ஒரு சொல்
ஒரு சொல்
__________________________________________________ருத்ரா
ஒரு சொல் உதிர்
போதும்.
என் உள்ளே உள்ள
பாலைவனங்கள் எல்லாம்
பச்சை இலைகளின்
குடை கவிக்கும்.
உன் ஒரு சொல்லின்
சொட்டு
உதிர்ந்தால் போதும்
ஏழு கடல்களின் உள்ளம்
இங்கே பொங்கும்.
இதழ் திறந்து உன்
இதயம் திறந்திடு.
இருண்ட கூட்டின்
என் வாசல் திறக்கும்.
உன் ஒரு சொல் போதும்
அன்பே!
இந்த தீக்கனல் காடுகள்
என் மீது
பூக்களின் மழை பெய்யும்.
உன் ஒரு சொல்...
.........
என்னால்
முடிக்க முடியவில்லை.
நான் முடியும் முன்
உன் சொல் உதிர்.
அதில்
எனக்கு ஆயிரம் உயிர்கள்
ஊறும்.
ஏனெனில்
காதலுக்கு உயிரெழுத்து
மட்டுமே உண்டு.
காதலில் உயிர்க்கட்டும்
உன் ஒரு சொல்!
போதும்
இந்த
உலகங்கள் தேவையில்லை.
______________________________________________________