கடைசி குயிலொன்றின் பாட்டு

என்னை

அவர்கள் பார்க்கிறார்கள்.

அவர்களில் சிலர் மட்டும்
முறைத்து பார்க்கிறார்கள்.
அவர்களும் பார்க்கிறார்கள்.
அவர்களுக்குள் அவர்கள்
கொஞ்சநேரம் பார்த்துவிட்டு
பின் கண் துடியாது
மீண்டுமென்னை பார்க்கிறார்கள்.


எனக்கோ

யாரை எதற்கு எப்படி
பார்க்க வேண்டுமென தெரியவில்லை.

என் உடலெங்கும்
ஊர்ந்து அலையும்
அச்சிறு எறும்புகளுக்கு
என்னவென்று சொல்ல நான்?

என்னில் அசைகின்ற
அத்துணை நிழல்களும்
தாவர இலைகளின் நிழலென்று
எண்ணி மறுகும்

இச்சிறு
எறும்புகளுக்கு நான் எத்திசை?
நான் பூமியா?
நான் ஆற்றின் கரையா?
நான் இரவும் பகலுமா?
நான் உணவா (அ) நீரா?

எறும்புகள் என் உடலில்
கலைந்து கலைந்து ஓட
ஓராயிரம் மனங்களில்
நான் பயணிக்கிறேன்
ஏதோ ஒரு மனதிலிருந்து.


+++++++++++++++&&&&&&&&+++++++++++

எழுதியவர் : ஸ்பரிசன் (26-Feb-21, 5:33 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 54

மேலே