திரிகடுகம் போலும் மருந்து மூன்று – திரிகடுகம் 1
இன்னிசை வெண்பா
அருந்ததிக் கற்பினார் தோளும் திருந்திய
தொல்குடியின் மாண்டார் தொடர்ச்சியும் - சொல்லின்
அரில்அகற்றுங் கேள்வியார் நட்புமிம் மூன்றும்
திரிகடுகம் போலும் மருந்து. 1
- திரிகடுகம்
பொருளுரை:
அருந்ததி போலும் கற்பையுடைய மகளிரின் தோள்களும், குற்றமற்ற பழைமையான குடிப்பிறப்பில் தோன்றி மாட்சிமை அடைந்தவரோடு கொள்ளும் நட்பும், சொற்களினிடத்தே குற்றங்களை நீக்கவல்ல கேள்வியை யுடையவரோடு செய்யப்படும் நட்பும் ஆகிய இந்த மூன்றும் ஒருவனுக்கு திரிகடுகம் போன்றுள்ள மருந்துகளாம்.
திரிகடுகம்: the three special stimulants, சுக்கு – dried ginger, மிளகு - pepper & திப்பிலி – long pepper, அருந்ததி – a small star, considered as the chaste wife of Saint Vashista.
கருத்துரை:
நற்குண நற்செய்கைகளுள்ள பெண்ணை மணஞ்செய்திருப்பது முதலிய மூன்றும் இம்மை மறுமைகளில் நேரிடும் துன்பங்களைத் தீர்த்து இன்பங் கொடுப்பவாதலால் நோயைப் போக்கி நலத்தைக் கொடுக்கும் சுக்கு திப்பிலி மிளகுகளாகிய மருந்து போலும் எனப்படுகிறது.
"திரிகடுகம் சுக்குத் திப்பிலி மிளகு" (பிங்கலநிகண்டு சூ.352.) சுக்கு முதலிய மூன்றும் போல் தோள் முதலிய மூன்றும் இல்வாழ்வானொருவனுக்குத் துன்பம் அகற்றி இன்பம் விளைத்தலால், அவை உவமைகளாயின.
இம்முதற் பாட்டிற் கூறப்பட்ட ‘திரிகடுகம்' என்ற சொல்லே சிறப்பு நோக்கி இந் நூலுக்குப் பெயராகக் கொள்ளப்பட்டது.
அருந்ததி - எழு முனிவருள் ஒருவராகிய வசிட்டர் மனைவி. கற்புடையார் பலரினும் இவர்க்கு உயர்வு எங்ஙனம் என்னில் விண்மீன் நிலையிலும், எழுமுனி வட்டம் என்ற நாட்கூட்டம் முன்பக்கம் அடியில் இருக்கும் மூன்று விண்மீன்களில் நடுவிலிருப்பதான வசிட்டமீனோடு துணையாய் மின்னுவது.
அரில் - ஐயந்திரிபுகள், சொல்லின் அரில் அகற்றுங் கேள்வியார் என்ற தொடரிலுள்ள பொருளோடு ‘நுணங்கிய கேள்விய ரல்லார்' என்ற குறளில் கருத்தை ஒப்பு நோக்குக.