மருத்துவ வெண்பா - எருமை மோர் - பாடல் 17
வைத்திய வித்வன்மணி சி.கண்ணுசாமி பிள்ளை இயற்றிய சித்தவைத்திய பதார்த்த குண விளக்கம் (1956) என்ற புத்தகத்திலிருந்து சில மருத்துவ சம்பந்தமான நேரிசை வெண்பாக் களையும், அவைகளின் பொருளும் குணமும் புத்தகத்தில் உள்ளபடி வெண்பாக்களின் நயத்திற்காகத் தருகிறேன்.
இதில் குறிப்பிடும் நோய்களைப்பற்றியும், மருந்துகளையும் தகுதியுள்ள சித்த மருத்துவர்களைக் கேட்ட பின்பே உபயோகிக்க வேண்டும்.
நேரிசை வெண்பா:
தாகங் கிராணி சலக்கழிச்சல் காமாலை
ஆகங் குடைபுழுவும் அற்றுப்போம் – மோகமுறுந்
தேவா மிருதமுமாஞ் சீர்மானி டர்தமக்கு
மூவா மருந்தெருமை மோர்.
குணம்:
எருமை மோரினால் தாகம், கிராணி சலக்கழிச்சல் (Irritable bowel syndrome), காமாலை, வயிற்றுக் கிருமி ஆகியவை நீங்கும்.
இதைத் தனியாகக் குடிக்க தாகம் அடங்கும். மோகம் தரும் தேவாமிர்தம் என்றும், மானிடர்க்கு மூவா மருந்தென்றும் சொல்லப்படுகிறது.
இதற்கு சீதள குணமுண்டு. இம்மோரைச் சூடாக்கி அல்லது தாளிதம் செய்து சாதத்துடன் உண்ண மேற்சொல்லப்பட்ட பலன்கள் ஏற்படும்.