யாதுங் கொடாஅ ரெனினும் உடையாரை விடாஅர் உலகத்தவர் – நாலடியார் 337
நேரிசை வெண்பா
ஆகா தெனினும் அகத்துநெய் யுண்டாகின்
போகா(து) எறும்பு புறஞ்சுற்றும்; - யாதுங்
கொடாஅ ரெனினும் உடையாரைப் பற்றி
விடாஅர் உலகத் தவர். 337
- பேதைமை, நாலடியார்
பொருளுரை:
தமக்கு உண்ண வாய்க்காதெனினும் குடத்தினுள் நெய் இருக்குமாகில் எறும்புகள் போகாமல் அக் குடத்தைச் சூழச் சுற்றிக் கொண்டிருக்கும்;
அதுபோல, ஒன்றும் உதவமாட்டா ரென்றாலும் பொருள் உடையோரைச் சூழ்ந்து கொண்டு பேதைமாக்கள் விடமாட்டார்கள்.
கருத்து:
பேதைமை யென்பது, அறியாமையும் வீண்முயற்சியும் உடையது.
விளக்கம்:
இஃது எடுத்துக்காட் டுவமை. உடையார் என்றது பொருளுடையாரை;
உலகத்தவர் - பேதையர். முடிவறியாது வீண்முயற்சி செய்யும் பேதைமையின் பெற்றி இதன்கண் நுவலப்பட்டது.