குமரேச சதகம் - தாம் அழியினும் தம் பண்பு அழியாதவை - பாடல் 17

பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

தங்கம்ஆ னதுதழலில் நின்றுருகி மறுகினும்
தன்ஒளி மழுங்கிடாது,
சந்தனக் குறடுதான் மெலிந்துதேய்ந் தாலுமே
தன்மணம் குன்றிடாது,

பொங்கமிகு சங்குசெந் தழலில்வெந் தாலுமே
பொலிவெண்மை குறைவுறாது,
போதவே காய்ந்துநன் பால்குறு கினாலும்
பொருந்துசுவை போய்விடாது,

துங்கமணி சாணையில் தேய்ந்துவிட் டாலும்
துலங்குகுணம் ஒழியாதுபின்
தொன்மைதரு பெரியோர் மடிந்தாலும் அவர்களது
தூயநிறை தவறாகுமோ

மங்கள கல்யாணிகுற மங்கைசுர குஞ்சரியை
மருவுதிண் புயவாசனே
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே. 17

- குருபாததாசர் என்ற முத்துமீனாட்சிக் கவிராயர்

பொருளுரை:

அழகிய நலம்பெற்ற வேடர்குல வள்ளியும் வானவர் குடிவிளங்குந் தெய்வயானையும் தழுவும் வலிமை மிக்க தோள்களை யுடையவனே!, மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு மலைமேவு குமரேசனே!,

நெருப்பிலே பொன்கிடந்து உருகித் துன்புற்றாலும் அதன் ஒளியிலே குறையாது; சந்தனக்கட்டை தேய்ந்து மெலிந்தாலும் அதன் மணத்திலே மாறாது;

உயர்வுபெற்ற சங்கு சிவந்த நெருப்பில் வெந்தாலும் அழகிய வெண்மை விலகாது; நல்ல பால் மிகவும் காய்ந்து குறைந்தாலும் அதனிடமுள்ள இனிமை குறையாது;

உயர்ந்த மாணிக்கம் சாணையிலே தேய்வுற்றாலும் ஒளிமிகும் பண்பு விலகாது; பழைமையான சான்றோர்கள் இறக்க நேர்ந்தாலும் அவர்களது நல்லொழுக்கம் இழிவுற்றுக் கெடுமோ?

அருஞ்சொற்கள்:

திண்மை - உறுதி, தழல் - நெருப்பு, மறுகுதல் - துன்புறுதல், குறடு - கட்டை,
பொங்கம் - உயர்ச்சி, பொலிவு - அழகு, போத - மிக, துங்கம் - உயர்ச்சி, தொன்மை - பழைமை,
மடிந்தாலும் - இறக்க நேர்ந்தாலும்;

‘இறந்தாலும் பொய்தன்னைச் சொல்லவேண்டாம்' என்பதுபோல. சுரர் - வானவர்.

கருத்து:

பொன்னும் சந்தனக்கட்டையும் சங்கும் பாலும் மணியும் துன்புற்றாலும் தம் பண்பு மாறாதது போலப் பெரியோர்கள் இறக்க நேர்ந்தாலும் ஒழுக்கந் தவறார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Apr-20, 7:36 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 25

மேலே