யாதுங் கொடாஅ ரெனினும் உடையாரை விடாஅர் உலகத்தவர் – நாலடியார் 337

நேரிசை வெண்பா

ஆகா தெனினும் அகத்துநெய் யுண்டாகின்
போகா(து) எறும்பு புறஞ்சுற்றும்; - யாதுங்
கொடாஅ ரெனினும் உடையாரைப் பற்றி
விடாஅர் உலகத் தவர். 337

- பேதைமை, நாலடியார்

பொருளுரை:

தமக்கு உண்ண வாய்க்காதெனினும் குடத்தினுள் நெய் இருக்குமாகில் எறும்புகள் போகாமல் அக் குடத்தைச் சூழச் சுற்றிக் கொண்டிருக்கும்;

அதுபோல, ஒன்றும் உதவமாட்டா ரென்றாலும் பொருள் உடையோரைச் சூழ்ந்து கொண்டு பேதைமாக்கள் விடமாட்டார்கள்.

கருத்து:

பேதைமை யென்பது, அறியாமையும் வீண்முயற்சியும் உடையது.

விளக்கம்:

இஃது எடுத்துக்காட் டுவமை. உடையார் என்றது பொருளுடையாரை;

உலகத்தவர் - பேதையர். முடிவறியாது வீண்முயற்சி செய்யும் பேதைமையின் பெற்றி இதன்கண் நுவலப்பட்டது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-Dec-22, 1:35 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 44

சிறந்த கட்டுரைகள்

மேலே