தெரிந்தாள்வான் உண்ணாட்டம் இன்மையும் இல் – நான்மணிக்கடிகை 94
இன்னிசை வெண்பா
ஆசாரம் என்பது கல்வி அறஞ்சேர்ந்த
போகம் உடைமை பொருளாட்சி யார்கண்ணுங்
கண்ணோட்டம் இன்மை முறைமை தெரிந்தாள்வான்
உண்ணாட்டம் இன்மையும் இல் 94
- நான்மணிக்கடிகை
பொருளுரை:
நல்லொழுக்கம் என்பது கல்வியறிவின் பயனாகும்; அறவினைகளோடு சேர்ந்த இன்பநுகர்ச்சி செல்வத்தைக் கையாளுதலின் பயனாகும்; யாரிடத்திலும் கண்ணோட்டம் இல்லாமை நடுநிலையாக ஆளும் முறைமையாம்; பிறரோடு ஆராய்ந்து அரசாளுபவன் தன்னுள்ளத்தில் ஆராயாமையும் இல்லை.
கருத்து:
நல்லொழுக்கமென்பது கல்வியின் பயன்; அறஞ்செய்தலோடு இன்பத்தை நுகர்தலென்பது செல்வத்தை முறையாக ஆளுதலின் பயன்; யாரிடத்தினுங் கண்ணோட்டமில்லாமை நடுவு நிலையோடு அரசாளும் முறையாம்; தன்னுளத்தேயுந் தனியாக ஆராய்வோன் தெரிந்து அரசாளும் இயல்பினன்.
விளக்கவுரை:
தெரிந்தாள்வானென்றது, அமைச்சர் முதலாயினாரோடுந் தெரிந்தாளுதல்.
உள்நாட்டம் - தனக்குள் ஆராய்ச்சி;
அரசன் வெறுங் கேள்வியறிவினானேயே செய்வானல்லன், அதனைத் தன்னுள்ளும் வைத்துத் தனியே ஆராய்ந்துஞ் செய்வான்.