புரிந்து கொண்டவன் பிழை

புரிந்து கொண்டவன் பிழை

முதலிலேயே சொல்லி விடுகிறோம். இந்த கதை ஒரு அறுபது எழுபது வருடங்களுக்கு முன்னர் நடந்தது. அது ஒரு அடிப்படை வசதிகள் கூட இல்லாத கிராமம். போக்குவரத்து வசதிகள் கூட அதிகம் காணப்படாத கிராமம். அந்த ஊரின் பெரிய மனிதரான பரமசிவத்துக்கு பாட்டு என்றால் உயிர். நன்கு பாட வேண்டும் என்று ஆசைப்பட்டவர், சரியான பாட்டு வாத்தியார் கிடைக்காததால் அவரின் ஆசை அற்ப ஆயுளிலே முடிந்து விட்டது. இருந்தாலும் பாட்டு பாடும் ஆசை அவர் மனதில் நீறு பூத்த நெருப்பாக இருந்தது.
பரமசிவத்தின் மகள் வயிற்று பேத்திக்கு அன்று பிறந்த நாள், ஒரே கோலாகலம்தான், அவர் வீட்டில். அன்றைய விருந்தை ஊர் முழுக்க சாப்பிட்டது. பக்கத்து வீட்டுக்காரார்கள் மட்டுமல்ல, பக்கத்து ஊர்க்காரர்கள் கூட வந்து விருந்து சாப்பிட்டுவிட்டு அவரை பாராட்டி சென்று கொண்டே இருந்தார்கள். தடபுடல் அனைத்தும் ஓய்ந்து மாலை வேளையில் திண்ணையின் தூண் ஒன்றில் சாய்ந்து உட்கார்ந்து கோண்டிருந்தார் பரமசிவம். அருகில அவரின் கணக்குப்பிள்ளை “ராம பிள்ளை” அவர் முகத்தை பார்த்தவாறு நின்று கொண்டிருந்தார்.
கண்ணை மூடி ஏதோ யோசனையில் இருந்த பரமசிவம், மெல்ல கண் விழித்து “பிள்ளை” பேத்திக்கு அஞ்சு வயசு முடிஞ்சிடுச்சு, நம்ம கூடத்தான் அவளை வச்சுக்க போறோம். அதனால அவளுக்கு இந்த வயசுலயே பாட்டு சொல்லி கொடுத்திட்டா பின்னாடி என்னை மாதிரி வருத்தப்படாமே இருப்பாளில்லை. “பிள்ளை” அவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை “ஆமாங்கய்யா”என்று ஒற்றை வரியில் முடித்துக்கொண்டார்.
நீ எப்படியாவது ஒரு பாட்டு வாத்தியாரை தேடி புடிச்சி கூட்டியா, இந்த புள்ளைக்கு எப்படியாவது பாட்டு சொல்லிக் கொடுத்துப்புடலாம்.”சரீங்க” மறுபடியும் ஒற்றை வார்த்தையில் பதில் சொன்ன கணக்குப்புள்ளைக்கு “பாட்டு” “டான்ஸ்” இவைகளைப்பர்ரி ஸ்னானப் பிராப்தி கூட கிடையாது. அவருக்கு ஒரு சந்தேகம் வந்தது, ஆனால் அதை எப்படி பரமசிவத்திடம் கேட்பது, தலையை சொறிந்தார்.
ஐயா, சுகமாய் திண்ணையில் சாய்ந்திருந்த பரமசிவத்துக்கு இவரின் அழைப்பு இடைஞ்சலாய் இருக்க, என்னவென்று கண்களாலே கேட்டார். பாட்டு வாத்தியாருன்னு எப்படி தெரிஞ்சுக்கறது? ஒவ்வொருத்தரயா பாட்டு வாத்தியாரான்னு கேட்க முடியுங்களா? இந்த கேள்வி நியாயமாகப்பட்டது பரமசிவத்துக்கு ஒண்ணும் கவலைப்படாதே, டான்ஸ் கத்துகிட்டவன் காலும், பாட்டு கத்துகிட்டவன் வாயும் சும்மா இருக்காது, அப்படீன்னு ஒரு பழமொழி இருக்கு அதனால நீ எல்லா ஊர்லயும் போய் தேடி பாரு, பாட்டு தெரிஞ்சவன் நெத்தியில பட்டை போட்டுகிட்டு எங்கேயாவது உட்கார்ந்து பாடிகிட்டிருப்பான், அப்படியே புடுச்சி கொண்டாந்திரு.
“சரீங்க” மீண்டும் ஒற்றை வார்த்தையில் முடித்து விட்டு அங்கிருந்து கிளம்பியவர் ஊர் ஊராக ஒரு பாட்டு வாத்தியாரை தேடி அலைய ஆரம்பித்தார்.
காலையில் பிள்ளையாரைப்பார்த்து பெரிய கும்பிடாய் போட்டு நெற்றியில் பெரிய பட்டையும் போட்டு வந்திருந்த சாமியப்பனுக்கு அன்றைக்கு தொழில் ஒன்றும் சரியாக வரவில்லை. ஆலமரத்து அடியில் உட்கார்ந்திருந்ததால் சுகமான தூக்கம் கண்ணைச்ச் சுற்றியது. எப்படியும் இந் நேரத்துக்கு முடி வெட்டிக் கொள்ள பத்திருபது பேராவது வந்திருப்பார்கள். இன்றைக்கு பார்த்து ஒருவரும் வரவில்லை. சாமியப்பன் தூக்கம் வராமல் இருக்க அப்பொழுது வெளிவந்த ‘தியாகராஜ பாகவதரின்’ பாடல் ஒன்றை உச்சஸ்தாயில் பாட முடிவு செய்து ஆலாபனையை ஆரம்பித்து விட்டான்.
அப்பொழுது அந்த வழியாக ஒரு பாடகனை தேடி ஊர் ஊராய் அலைந்து ஓய்வு எடுத்துக் கொள்ள ஆலமரத்தடியை நோக்கி வந்து கொண்டிருந்த “பிள்ளைக்கு” சாமியப்பன் பாடிக் கொண்டிருந்த பாட்டைக்கேட்டதும் தெய்வமே நேரில் வந்தது போலிருந்தது.
சாமியப்பன் பாடி முடிக்கும் வரை பொறுமையாக காத்திருந்த பீள்ளை அவனிடம் சென்று பணிவாக வணங்கினார். சாமியப்பனுக்கு பயமாகிவிட்டது. யாரிந்த ஆள்? பதட்டத்துடன் எழுந்தான். நல்லா பாடறீங்களே, கேட்ட சாமியப்பனுக்கு வெட்கமாக போய்விட்டது. சும்மா பாடிப் பார்த்தேன் என்று நெளிந்தான். சும்மா பாடிப்பார்த்ததே இவ்வளவு நல்லா இருந்தா இவர் நம்ம பாப்பாவுக்கு சொல்லிகொடுத்தா எண்ணங்கள் ஓட அவனை மரியாதையாக பார்த்தார்
இங்கேயே உட்காரலாங்களா? ஆத்தோரமா போயிடலாமா? கேட்டவனின் கேள்வியை புரிந்து கொள்ள முடியாத பிள்ளை நீங்க அங்க ‘ஐயா’ வீட்டுக்கு வரணும். வீட்டுக்கு எல்லாம் வரதில்லைங்களே, மெதுவாக சொன்ன சாமியப்பனிடம் நீங்க அப்படியெல்லாம் சொல்லக்கூடாது, இந்த கலையை நீங்க யாருக்காவது கத்துக் கொடுக்கணும்னு நினைக்கமாட்டீங்களா ?
சாமியப்பனுக்கு தன்னுடைய தொழிலை அடுத்தவருக்கு கற்றுத் தருமளவுக்கு வயதாகி விடவில்லை. அதனால் அதெல்லாம் வயசானப்புறம் பார்த்துக்கலாம், என்று சொன்னான்.
சரி சரி நீங்க கிளம்புங்க வற்புறுத்த ஐயா வீட்டுக்கெல்லாம் வந்தா அதிகமாக செலவாகுங்களே !. நீங்க கலையே படாதீங்க, எவ்வளவு கேட்டாலும் தரதுக்கு ஐயா தயாரா இருக்காரு. நிறைய கிடைக்கும் என்றவுடன் கிளம்ப தயாரான சாமியப்பன் கொஞ்சம் நில்லுங்க, என்னுடைய சாமாங்களை எல்லாம் எடுத்தாந்துடறேன், என்றவாறு ஆற்றோரமாய் சென்றான்.
வீட்டுக்கு கூட்டி வந்த சாமியப்பனை பார்த்து பரமசிவம் பையன் சிறு வயதாய் இருந்தாலும் பாட்டுக்காரனாய் இருக்கிறானே என எண்ணினார். சாமியப்பன் வேகமாய் வேலையை முடித்து விட்டு கிளம்பும் அவசரத்தில் இருந்ததால் ஐயா உங்களுக்குங்களா? கேட்டான்.
இல்லைப்பா என் பேத்திக்கு இவர் சொல்ல சாமியப்பன் குழம்பினான். சரி பொண்ணுக்கு ஏதோ வேண்டுதலாய் இருக்கும், என முடிவு செய்து சீக்கிரமாய் வரச்சொல்லுங்க, என்று சொல்லிக்கொண்டிருக்கும்பொழுதே அந்த சிறு பெண் தட்டில் வெத்தலை பாக்குடன் பணம் கொஞ்சம் வைத்து இவனிடம் தர இவன் குழம்பிப்போய் இதெல்லம் எதுக்குங்க என்று சொல்லி தயங்கினான்.
பரமசிவம் பாய்ந்து வந்து இப்படியெல்லம் சொல்லக்கூடாது, கண்டிப்பா வாங்கிக்கணும், இன்னைக்கே ஆரம்பிக்கறீங்களா? என்று கேட்க இவன் இதுக்கெல்லாம் நாள் கிழமை பார்க்க முடியுங்களா? என்றவன் சரி பாப்பாவ உட்காரச் சொல்லுங்க, சொல்லி விட்டு இவன் உட்கார பரமசிவனின் பேத்தி பயபக்தியாய் உட்கார்ந்தாள்
இவன் அந்த குழந்தையின் எதிரில் உட்கார்ந்து தான் கொண்டு வந்த பொருட்கள் ஒவ்வொன்றாய் எடுத்து வைத்து கத்தியை தீட்ட ஆரம்பித்தான்.
அதற்குப்பின் என்ன நடந்திருக்கும் என்பதை வாசகர்களின் ஊகத்துக்கே விட்டுவிடலாம். (இது ஒரு கற்பனையே)

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (13-Sep-19, 11:54 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 512

மேலே