உணர்வுகள் உறங்குவதில்லை

உணர்வுகள் உறங்குவதில்லை
************* ********************
குழிதனைப் பறித்திடுங் குறியுடன் திரிபவர்,
பழியினைத் திணித்திடும் பழகிய உறவினர்,
இழிவென ஒதுக்கிடும் இடரினைக் கொடுத்தவர்
விழிகளில் படுகையில் விழித்திடும் உணர்வுகள்.
*
கொடுமைகள் புரிகிற கொடியவர் இடைதனில்
உடுத்திடுந் துணியினை உருவிட வருகையில்
தடுத்திடுங் கரங்களின் தனித்துவ உணர்வுகள்
அடுத்தவர் உனக்கென அளிப்பது மில்லையே
*
உரிமையின் கழுத்தினை உரமொடு பகைவரும்
நெரித்திடும் பொழுதினில் நிமிர்ந்திடும் உணர்வுகள்
சரித்திரம் படைத்திடச் சமரிடும் களத்தினில்
எரிகிற நெருப்பென எழுவது இயற்கையே!
*
அடிமையின் விலங்குகள் அறுபடும் திமிருடன்
துடிக்கிற உயிரினில் துயில்கிற எரிமலை
வெடித்திடக் கனன்றிடும் விடுதலைக் குமுறலை
இடியென உணர்த்திட இருதயம் மறுக்குமோ?
*
வறியவர் பெருகிட வறுமையை விதைத்தவர்
சிறியவர் மனத்திலும் செழுமையைச் சிதைத்தவர்
நெறிமுறை தவறியும் நிலவென சொலிக்கையில்
உறங்கிடும் உணர்வுகள் உலகினில் இல்லையே
*
மெய்யன் நடராஜ்.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (5-Oct-22, 2:22 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 217

மேலே