செயலற்றார்க்குச் செய்யும் அறமே சிறப்பானதாம் – அறநெறிச்சாரம் 167
நேரிசை வெண்பா
அட்டுண்டு வாழ்வார்க்(கு) அதிதிகள் எஞ்ஞான்றும்
அட்டுண்ணா மாட்சி உடையவர் - அட்டுண்டு
வாழ்வார்க்கு வாழ்வார் அதிதிகள் என்றுரைத்தல்
வீழ்வார்க்கு வீழ்வார் துணை 167
- அறநெறிச்சாரம்
பொருளுரை:
சமைத்து உண்டு வாழ்கின்ற இல்லறத்தார்க்கு விருந்தினராவார் எக்காலத்தும் சமைத்து உண்ணாத பெருமையினையுடைய துறவறத்தினரே யாவர்;
சமைத்து உண்டு வாழும் இல்லறத்தாருக்கு அவ்வாறு வாழும் இல்லறத்தார் விருந்தினராவர் என்று சொல்லுதல் மலையுச்சியினின்றும் நிலமிசை வீழ்வார்க்கு அங்ஙனம் வீழா நின்றவர் துணையாவரென்று கருதுதல் போலாம்.
குறிப்பு:
அட்டுண்ணா மாட்சி – சமைத்தற்கு இயலாநிலை எனினுமாம்.