தந்தை மக்களைச் செந்நெறி மேல் நிற்பச் செயல் வேண்டும் - பழமொழி நானூறு 8

நேரிசை வெண்பா

எந்நெறி யானும் இறைவன்றன் மக்களைச்
செந்நெறிமேல் நிற்பச் செயல்வேண்டும் - அந்நெறி
மான்சேர்ந்த நோக்கினாய் ஆங்க வணங்காகும்
தான்செய்த பாவை தனக்கு. 8 - பழமொழி நானூறு

பொருளுரை:

மானை யொத்த பார்வையை உடைய பெண்ணே!

தந்தை தன் குழந்தைகளை எந்த வழிமுறையிலே ஆனாலும் செம்மையாகிய நல்ல வழியில் நிற்குமாறு அறிவுறுத்துதல் வேண்டும்.

அத்தகைய செந்நெறியில் நிற்பச்செய்யும் செயல் தன்னால் நிலை நிறுத்தப்பட்ட படிவம் தனக்கே தெய்வமாகும் தகுதியைப் போலவாம்.

கருத்து:

மக்களுக்கு அறிவு ஊட்டுதல் தந்தை கடனாம்.

விளக்கம்:

தன்னால் நிலைநிறுத்தப்பட்ட பாவை தனக்குத் தெய்வமாய் அமைதல்போல, கற்ற செந்நெறியில் நிற்பான் தந்தையால் போற்றப்படுவான்.

'அணங்காகும் தான் செய்த பாவை தனக்கு' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Oct-21, 9:51 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 156

சிறந்த கட்டுரைகள்

மேலே