குரூரத்தின் முகம்

நீங்கள் என்னைச் சிலுவையில் அறைய விரும்புகிறீர்கள்
அறைந்து விட்டுப் போங்கள்
அதற்காக என்னைச் சுமக்கச்
சொல்வதெப்படி நியாயமாகும்
வேண்டுமானால் எந்த மறுதலிப்பும் இல்லாமல் நிற்கிறேன்
நீங்கள் என்னை அறையும் பொழுது

கூரிய ஆணிகளைத் தேர்ந்தெடுங்கள்
ஒற்றை அடியில் எலும்பைத் துளைத்து
மரத்தில் நுழைய வேண்டும்
மீண்டும் மீண்டும் அடித்து இறக்குகையில்
பொறுமை இழப்பேன் நான்

என் கண்களை யாரும் பார்த்துவிடாதீர்கள்
பின் புன்னகைக்க வேண்டிவரும் நான்
குறுகிப் போவீர்கள் நீங்கள் அப்பொழுது

உங்கள் குரூரம் தீர்ந்த பின் அம்புகளால்
துளைத்தெறியுங்கள் என் மார்பை
சிறிது சிறிதாய் என் உயிர் பிரியும் வேளையில்
உங்களொருவரையும் காண விரும்பவில்லை
உங்களில் ஒருவரையும்

மாறாக என் தந்தையின் சைக்கிளில்
முன் கம்பியில் அமர்ந்து தேவனைப்
போதித்த என் ஆரம்பப் பள்ளிக்குச்
சென்று கொண்டிருப்பேன்
உங்கள் பாவங்களை மன்னித்து

எழுதியவர் : mariselvam (20-May-19, 2:15 pm)
சேர்த்தது : Mariselvam
பார்வை : 33

மேலே