59 இலியிச்

என்ன விஷயம் லிப்னி?

வாருங்கள்... நாம் அந்த குடிசைக்குள் போவோம். ஒரு பாட்டனாருக்கு இலியிச் பற்றி சில விஷயங்கள் நன்கு தெரிந்து இருக்கிறது என்றார்.

நாங்கள் மூவரும் சென்றோம்.

வெளிறிய நிறத்தில் சுருக்கமான உடம்போடு அந்த கிழவனார் இருந்தார். அவருடைய கசங்கிய உடைகள் தாவர நார்களில் இருந்து செய்யப்பட்டு இருந்தது. முகம் சற்று நீளமாக ஒல்லியாக இருந்தது. அவர் எங்களை கூர்மையாக பார்த்தார்.

இங்கு என்ன செய்கிறார் இவர்? ஒருவேளை வன முனிவராக இருக்குமோ என்ற எண்ணம் வந்தது.

லிப்னி அவருடன் பேசிய பாஷை எங்களுக்கு புரியவில்லை. லிப்னி அவரோடு பேசிக்கொண்டு இருந்தார்.

எங்களை பார்த்து இலியிச் படம் வரைவாரா என்று கேட்டார். நான், ஆம் என்றதும் லிப்னி மீண்டும் கிழவனாரோடு பேச சென்று விட்டார்.

நேரம் துளிர்த்து துளிர்த்து மடிந்தது.

பின்னர் நளினி தன்னிடம் இருந்த சில பிஸ்கெட் பாக்கெட்டுகளை எடுத்து அவருக்கு முன்பாக நீட்டினாள். அவர் அதை இங்கிதமாக மறுத்து விட்டார்.

நளினியின் காலை தொட்டு தன் பக்கம் இழுத்து வைத்து ஒரு பச்சை நிற திரவத்தை கால் கட்டை விரல் நகத்தின் மேல் அவர் வைத்ததும் அது அழகாக காய்ந்து போனது.

நாங்கள் லிப்னி அவருடன் பேசும் வரை பொறுமையாக இருந்தோம்.

பின் லிப்னி எங்களை நோக்கி இலியிச் இங்கு வந்திருந்து சில நாட்களிந்த பெரியவரோடு தங்கி இருந்தார் என்றும் அவர் மிகவும் எளிமையானவர் என்றும் கூறுகிறார்.
மேலும் இலியிச் இங்கிருந்து கிட்டத்தட்ட அறுபது மைல்களுக்கு அப்பால் இருக்கும் ஒரு கிராமத்தில் சில மாதங்கள் இருந்தார் என்கிறார்.

ஆனால் அந்த கிராமம் சற்று வினோதமான மக்கள் கொண்ட கிராமம். ஒரு வரியில் கூறுவதானால் நான் அது இந்தியாவே அல்ல என்பேன் என்று லிப்னி கூறியபோது எங்களுக்கும் ஆச்சரியம் உருவானது.

இலியிச் அங்கு தங்கி எழுதி இருக்க வாய்ப்பு இருக்கலாம் லிப்னி என்றேன்.

மீண்டும் லிப்னி கிழவனாரோடு பேச துவங்கினார்.

அன்று இரவை அங்குதான் கழிக்க வேண்டி இருக்கும் என்று நளினிக்கு சூசகமாக தெரிவித்தேன்.

பெரியவர் சில கிழங்குகளை சுட்டு எங்களுக்கு கொடுத்தார். எண்ணெய் வாசத்துடன் இருந்த அதை நான் அவ்வளவாக உண்ணவில்லை.

லிப்னி அந்த கிராமத்தின் பெயர் தொடொலா என்றும் அந்த மக்கள் சற்று வினோதமானவர்கள் என்றார்.

நடப்பது நடக்கட்டும் லிப்னி. அங்கு செல்லவே விருப்பம் என்றேன்.

நாங்கள் உறங்க ஆரம்பித்தோம். முன் எப்போதும் கேட்காத புதிய ஒலிகள் இரவுக்குள் இருந்தது.

அரைக்கண்ணால் பார்த்தபோது கிழவனார் நன்கு உறங்கி இருந்தார். எல்லோரும் கூட...

நான் தூங்கவில்லை.


==================================
காத்திருப்போம்.....

எழுதியவர் : ஸ்பரிசன் (11-Feb-21, 4:22 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 32

மேலே