யாவரையும் வஞ்சித்தோம் என்று மகிழன்மின் – நீதிநெறி விளக்கம் 94
நேரிசை வெண்பா
வஞ்சித்(து) ஒழுகும் மதியிலிகாள்! யாவரையும்
வஞ்சித்தோம் என்று மகிழன்மின்! - வஞ்சித்த
எங்கும் உளனொருவன் காணுங்கொல் என்றஞ்சி
அங்கம் குலைவ(து) அறிவு 94
- நீதிநெறி விளக்கம்
பொருளுரை:
பொய்க்கோலம் பூண்டு பிறரை வஞ்சித்து நடக்கும் மதியீனர்களே!
எல்லாரையும் நாம் வஞ்சித்து விட்டோம் என்று நீங்கள் மகிழ்ச்சி கொள்ளாதீர்கள்.
வஞ்சித்தவற்றை எங்கும் நிறைந்த இறைவன் காண்கின்றானென்று நடுங்கி உங்கள் உடல் பதறுவதே உங்களுக்கு அறிவுடைமையாகும்.
விளக்கம்:
இறைவன் 'எங்குமிருக்கிறார், எல்லாம் அறிவார்' என்னும் உண்மையை மக்கள் அறியாமை காரணமாக 'மதியிலிகாள்' என்றார்.
மனிதர் தண்டிப்பதிலும் இறைவன் தண்டனை கொடிதாகலின், ‘அங்கங் குலைவதறிவு’ என்றார்.
மதியாவது பொருளின் இயல்பை ஆராய்ந்து அளந்தறிவது.
கருத்து:
எங்கும் நிறைந்த இறைவன் அறியாத செயல் யாதுமில்லை யாகையால், பிறரை வஞ்சித்தோம் என்று மகிழ வேண்டாம்.