கருவிழி காண்பதெல்லாம்

உருளும் சக்கரமாய் உயிரது உடலுள்
பொருளது அறியாமல் நாளும் நகர்கையில்
அருமை உணராமல் அல்பகல் உறக்கம்
கருவிழி காண்பதெல்லாம் சொந்தமென மனமும்

கிடைப்பதை எடுத்தும் மறைத்தே வைத்து
படித்ததை எல்லாம் உடைப்பில் போட்டே
நடிப்பது மட்டும் நலந்தரும் என்றெண்ணி
இடியென சிரித்தே எவரையும் ஏமாற்றி

விழிநீர் விடுவோர் இடத்தில் இரக்கமின்றி
அழிவே தமக்கு இல்லை இனியென்றே
பழிக்கு அஞ்சாமல் பலவகை தவறுகளை
தழைக்க செய்யும் தரமிக்க செல்வந்தர்

மக்களால் தேர்ந்தெடுக்கும் ஆட்சியில் பதவியை
சிக்கலே இன்றி பணத்தால் வாங்கியே
சொக்கத் தங்கமென சூளுரை பேசியே
மக்களை ஏமாற்றி பொதுசொத்தை திருடியே

வாழும் மனிதருக்கு தலைவர் என்றும்
வாழ்க்கை முறைக்கு தியாகம் என்றும்
ஆழ்ந்த கருத்தால் அழைக்கும் தொண்டருக்கு
தாழ்ந்த நிலையினை அறிவிப்பவர் யாரோ.
----- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (28-Sep-21, 7:34 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 73

மேலே