பிறந்தும் பிறவாதவர் மூவர் - திரிகடுகம் 92
இன்னிசை வெண்பா
விழுத்திணைத் தோன்றா தவனும் எழுத்தினை
ஒன்றும் உணராத ஏழையும் - என்றும்
இறந்துரை காமுறு வானுமிம் மூவர்
பிறந்தும் பிறவா தவர் 92
- திரிகடுகம்
பொருளுரை:
அற ஒழுக்கங்களைப் பெறுதற்குரிய சிறந்த குலத்தில் பிறவாதவனும், இலக்கண நூலை எவ்வளவு சிறிதும் அறிந்து கொள்ளாத பேதையும், எப்பொழுதும் முறைதப்பி சொற்களைப் பேச விரும்புகின்றவனும் ஆகிய இம்மூவரும் மக்கட் பிறப்பிற் பிறந்தும் (பிறப்பின் பயனையடையாமையால்) பிறவாதவராவார்.
கருத்துரை:
நற்குலத்திற் பிறவாதவனும், படிப்பில்லாதவனும் மரியாதை தப்பிப் பேச முயல்கின்றவனும், மனிதர் என்று சொல்லத் தகாதவர்.
விழுத்திணை - விழுப்பமாகிய திணை:
எழுத்து - தன்னை யுணர்த்தும் இலக்கண நூலுக்கு ஆதலால் காரியவாகுபெயர்.