புகுந்த வீட்டில் புயல் ---பாடல்---

மெட்டு : கள்ளிக் காட்டில் பெறந்த தாயே

பல்லவி :

அம்மன் தேரை அசைத்துப் பார்த்தே - இந்த
அல்லிப் பூவை உதிர்த்த காற்றே...
அய்யன் தேரை அழிக்கப் பார்த்தே - இந்த
அன்பின் வாழ்வைச் சிதைத்த காற்றே...

பூகம்பம் நடத்தும் குடும்பத்தில் - உள்ளம்
புதைகின்ற வலிகொண்டேன்...
பூ ஒன்றை வளர்த்த குடும்பத்தில் - இன்பம்
தொலைகின்ற நிலைகண்டேன்...

புகுந்த வீடுதான் நரகமே - நான்
துள்ளித் திரிந்த கூடு சொர்க்கமே... (2)

அம்மன் தேரை...

சரணம் 1 :

கணவன் பார்வையில் நெருப்பிருக்கும்
அத்தை வார்த்தையில் செருப்பிருக்கும்
நாள்தோறும் என்மனம் மருந்தெடுக்கும்
சோகஞ்சுட்டு...

வீடு மொத்தம் கூட்டிப் பெருக்கிடுவேன்
வாயும் வயிறும் தினம் சுருக்கிடுவேன்
என்ன செய்தும் என்ன மிச்சம் நொருங்கிடுவேன்
காயம்பட்டு...

வெறுக்கும் போதும் அன்பைக் கொடுக்கிறேன்
ஒரு தனிமைச் சிறையில்தான் தவிக்கிறேன்
சாணம் தெளித்து தான் தொடங்குறேன்
நடுச்சாமம் வந்தப் பின்பு உறங்குறேன்...

அம்மன் தேரை...

சரணம் 2 :

அன்னை மடிதூங்க ஏங்குகிறேன்
தந்தைச் சொல்லில் துன்பம் தாங்குகிறேன்
கோவிலில் வந்து அமைதி தேடுகிறேன்
வாடுகிறேன்...

ஆசை எல்லாம் மனதில் தீக்குளிக்கும்
வானம் போல கண்கள் நீர்தெளிக்கும்
நீருக்குள் நெஞ்சம் துடிதுடிக்கும்
வாழ்வும் துருப்பிடிக்கும்...

என்ன வாழ்க்கை என்று வெறுக்கையில்
உயிர் என்னைத் தாண்டிச் செல்ல விரும்புதே
தாயின் வீட்டை நோக்கி நடக்கையில்
என் தொப்புள் கொடியில் பூக்கள் அரும்புதே...

அம்மன் தேரை...
(14/04/2020)

...இதயம் விஜய்...
..ஆம்பலாப்பட்டு..

எழுதியவர் : இதயம் விஜய் (15-Jul-20, 9:35 am)
பார்வை : 514

மேலே