ஆறறிவு எதற்கு
கலையாத உறக்கத்தில்
காணும் கனவுகள்
கலைந்திடும் விழித்ததும் ,
உதித்திடும் சூரியனால்
விலகிடும் இருளாக...
விசித்திரங்கள் நிறைந்திருக்கும்
விறுவிறுப்பும் குறையாதிருக்கும்
அறிந்திடா முகங்களும்
சென்றிடா இடங்களும்
அரிதான நிகழ்வுகளும்
இடம்பெறும் சொப்பனத்தில்
இடம்பெயரும் நமதுடலும்...
எதிர்மறையாய் நடக்குமென
எதிர்பாராதது நிகழுமென
கண்டதும் பலிக்குமென
பரிகாரங்கள் செய்திட்டால்
பாதகங்கள் நெருங்காதென
ஆரூடமும் கூறிடுவார்
உழைக்காமல் பிழைக்கும்
சோதிடரும் போதிப்பார்
நல்வாழ்விற்கு வழியென ...
படித்தவரே ஆனாலும்
பயத்தால் நடுங்குவர்
விளைவை நினைத்து
விரக்தியும் கொள்வார் ...
பகுத்தறியும் மானிடரோ
வீரியமுடன் விரட்டுவார்
புரட்டும் புளுகும்
கூறியே வாழும்
ஏமாற்று பேர்வழிகளை ...
கனவுகள் யாவும்
மெய்ப் படுமானால்
கற்றிடும் கல்வியும்
சிந்திக்கும் சிந்தையும்
அறிவும் ஆற்றலும்
உண்மையும் உழைப்பும்
தளரா தன்னம்பிக்கையும்
எதிர்கொள்ளும் திறனும்
இயற்கையாய் கொண்ட
மனிதனே உனக்குத்தான்
ஆறறிவும் எதற்காக ?
பழனி குமார்
27.05.2019