வெகுண்டார்முன் எல்லாம் தோன்றாக் கெடும் – நான்மணிக்கடிகை 8
இன்னிசை வெண்பா
கற்றார்முன் தோன்றா கழிவிரக்கங் காதலித்தொன்(று)
உற்றார்முன் தோன்றா உறாமுதல் தெற்றென
அல்ல புரிந்தார்க்(கு) அறந்தோன்றா எல்லாம்
வெகுண்டார்முன் தோன்றாக் கெடும். 8
- நான்மணிக்கடிகை.
பொருளுரை:
இழந்த பொருள்களுக்கு இரங்குதல் கற்றுணர்ந்த பெரியோரிடம் தோன்றாது;
ஊக்கங்கொண்டு ஒரு நன்முயற்சியைத் தொடங்கி ஆற்றுபவரிடம் விரைவிற் கிட்டாமையாலாகிய முயற்சித் துன்பம் தோன்றாது;
தெளிவாய்த் தீயவை செய்தார்க்கு நல்லவை தோன்றமாட்டாது;
எல்லா நன்மைகளும் சினந்து கொள்வாரிடத்தில் தோன்றாவாய்க் கெட்டொழியும்.
கருத்து:
கழிந்துவிட்ட பொருள்களைப் பற்றிய துன்பம் கற்றுத் தெளிந்தாரிடத்தும், முயற்சித் துன்பம் ஊக்கமுடையாரிடத்தும், அறத்தின் உண்மைகள் தீயவை செய்வாரிடத்தும், எல்லா நன்மைகளுஞ் சினந்தாரிடத்துந் தோன்றாது.
விளக்கம்:
அவரவர் உளப் போக்குக்கு அவ்வவை எதிர்மாறாய் நிற்றலின், ‘தோன்றா' வெனப்பட்டது.
முதல் - ஒரு செயலை முடித்தற்கு ஏதுவாய் முதலில் நிகழும் முயற்சிப் பெருமையை யுணர்த்திற்று.
‘தெற்றென' வென்றது, அறிந்துந் தீயவை புரிந்தா ரென்றற்கு.