காலம்
காலம் ஓர் நாள் என்னைக் கடந்து
செல்கையில் எதிர்பாராமல்
என் கைகளில்
அகப்பட்டு விட்டது...
பல காலமாக தேக்கி வைத்த
கேள்விக்கணைகளை
தொடுக்கலானேன்
ஒவ்வொன்றாக.,
ஏன் உனக்கு இத்தனை வேகம்?
என் விருப்பம் ஏதுமில்லாமல்
ஏன் என்னைத் துரத்திக்
கொண்டே வருகிறாய்..
சில நேரங்களில்,
என்னையும் தாண்டிச் சென்று
சிரிக்கிறாய்
என் நாட்களை மிச்சமில்லாமல்
ரசிக்க விரும்புகிறேன் நான்
ஆனால்
நீ என்னை அவசர அவசரமாய்
உடன் இழுத்துச் செல்கிறாய்..
நான் வர மறுத்தால்
திரைச்சீலைகளைப் பூட்டி
அந்த நாளையே முடித்து
வைக்கிறாய்...
வெறும் உறங்கலும் விழித்தலும் எனக்குப் போதவில்லை.,
அர்த்தமுள்ளதாக என் நாட்களை நகர்த்த விரும்புகிறேன்..
என்னை என் வழியில் வாழ விட மாட்டாயா?
என என்னவெல்லாமோ சொல்லி
கூச்சலிட்டேன்..
மெளனமாய் அனைத்தையும்
கேட்டுக் கொண்டிருந்த காலம்
குறுநகையுடன்
மீண்டும்
என்னைக் கடந்து சென்றது
எதுவும் கூறாமல் ...
அன்புடன் ஆர்கே ..