குலமகட்குத் தெய்வம் கொழுநனே - நீதிநெறி விளக்கம் 27

இன்னிசை வெண்பா

குலமகட்குத் தெய்வம் கொழுநனே; மன்ற
புதல்வர்க்குத் தந்தையுந் தாயும்; - அறவோர்க்(கு)
அடிகளே தெய்வம்; அனைவோர்க்குந் தெய்வம்
இலைமுகப் பைம்பூண் இறை. 27 - நீதிநெறி விளக்கம்

பொருளுரை:

நல்லொழுக்கமுடைய பெண்ணுக்கு அவள் கணவனே தெய்வமாவான்;

புதல்வர்களுக்கு அவர்கள் தாய் தந்தையர்களே தெய்வமாவார்கள்;

நல்லொழுக்கமுடைய மாணவர்களுக்கு அவர்கள் ஆசிரியன்மாரே தெய்வமாவார்;

இவரொழிய மற்றெல்லோருக்கும் இலை நுனிபோன்ற பசும்பொன் நகைகளணிந்த அரசனே தெய்வமாவான்.

விளக்கம்:

கற்புடைய மனைவி இங்குக் குலமகளெனப் பட்டாள். தெய்வம் என்றது, தெய்வம் போலப் பார்க்கத்தக்கவர்கள் என்பதற்கு, தெய்வம் என்பதை இரண்டாம் அடியினுங் கொள்க;

அறவோர் என்றார், மாணவர்கள் மற்றவற்றிற் பற்று வையாது கல்வியிலே கருத்தூன்றித் துறவிகள் போல் நிற்றலின். குலமகள், புதல்வர், அறவோர் என்பவர்கட்கு இன்னின்னார் தெய்வமென்று கூறிவிட்டமையின்,

அவரொழித்து மற்றையோரையே அனைவோர்க்கும் என்றார்.

அவ்வனைவோரென்பார் இல்வாழ்வாரென்க.

இலைமுகப் பைம்பூண் என்பதை வெற்றிலை மூக்குப்போலச் செய்யப்பட்ட நகை என்று கூறுப.

பைம்பொற்பூண் என்று வரற்பாலது பைம்பூண் என்று வந்தது.

கணவன், தாய், தந்தையர், ஆசிரியர், அரசன் என்பார், இறைவன் உயிர்கட்கு எவ்வகையான உதவி செய்கின்றானோ அது போன்ற உதவியையே உடனிருந்து அன்போடு அவ்வப்போதும் தன் மனைவி மாணவர் குடிமக்கள் என்பார்க்குச் செய்தலின், அவரெல்லாம் அவர்கட்குத் தெய்வமாவார் எனப்பட்டார்.

மன்ற - உறுதியாக எனப் பொருளுரைத்து எல்லாவற்றோடுங் கூட்டிக்கொள்க,

கருத்து:

மனைவி கணவனையும், மக்கள் பெற்றோரையும், மாணவர் ஆசிரியரையும், குடிமக்கள் அரசனையும் தெய்வமெனப் போற்றக் கடவர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Dec-19, 11:11 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 95

சிறந்த கட்டுரைகள்

மேலே