்தாலும் முதலில் பையிலிருந்து உருண்ட அட்டைப் பெட்டிகளையே எடுத்து சாலையோரம் வைத்தார்.

அதற்குள் அருகில் சென்றுவிட்டிருந்த பரமேஸ்வரன் உதவி செய்யத் தொடங்கினார். அருகில் விழுந்து படபடத்த ரூபாய் நோட்டுகளை தன்னிச்சையாக கவனித்தவர் எவரும் பார்க்காமல் எடுக்க வேண்டும் என்று தன்னறிவின்றியே நகர்ந்தார். அவருக்கும் முன்பாக வேறொரு கை அதனருகில் வருவதை தடுமாறிய மனிதர் கவனித்து வேகமாக நகர்ந்து பணத்தை நோக்கித் தாவினார். அந்நொடியே பரமேஸ்வரன் சுதாரித்து நின்றிருந்தார். ஆனால் தாவிய கருப்பு மனிதர் சற்றே ஓரடி முன்னால் சென்று அதைச் செய்திருக்கலாம். அவர் கைகள் சற்றே நெருங்குவதைத் தவற விட்டிருந்தன. அரை அடி தூரம். அந்த நோட்டுகளின் அருகில் வந்த கை எடுத்துக் கொண்டு உடனே ஓடியது. கீழே மிச்சமிருந்தது பத்தே ரூபாயும் சில நாணயங்களும். எடுத்தவனிடம் எப்படியும் ஆயிரம் ரூபாய்க்கும் குறையாமல் சிக்கியிருக்கும் என்று நினைத்தபடி பரமேஸ்வரன் கீழேயே சாய்ந்து கிடந்தவரைத் தூக்கிவிட்டார். அந்தக் கைகள் நெகிழ்வாக விரிந்து வருவதை உணர்ந்தார். ஒருவேளை இப்படிக் கைகள் முயன்றபோது நீண்டிருந்தால் பணத்தைத் தொட்டுவிட்டிருக்கலாம் என்று தோன்றியது. அந்த மனிதர் வேகமாக சூழ்நிலையைச் சமாளித்துக் கொண்டார். சிரித்தபடி பரமேஸ்வரனுக்கு நன்றி சொல்லிவிட்டு மிச்சமிருந்த சில்லரையைப் தேடி எடுத்துக்கொண்டு பையில் பெட்டிகள் அடுக்கியதும் கிளம்பிவிட்டார்.

அங்கிருந்து பொருளற்று எவற்றையோ சிந்தித்தபடி நகர்ந்து பரமேஸ்வரன் தன் இடது கையிலிருந்த ஐந்து ரூபாய் நாணயத்தை சட்டைப் பாக்கெட்டில் போட்டுக் கொண்டார். இது நாளை பேருந்துக்குப் பயன்படட்டும்.

அப்பா வேர்த்துக் களைத்துப்போய் கடைக்குள் வந்தபோது நான் திவாகரன் செய்து காட்டிய உத்தியானாசனத்தை நினைத்து நடுங்கியபடி உட்கார்ந்திருந்தேன். அவர் முதுகெழும்பைத் தொடு என்றபோது கூச்சமாக இருந்தது. அங்கே வயிறு இருக்கவேண்டிய இடத்தில் வெறும் குழி. அங்கே மரம் வளர்ந்தது போல சதைக்கடியில் அது. அதற்குப் பிறகும் வயிற்றில் இடவலமாக உறுப்புகளை சுழற்றி மாற்றிக் காட்டினார்.

என்னை திட்டினார் அவர். ஒவ்வொரு ஆசனத்திலும் ஏதாவது தவறு செய்திருந்தேன். உடலை இறுக்கினேன். வெறொரு முறை காலைத் தவறாக மடங்கித் தொட்டேன். சக்கராசனம் செய்கிறேன் என்று கீழே விழப்போனேன். அவர் உடனே இருக்கையிலிருந்து எழுந்து கைகளை நீட்டி என்னை தாங்கிப் பிடித்தார். ஏதோ யோசித்தபடி எல்லா ஆசனங்களையும் மீண்டும் செய்யச் சொல்லி என் தவறுகளை தொட்டுத் திருத்தினார். எனக்கு தயக்கமாக இருந்தது. சிரிப்பும் வந்தது. அந்த கடைக்காரரையும் காணோம். அப்பாவும் வந்திருக்கவில்லை. அப்போதே அவர் தான் சில ஆசனங்கள் செய்து காட்டுகிறேன் என்றார். அதற்கு முன்னர் பலமுறை நான் ஆசனங்கள் செய்வதையே விட்டாலும் சரி ஏன் இப்படித் தவறாகச் செய்யக்கூடாது என்று விளக்கினார். அவர் ஒவ்வொரு ஆசனமாகச் செய்யச் செய்ய எனக்கு பயம் அதிகமானது. இதெல்லாம் எனக்கு பள்ளியில் சொல்லித் தரப்போவதில்லை. எப்படியும் எனக்கும் செய்ய வராது. எதற்காகத் தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால் அவர் மேலிருந்து என் கண்களை எடுக்க முடியவில்லை. இறுதியாக உத்தியானாசனத்துக்கும் பிறகு பேசுவதற்கே பயந்து உட்கார்ந்திருந்தேன்.

அப்பாவும் திவாகரனும் ஒருவரை ஒருவர் பழைய நண்பர்கள் மீண்டும் சந்தித்ததைப்போல பார்த்துக் கொண்டார்கள். அவன் தானோ அது என்கிற குழப்பம் இருக்கிற நண்பர்கள். ஆனால் அப்பாவுக்கு இப்படி ஒரு நண்பர் இருந்திருந்தால் எனக்குத் தெரிந்திருக்கும். என்னிடம் அப்பா சொல்லாவிட்டாலும் அம்மா எப்போதாவது அவரோடு கோபித்துக் கொள்ளும்போது இப்படி எதையாவது சொல்லத் தொடங்குவாள். எனக்கு ஒரே கதையை மீண்டும் சொல்லக்கூடாது. அம்மாவுக்கோ பத்து நிமிடம் நான் அவள் அருகே உட்கார வேண்டும் போல இருந்தால் எதாவது கதை சொல்லியாக வேண்டும். இல்லாவிட்டால் அவள் யாரிடம் போய் பேசப் போகிறாள். எனக்கு கொஞ்சுவதற்கு எங்கள் தெரு வழியே போகிற நாய்க்குட்டிகளும் பூனைகளும் தேவைப்படுவது போலவே அம்மாவுக்கு நான் வேண்டும்.

ஆனால் அப்பா திவாகரனிடம் ஒன்றும் பேசவில்லை. சற்றே தயக்கத்துக்குப் பிறகு இருவரும் சிரித்துக் கொண்டதும் என்னருகே வந்து அப்பா அமர்ந்தார். அந்த நேரம் கடைக்காரரும் வரவே ஒவ்வொருவரையாக அழைத்து எதிரில் அமரச் செய்தார். முதலில் திவாகரன் போகவே நாங்கள் காத்திருந்தோம். அவரும் எங்களைப்போலவே நகை வைக்கத்தான் வந்திருந்தார். அப்பாவிடம் நான் என்ன நடந்தது என்று சொல்லத் துவங்கினேன்.

எப்போது கடன் வாங்கினோம் என்பது வீட்டில் எல்லாருக்கும் நினைவில் இருந்தது. அவர்கள் வந்து சேர்ந்த நேரத்தில் பரமேஸ்வரன் அன்றைய தினத்தை எப்படிச் சமாளிப்பது என்கிற குழப்பத்தில் கருந்தேனீர்க் குவளையை கையில் வாங்கியிருந்தார். ஒரு கால் லீட்டர் பாக்கெட் பால் வாங்கவாவது கையில் காசிருந்திருக்கலாம் என்று அவருக்கு யோசனை. வீட்டு முன்னால் மூன்று பேர் நின்று கத்தத் தொடங்கினார்கள். எட்டு மணிகூட ஆகவில்லை. எப்படியோ அவர்களை நாளை வரச்சொல்லி பேசிச் சமாளித்து அனுப்ப வேண்டியிருந்தது. நேற்றே அவர் மனைவி பத்திரப்படுத்தி வைத்திருக்கிற ஒரு பவுன் சங்கிலியை அடகு வைப்பது என்று முடிவெடுத்திருந்தார். இப்படி நடக்கும் என்று அவர் ஊகித்திருந்தார். எத்தனை நாள் அவர்கள் வட்டியிலும் குறைவாக வாங்கிக் கொண்டிருப்பார்கள்.

வேறொரு நண்பனிடம் கொஞ்சம் பணம் கேட்கவும் செய்திருந்தார். உடனே அமுதனை அழைத்து நீ கடைக்குச் சென்று காத்திரு நான் வருகிறேன் என்று ஐந்து ரூபாயைத் தந்தார். எந்த அடகுக் கடை என்று விவரம் சொல்லி பேருந்து நிறுத்தம் வரை மகனுடன் நடந்தவர் அவனை பேருந்திலும் ஏற்றிவிட்ட பின்னர் பேருந்து போன திசையிலேயே நடக்கத் தொடங்கினார். அவர் பார்க்க விரும்பிய நண்பன் வீடு அதே அடகு கடைக்குப் போகும் வழியில் இருந்தது.

முன்பொரு நாள் பள்ளி முடிந்து போய் ஊரும் சுற்றிவிட்டு அமுதன் திரும்பியபோது வீட்டில் விளக்கு ஏற்றாமலிருந்தது. ஆனால் அம்மா எங்கே என்று ஆச்சர்யத்துடன் படிக்கட்டுகளில் ஏறி வீட்டுக் கதவை கவனிக்கையில் அது பூட்டப்பட்டிருக்கவில்லை. உள்ளே சென்று இவன் பார்க்கும்போது அம்மா சமையலறைக்கு முன்னால் விழுந்திருந்தாள். எப்படியும் வெகு நேரத்துக்கு முன்னரே அவளுக்கு கைகளால்கள் இழுத்துக் கொள்ளத் தொடங்கியிருக்கும். அவள் அருகிலிருந்த பொருட்களை பற்றிக் கொள்ள முயன்று அவை நழுவிச் சென்று கிடப்பது தெரிந்ததும் அவனுக்கு என்ன செய்ய வேண்டும் என்று நினைவுக்கு வந்தது. சற்று நேரத்தில் அவன் ஆம்புலன்ஸுக்கு அழைத்த பின்னர் பரமேஸ்வரனின் பணியிட மேற்பார்வையாளரை அழைத்துச் சொன்னான். அவன் அம்மாவின் வீங்கிய முகத்தை மடியில் கிடத்தி அணைத்தபடி அமர்ந்திருந்தான். இங்கிருந்து ஓடிவிடவேண்டும் என்றே அவன் மனம் சொல்லிக் கொண்டிருந்தது. ஆம்புலன்ஸ் சத்தம் தொலைவிலேயே துல்லியமாக அவனுக்குக் கேட்கத் தொடங்கியதும் அழைத்துவர இறங்கி ஓடினான்.

அதே நேரம் எவருடைய வண்டியிலோ இறக்கிவிடக் கேட்டு பரமேஸ்வரன் அங்கு வந்திறங்கினார். அமுதனுக்கு சினுங்கலுடன் கோபம் வந்தது. ஆனால் அவன் அம்மாவை மாடியிலிருந்து இப்போது இறக்கியாக வேண்டும். ஆம்புலன்ஸிலிருந்து ஒரு ஸ்ட்ரெச்சருடன் இருவர் இவனுடன் கேள்வி கேட்டபடி வந்தார்கள். அதில் ஒருவர் அண்டை வீட்டாரிடம் ஏதோ விளக்கிச் சொல்லி உதவி செய்ய ஆட்கள் வேண்டும் என்று கேட்டுக்கொண்டு படிக்கட்டில் ஏறினார். ஆனால் வேறு யாரும் மாடி ஏறி வரவில்லை. அமுதனின் அம்மாவை அவர்கள் ஸ்ட்ரெச்சரில் தூக்கி வைக்கும்போது பாத்திரம் ஒடுக்கு எடுப்பது போன்ற சத்தம் கேட்டது. ஒரு பக்கம் பரமேஸ்வரனை பிடிக்கச் சொல்லி இன்னொருவர் மறு பக்கம் பிடித்துக்கொள்ள மற்றவர் ஸ்ட்ரெச்சருக்கு முன்னால் இறங்கிச் சென்று படிக்கட்டுகளின் திருப்பங்களிலும் தடுமாற்றங்களிலும் தாங்கிக் கொடுத்தார். அவர்களுக்குப் பின்னால் இறங்கப்பார்த்த அமுதன் உடனே திரும்பி வீட்டை அப்படியே சாத்திக் கொண்டி மட்டும் போட்டு இறங்கினான்.

அவன் அப்பா நடுங்கிப் போயிருந்தார். அவர் சட்டையில் வேர்வையும் உடலின் உப்பு வாடையும். அமுதன் ஆம்புலன்ஸ்காரரின் முதுகுப்பக்கம் நின்று தன் அம்மாவைத் தொடுவது போல இறங்கும்போதும் மேலே வந்து வீசியது. இன்னும் ஒரு திருப்பமும் கொஞ்சம் படிகளும் மிச்சமிருக்கையிலேயே பரமேஸ்வரன் சோர்ந்து போனார். அவர் கைகள் சிவந்து உடலில் அதிர்ந்தபடி ரத்தம் பாய்ந்தது. விரல்களும் மூட்டுகளும் நடுங்குவது போல் உணர்ந்தார்.

அவர் இன்னும் எத்தனை தூரம் என்று பயத்துடன் திரும்பிப் பார்த்தவாறு இறங்கி முடிப்பதற்குள்ளாகவே பலமிழந்து போனார். ஸ்ட்ரெச்சரோடு வைத்து அவன் அம்மாவைக் கட்டியிருந்த சேலை இதற்குள் அவிழ்ந்து போக, அவளைச் சரிந்துவிடாமல் பிடிக்க வேண்டியிருந்தது. அமுதனும் தன்னால் இயன்றவரை பிடித்துக் கொண்டான். அப்படியும் அடுத்த திருப்பத்தில் எவருக்குமே முடியாமல் போக கைப்பிடியின் மேல் முட்டுக் கொடுத்து ஸ்ட்ரெச்சரை நிறுத்தினார்கள். ஸ்ட்ரெச்சர் விழாது என்று தெரிந்ததும் பரமேஸ்வரன் கைகளை எடுத்துக்கொண்டு சுவரில் முதுகைச் சாய்த்து தளர்ந்து போய் சரிந்து அமர்ந்தார். அந்த குறுகிய படிக்கட்டுத் திருப்பத்தில் அவர் கால்களை மடக்கி உடலைக் குறுக்கி அமர வேண்டியிருந்தது. அமுதன் இப்போது அப்பா அப்பா என்று அரற்றிக் கொண்டிருந்தான். எப்படியோ இரண்டு பேர் அருகிலிருப்பவர்கள் அப்போது வந்து சேரவே அமுதனின் அம்மாவை ஸ்ட்ரெச்சரிலிருந்து இறக்கி ஆம்புலன்ஸில் ஏற்றிவிட்டார்கள். ஆனால் அமுதனுக்கு அம்மா நிச்சயம் பிழைத்துக் கொள்வாள் என்று தெரிந்திருந்தது.

எழுதியவர் : நாகபிரகாஷ் (27-Mar-19, 2:54 am)
பார்வை : 105

மேலே