விடியும் வரை காத்திரு

வானம் வசப்படும்

ஓ இளைஞனே!
சோம்பலில் தேம்பும்போது
தொடும் வானும் தூரம் தான்
பட்சிக்கும்!

உன் இலக்குகளின்
இசைவரியை
பதிவு செய்யட்டும்
உன் ஒவ்வொரு அணுவும்!

தன்னம்பிக்கை(கை)யில்
தூரிகை கொடு
உன் இலட்சியங்களின்
வண்ணங்களை
தெரிவு செய்யட்டும்!

தோல்விகளின் ஊத்தங்களில் தான்
பிஞ்சில் வெம்பாது
கனிகின்றன
வெற்றியின் கனிகள்!

அவமானங்களின்
செரிமானங்களால்
உரமிட்டு உயிர்ப்பூட்டி
மறு சுழற்சி செய்
மட்கிப் போன மனதை!

பொறுமையின் மூட்டைகளை
அடுக்கி வை!
மனப்புயல் இமைக்கரை கடந்து
கன்னத்தை
கண்ணீரால் விழுங்கும் போது
அமைதியின் ஆணி வேர்கள்
ஆட்டம் காணாது!

விடியும் ஓர் நாள்
கால ஏட்டில்
ஓர் வெள்ளைக் காகிதமாய்!
அது உன் வரலாற்றால்
தனை அலங்கரித்துக் கொள்ளும்!

சு.உமாதேவி

எழுதியவர் : சு. உமாதேவி (7-Jul-20, 11:26 pm)
சேர்த்தது : S UMADEVI
பார்வை : 210

மேலே