கடைசி மழைத்துளி

அகதி முகாம்
மழையில் வருகிறது

மண் மணம்.





***

அவசரக் காற்று
முதல் மழை
புளியம் பூக்கள்.



***


மழைவிட்ட நேரம்
தேங்கிய நீரில்
முகம் பார்த்தது
தெருவிளக்கு.




***


விற்பனையில்
வண்ணத்துப் பூச்சி
துடிக்கிறது பூச்செடி.


***


தாய்க்காகக் காத்திருக்கிறேன்
மரத்தில் சாய்ந்தபடி.



***


இறந்த வீரன்
மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது
பாதி எழுதிய மடல்.



***


விடிந்துவிடு இரவே
விழித்திருக்கிறான்
கூர்க்கா.



***


வாழ்த்து அட்டை
முகவரியில் வருடினேன்
எழுதிய கையை.



***


எப்படிப் பாதுகாக்க
குடைக் கம்பியில்
உன் கைரேகை.



***


தொட்ட நினைவு
புரட்டிய பக்கத்தில்
கூந்தல் முடி.



***


பாவம் தூண்டில்காரன்
தக்கையின் மீது
தும்பி.



***


மரக்கிளையில் குழந்தை
வரப்பில் பண்ணையார்
பயிரில் சிந்துகிறது பால்.



***


வாழ்க்கை என்னடா வாழ்க்கை
கருவேலங் காட்டிற்குள்
வண்ணத்துப் பூச்சி!


***


எவன் நிலம்!
எவன் நாடு!
இலவச மனைப் பட்டா!



***


நந்தனைக் கொன்றதே சரி
குலதெய்வம் மறந்த
குற்றவாளி.



***


நொறுக்குவான் பண்ணையாரை
எல்லாக் கோபங்களோடும்
சுடுகாட்டில்.



***


பிணப் பரிசோதனை
அய்யர் குடலிலும்
மலம்.


***


தேவர் படித்துறை
பறையர் படித்துறை
அலைகள் மீறின
சாதி!


***


பறையர் சுடுகாடு
படையாட்சி சுடுகாடு
தலைமுழுக
ஒரே ஆறு.



***


ஊருக்கு ஊர் வட்டிக்கடை
பொது இடங்களில்
தண்ணீர்த் தொட்டி
காறித்துப்புகிறான்
கணைக்கால் இரும்பொறை.



***


குருட்டுப் பாடகன்
தொடர்வண்டி சக்கரத்தில்
நசுங்கியது
புல்லாங்குழல்.



***


அன்று அதனை அடித்தாள்
இன்று அதுவாகி வெடித்தாள்
தாய் வழிச் சமூகம்.



***


ஒரே தலையணை
வெண்சுருட்டுப்
புகைக்குள்
திணறும்
மல்லிகை மணம்.



***


இரண்டு அடி கொடுத்தால்தான்
திருந்துவாய்!
வாங்கிக்கொள்
வள்ளுவனிடம்.



***


எங்கு தூங்குகிறதோ
என் கால்சட்டை காலத்தின்
குத்துப்படாத பம்பரம்.



***


கல்லூரி மணிக்கூண்டு
பழைய மாணவன்
விசாரிக்கும் மணியோசை.



***


ஒரு மரத்தை வெட்டுபவன்
மழையைக்
கொலை செய்கிறான்



***


கண்ணில் ஓவியம்
காதில் இசை
மழைப் பாட்டு



***


‘இந்தியா டுடே‘யில்
தமிழச்சி மார்புகள்!
கண்ணீரால் போர்த்தினேன்.



***


இரண்டு ஊதுபத்தி
புகையின் அசைவில்
நீ… நான்



***


உளி எடுத்துச்
சிற்பம் செதுக்கியவன்,
மூங்கில் அறுத்துப்
புல்லாங்குழல் செய்தவன்,
ஒலை கிழித்துக்
கவிதை எழுதியவன்..
இவர்களுக்கும்
பங்குண்டு
மழைக் கொலையில்.

ஒவ்வொரு செடிக்கும்
ஒவ்வொரு கொடிக்கும்
ஒவ்வொரு மரத்திற்கும்
பெயர்ச்சொல்லி,
உறவு சொல்லி
வாழ்ந்த வாழ்க்கை
வற்றிவிட்டது

எழுதியவர் : CITRA (30-Jul-10, 5:49 pm)
சேர்த்தது : B.CITRA
பார்வை : 439

மேலே