அவளும் மழையும்

அவளும் மழையும்
***********************

இரவாகிக் கொண்டிருந்த பொழுதொன்றில்,
மழை 'சோ'வென அடித்துக் கொட்டிக்கொண்டிருந்தது. விளக்கொளிகள் பிரகாசமா ஓளிர்ந்துகொண்டிருந்தது. தெரு விளக்குகளின் ஒளி வெள்ளம் மழை வெள்ளத்தில் பட்டு தெறித்து அழகுக்கு அழகு சேர்த்துக் கொண்டிருக்க விரைந்து செல்லும் வாகனங்கள் அவற்றைக் கிழித்துக் கொண்டு சென்று கொண்டிருந்தன.

வீதி அருகே ஒரு காப்பி செண்டர். இரண்டாவது தட்டில் அமர்ந்து கொண்டு கண்ணாடி வழியே மழையை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள் கவியழில். அரை மணி நேரத்துக்கு மேலான காத்திருப்பு. 'இதோ வந்திடுறன்... இப்போ வந்திடுறன்... ' என்ற கார்முகிலனின் வார்த்தைகளுடன் அவனுக்காய் காத்துக்கொண்டிருந்தாள்.

கவியழிலும் கார்முகிலனும் முகநூல் வழியாக சந்தித்துக் கொண்ட நண்பர்கள். கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக நேரில் பார்க்காமல் தொலைபேசி, வாட்சாப் என்று பேசிக்கொண்டு இருந்தவர்கள் இன்று தான் முதன்முறையாக சந்திக்க போகிறார்கள்.

ஏற்கனவே மழைக் குளிர். உள்ளேயும் ஏஸி குளிர். மனதை இதமாக்கும் இளையராஜாவின் பாடல்கள். இதுவும் ஒருவித புது அனுபவத்தைக் கொடுத்துக்கொண்டிருந்தது.

எல்லா மேசையிலும் ஜோடி ஜோடியாய் அமர்ந்திருக்க இவள் மட்டும் தனியாய். உள்ளே வெட்கம் தின்று கொண்டு இருந்தாலும் ஒரு நம்பிக்கையுடனும் படபடப்புடனும் ரசித்துக் கொண்டிருந்தாள்.

"வெயிட்டர்..." - கவியழில் அழைத்தாள்

"சொல்லுங்கம்மா... என்ன வேணும்..." வயதான ஐயா ஒருவர் வந்தார்

"ஒராள் வரோனும்... கொஞ்சம் லேட்டாகும் போல இருக்கு..."

"அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லை மா... தம்பி வரட்டும். அதுவரைக்கும் உங்களுக்கு ஏதும் தரவா..."

"சூடான காஃப்பி ஒன்று கிடைக்குமா..."

"அதுக்கென்னம்மா... இதோ எடுத்துக் கொண்டு வறேன்..."

விரைந்து சென்று காஃப்பி ஒன்றை கொண்டு வந்தார்

குளிருக்கு அந்த சூடு என்றும் அனுபவித்திடாத அனுபவத்தை அவளுக்கு கொடுத்தது.

"ஹாய்..." - குரல் வந்த திசையை திரும்பி பார்த்தாள்.

மழையில் பாதி நனைந்த நிலையில் கார்முகிலன் நின்றுகொண்டிருந்தான்.

"சாறி... சாறி குட்டிமா... ரொம்ப நேரம் வெயிட் பண்ண வைச்சிட்டேன்..." - கார்முகிலன்

"பரவாயில்லை... இண்டைக்கு தான் புரிஞ்சுது காத்திருக்கிறதிலும் ஒரு சுகம் இருக்கு என்று..." - கவியழில்

"நாளைக்கு ஹெச்.ஓ.டி தன்ர பொண்டாட்டி கூட ஊர் சுத்த போறானாம். கடைசி நேரத்தில நாளைய மீட்டிங்கை இண்டைக்கு போட்டு கழுத்தறுத்திட்டான்..." - கார்முகிலன்

"காக்க வைப்பதிலும் சுகம் இருக்கு... உனக்கும் இருந்திச்சா...?" - கவியழில்

"35 நிமிஷத்தில 16 மிஸ்ட்கால்ஸ்... எங்கே கோவிச்சுக்கொண்டு போயிடுவியோ என்ற பயம் தான் இருந்திச்சு..."

"ச்சேச்சே... எங்க.... நீ வராமல் போயிடுவியோ என்று கொஞ்சம் பயமாய் இருந்திச்சு... அந்த வயசான வெயிட்டர் அப்பப்போ பார்த்து சிரிச்சிட்டு போனார்..."

"இத்தனை நாளாய் போன் ல கதைச்சிருக்கிறோம். பட், ஃப்ர்ஸ்ட் மீட்டிங் சாறி கேட்க வேண்டியதாய் போயிட்டு ல.." - கார்முகிலன்

"நீ ஏன் அப்பிடி பார்க்கிறாய். ஒருவர் மீதான ஒருவரது நம்பிக்கை ஜெயிச்சிருக்கு என்று நினை. நீ வந்திடுவாய் என்ற உன் மீதான என் நம்பிக்கையும் நான் போயிடமாட்டேன் என்ற என் மீதான உன் நம்பிக்கையும்..." அழகாய், அமைதியாய் சொன்னாள் கவியழில்

(அந்த வெயிட்டர் பர்த் டே கேக் அண்ட் ரெண்டு கப் கஃப்பி கொண்டு வந்தார்)

"தாங்க்ஸ் அங்கிள்"

"இப்ப தானே டா நீ வந்தாய். இதை எப்போ ஆடர் பண்ணினாய்..."

"அம்மா... இந்த டேபிள் நேற்றே புக் பண்ணியாச்சு. தம்பி வரும் போதே ஓடரும் கொடுத்திட்டார்..." - வயசான வெயிட்டர்

"எனிவே... விஷ் யூ ஏ ஹாப்பி பொறந்த டே வாழ்த்துக்கள் குட்டிம்மா... கேக் கட் பண்ணு"

"டேய்... இரவு 12 மணியில இருந்து இப்போ வரைக்கும் எத்தனை தரம் விஷ் பண்ணிட்டாய் சொல்லு பார்ப்போம்..."

"ம்ம்ம்... இன்னமும் 5 மணித்தியாலயமும் 12 நிமிடங்களும் இருக்கு..."

"அம்மியோ சாமி... இதுவே ரொம்ப ஓவர் டா..."

(கேக் கட் பண்ணி ஒருத்தருக்கு ஒருத்தர் ஊட்டிக் கொண்டனர்)

"அங்கிள்... இந்த கேக்கை சின்ன சின்னதா வெட்டி இங்கே இருக்கிறவங்க எல்லோருக்கும் கொடுத்துவிடுங்கோ..."

சிறிது நேரம் கதைத்துக் கொண்டு இருந்துவிட்டு

"சரி குட்டிம்மா... போவோமா...." - கார்முகிலன்

"மழை இப்பிடி அடிச்சு ஊத்துது... நனைஞ்சு கொண்டு போக சொல்லுறியா...?"

"அதுக்காக மழை விடுறவரைக்கும் இங்கேயே இருக்க சொல்லுறியா... மழையும் நம்ம ஃபிரண்ட் தான்... "

அவள் சிரித்துக் கொண்டே மழையை பார்த்தாள்

"ஹேய்... நமக்கும் மழைக்கும் நிறைய சம்பந்தம் இருக்கு. தெரியுமா உனக்கு..." - கவியழில் தான் கேட்டாள்

"ம்ம்ம்ம்... நாம கதைக்க தொடங்கிதுக்கு பிறகு வந்த எல்லா பிறந்த நாள் அன்னைக்கும் மழை பெய்திருக்கு..." - கார்முகிலன்

"இது மழை காலம் தானே டா..."

"அப்போ நேற்று, முந்தாநாள் மழை பெய்திச்சா..."

"ம்ம்ம்.... ஏதோ இருக்கு தான். நாம முதன் முதலாக பேஸ்புக்கில் கதைக்க தொடங்கினதும் நான் மழைக்கு எழுதின கவிதை மூலம் தான்..." - கவியழில்

"அட... ஆமால..."

"முதன்முதலா நாம தொலைபேசியில் கதைச்ச அண்டைக்கும் மழை தான். இடி, மின்னலால சரியாக கதைக்க முடியாமல் பாதிலயே வைச்சிட்டோம்... ஞாபகம் இருக்கா..."

"ம்ம்ம்.... ஞாபகம் இருக்கு..."

"இண்டைக்கும் மழை தான்... ஏதோ ஒரு ஜென்ம பந்தம் இருக்கும் போல..." - கவியழில்

மழை சற்று குறைந்திருந்தது. இருவரும் ஆளுக்கொரு குடையை பிடித்துக் கொண்டு வீதியில் இறங்கினர். வீதியில் சன நடமாட்டம் முற்றாக குறைந்திருந்தது.

"என்ன முகில்... மெளனமா வாறாய்..."

"இல்லை... சும்மா தான்..." - கார்முகிலன்

"பரவாயில்லை சொல்லு... ஆபிஸ் ல ஏதுமா..." - கவியழில்

"குட்டிமா... உன்கிட்ட ஒரு விசயம் சொல்லனும்... ஆனா..." திக்கு தினறினான்

"அட... சொல்லுப்பா... நான் என்ன கடிச்சு குதறவா போறன்..."

"அது... வந்து.... உனக்கு நல்லாவே என்னை பற்றி தெரியும். லவ்வு பிடிக்காது... பொண்ணுகளை பிடிக்காது... எனக்கு நானே ஒரு வட்டத்தை போட்டுக்கொண்டு வாழுறவன். நீயே எத்தனையோ தடவைகள் என்னை திட்டியிருக்கிறாய்... ஒரு சின்சியர் இல்லாமல் உன்னையே எத்தனையோ தடவை காக்க வைச்சு... அழ வைச்சு... எனக்கே என்னை நினைச்சா கேவலமா இருக்கும்... உனக்கு லவ்வும் வேண்டாம். கலியாணமும் வேண்டாம் என்று என்னை நானே திட்டிப்பேன்... என்னை நானே மாற்றிக்க தினம் தினம் போராடிக் கொண்டு தான் இருக்கிறேன். ஆனால் முடியவில்லை....

ஆனா... இப்போ இந்த அன்பு, பாசம், உரிமை எல்லாமே எனக்கு வேணும் என்று தோனுது... லைவ் டைம் எனக்கு மட்டுமே என்று... ஆனால், அதுக்கெல்லாம் தகுதி இருக்கா என்று தெரியலை... அதேநேரம் ஒரு பொண்ணுக்கு பிடிச்ச மாதிரி இல்லாமல்.... இதையெல்லாம் இழந்திடுவேனோ என்றும் தோனுது... ஆனால், என்னால விட்டுக் கொடுக்கவும் முடியலை... என்னை என்னமோ பண்ணுதடி குட்டிமா... "

"........." - மெளனமாக நடந்து கொண்டிருந்தாள் கவியழில்.

"ஐ வோண்ட் யூ குட்டிமா" - திடீரென கையில் இருந்த குடையை வீதியில் வைத்து விட்டு நனைந்து கொண்டே நடு வீதியில் முட்டியில் அமர்ந்து ரோஜா பூச்செண்ட் ஒன்றை அவள் முன்னே நீட்டினான்.

முகிலனின் திடீர் நடவடிக்கையில் திகைத்துப் போய் யாரேனும் நம்மளை பார்க்கிறார்களா என சுற்றும் முற்றும் பார்த்தவள் சற்றே நிதானித்துக் கொண்டு அவன் கொடுத்த ரோஜா பூச்செண்டை வாங்கிக் கொண்டு அவனுக்கும் சேர்த்து குடையை பிடித்தாள்.

- பெல்ழி

எழுதியவர் : பெல்ழி (9-Jul-21, 3:35 pm)
சேர்த்தது : மணிவாசன் வாசன்
Tanglish : avalum mazhaiyum
பார்வை : 296

மேலே