எங்கும் இசையாய்
எங்கும் இசையாய்..!
ஆவேசமாய் வீசிய
காற்று
மூங்கில் குழலுக்குள்
நுழைந்த பின்
துளையின் வழியாய்
வெளியில் வந்து
இசையாய் காதை
வருடுகிறது
பக்கவாத்தியமாய்
நானிருக்கிறேன்
குளத்து நீரின்
அலைகள்
கரையில் மோதும்
சலக்.சலக்..
தாள லயத்துடன்
வாய்ப்பாட்டாய்
குயில் தன் குரலால்
இசையை
இசைத்து
விடியலை அறிவித்து
ஒற்றை ஆளாய்
ஓங்கி ஒலிக்கும்
சேவலின் சத்தம்
ஏழு கட்டையோ
எட்டு கட்டையோ?
இத்தனைக்கும்
சுருதியாய்
எங்கோ கேட்கும்
குழந்தையின்
அழு குரல்
எல்லாம்
எனக்குள் இசையாய்