598 ஓதியவழி நில்லார் ஊதியம் எய்தார் - பொய்க்குருவின் தன்மை 2
கலி விருத்தம்
(மா விளம் விளம் கூவிளம்)
*முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும்.
விருத்தம் நேரசையில் தொடங்கினால் அடிக்கு 11 எழுத்து;
நிரையில் தொடங்கினால் 12. எழுத்தெண்ணிக்கை தானே வரும்!
விளத்தின் இடத்தில் மாங்காய் வருவதும் உண்டு.
(முதலிரண்டு சீர்களுக்கிடையில் 'மாவைத் தொடர்ந்து நேர்' என்ற நேரொன்று ஆசிரியத்தளை அமையும்; மற்ற இடங்களில் வெண்டளை அமையும்.)
உணர்ந்துந் தாம்பிறர்க் கோதியு நல்வழி
தணர்ந்து ளோர்சுடர் தாங்கித்தன் மேலிருள்
புணர்ந்த தம்பங்கொல் புத்தகந் தாங்கிய
கொணர்ந்த சட்டங்கொல் பால்கொள்க லங்கொலோ. 2
- பொய்க்குருவின் தன்மை
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
நன்னெறி யொழுகாது தீநெறியொழுகும் இழிந்த குரவர்கள், நூல்வழியாக நன்மைகளை யுணர்ந்தும், அவற்றைப் பிறர்க்கு எடுத்துரைத்தும் தாம் அவ்வழி யொழுகாது விலகி நடப்பர்.
அவர், தம் தலைமேல் விளக்கொளியைத் தாங்கி யாவர்க்கும் இருளையகற்றிப் பொருளை விளக்கும் விளக்குத்தூண், தன்மாட்டு இருளையே வைத்துக்கொண்டிருக்கிறது.
அதுபோலவும், புத்தகத்தைச் சுமந்துகொண்டு வரும் கவளிகையாகிய புத்தகப் பலகை. அப்புத்தகத்தின் உள்ளுறையை ஒருசிறிதும் உணராமலிருக்கிறது.
அதுபோலவும், பால் வைத்திருக்கும் நன்கலம், அப் பாற்சுவையை யுணராது. அதுபோலவும் பயனில் பதடியராவர்.
தணர்ந்து-தணந்து; நீங்கி; விலகி. தம்பம்-தூண். சட்டம்-பலகை.